Wednesday, May 5, 2021

திருச்சியில் தீ விபத்து; ஒரு கடை முற்றிலும் எரிந்து நாசம்- 2 கடைகளில் சேதம்

 திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள வாகன உதிரிபாக விற்பனைக் கடையில், இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தக் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், அந்தக் கடை அருகே இருந்த மேலும் 2 கடைகளிலும் சேதம் ஏற்பட்டது.

திருச்சி ஒத்தக்கடை பகுதியில் பாரதிதாசன் சாலையில் வாகன உதிரிபாக விற்பனைக் கடை உள்ளது. கார்களுக்கான துணைக் கருவிகள் விற்கும் இந்தக் கடையில் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் கரும் புகை வெளியேறியது.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திருச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மளமளவெனத் தீ கடை முழுவதும் பரவிவிட்டது. மேலும், அருகில் உள்ள பேக்கரி, ஆட்டோமொபைல் கடையிலும் தீப்பற்றியது. இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதியே கரும் புகை மண்டலமாக மாறியது.

தகவலறிந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், போராடித் தீயை அணைத்தனர். தீ விபத்தில் வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேலும், பேக்கரி மற்றும் ஆட்டோமொபைல் கடைகளிலும் தீ விபத்தால் சேதம் ஏற்பட்டது.

மின்கசிவால் இந்தத் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




0 comments:

Post a Comment