Tuesday, May 31, 2011

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! All Hindus are not Terrorists, All Terrorists are not Hindus but All Terrorists are RSS!


சுவாமி அசீமானந்தாரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா ஆடுகளும் போய் கடைசியாக ஆட்டுச் சட்டை போட்ட ஓநாய் மட்டுமே மிஞ்சியது. இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்ட மேய்ப்பன் அதை மட்டுமாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கையில் எடுத்தானாம். அப்போது பார்த்து சட்டை நழுவிக் கீழே விழுந்து உள்ளே பதுங்கியிருந்த ஓநாய் அம்பலப்பட்டதாம்.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! அசீமானாந்தாவின் ஆதாரம் !!
மேலே சொன்ன அம்புலிமாமாக் கதையின் வில்லனான ஓநாயின் இருபத்தோராம் நூற்றாண்டுப்  பதிப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதில் ஒரு சிறப்பான விசயமென்னவென்றால்,  ஆர்.எஸ்.எஸ் ஓநாய் எந்தக் காலத்திலும் மனிதச் சட்டை எதையும் அணிந்து கொள்ளவில்லை. அப்பட்டமாகத் தனது இந்து பாசிச செயல் திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டே அப்படியொரு சட்டையை அணிந்து கொண்டிருப்பதாக நம்மிடம் சொல்லியது.
அப்துல் கலீம்
நிரபராதி அப்துல் கலீம்
தாம் தேசபக்தர்கள் என்றும் நல்லவர்களென்றும் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்கள் நம்பினார்களோ இல்லையோ, இந்த அரசும் ஆளும் வர்க்கமும் மனதார நம்பியதோடு பரப்பவும் செய்தார்கள். கூடவே அது காட்டிய திசையிலெல்லாம் பாய்ந்து ஒநாயின் குற்றங்களுக்காக அப்பாவி ஆடுகளைப் பிடித்து ஓநாய் என்று அறிவித்ததோடு சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.
2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகராஷ்ட்டிர மாநிலம் மாலேகான் நகரின் முசுலீம்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்த.
இந்திரேஷ் குமார்
இந்திரேஷ் குமார்
2007ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது.
அதேயாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாக்கிஸ்தான்இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் இரயிலில் குண்டுகள் வெடித்தன. அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் ஷெரீப் தர்காவிலும் குண்டுகள் வெடித்தன. மேலே குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
ஒவ்வொரு முறை குண்டுகள் வெடிக்கும் போதும் பார்ப்பன இந்துமதவெறி தலைக்கேறிய முதலாளித்துவ ஊடகங்கள் எந்த யோசனையுமின்றி இசுலாமிய சமூகத்தை நோக்கி விரலை நீட்டின. அரசு தனது குண்டாந்தடிகளான போலீசு இராணுவத்தைக் கொண்டு இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிவளைத்தது. அதிகாரப்பூர்வமான முறையிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் சட்ட ரீதியிலும் சட்டத்திற்கு விரோதமான முறைகளிலும் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்தரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டன.
2006ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு முதலில் அவசரகதியில் விசாரணை நடத்தி சிமி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. மூன்று பேர் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தனர். தமது சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பழியையும் சுமக்கும் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த முசுலீம்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசு இதன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது.
சுனில் ஜோஷி
சுனில் ஜோஷி2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டார்கள்; 50 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கஸூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த நேரமாகும். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்குள் பார்ப்பன-முதலாளித்துவ ஊடகங்கள் விசாரணையை நடத்தி தீர்ப்பையும் எழுதி விட்டன. ஒட்டு மொத்தமாக பத்திரிகைகள் “இது பாகிஸ்தான் சதி” என்று முன்மொழிய, அமெரிக்காவும் ஆமாம் இது ஹூஜி மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் சதி என்று வழி மொழிந்தது.
தயாநந்த் பாண்டே
தயாநந்த் பாண்டேசம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள்,  முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது.
இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.
சந்தீர்ப டாங்கே
சந்தீர்ப டாங்கேஇந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது.
அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு, அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளைப் பயன்படுத்துவர்.
அசீமானந்தின் இந்த மனமாற்றம் அத்தனை லேசில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
நீதிமன்றக்காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.
ராம்ஜி
ராம்ஜிஇது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப்  பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், இதுமட்டுமே முழுமையான காரணமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு.
ஏனெனில், ஆர். எஸ். எஸ் ஒருவனுக்கு அளிக்கும் ஆரம்ப கட்டப் பயிற்சியே அவனது மனசாட்சியைக் கொன்று விட்டு மாஃபியா கும்பலின் பாணியில் உத்தரவுக்குக் கீழ்படியும் குணத்தை ஏற்படுத்தும் விதமாகத் தான் திட்டமிடப்பட்டுகிறது.  ஆர்.எஸ்.எஸில் புதிதாக சேரும் எவரும் ஷாகா எனப்படும் அவர்களது தினசரி ஒருமணி நேர பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எங்காவது இரகசிய மைதானங்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் குறைவான கோயில்களிலோ கூடும் அவர்கள், முதலில் உடற்பயிற்சி செய்வார்கள். பின்னர் இந்துத்வ பாசிசக்கதைகளை பேசி பயிற்சி கொடுப்பார்கள்.
ஆர்.எஸ்.எஸ்இன் இந்த ஷாகா பயிற்சியானது பொதுவில் கேள்விக்கிடமற்ற கட்டுபாட்டையும், அடிமைத்தன சிந்தனையையும் உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகிறது. மேலும் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்க நடைமுறைகள் இந்த அடிமைத்தன உளவியலை மேலும் வலுவாக்குகிறது.
புரோஹித்
புரோஹித்ஆர். எஸ்.எஸ்ஸின் பயிற்சி முறைகள் நேரடியாக இத்தாலி பாசிஸ்ட் கட்சியிலிருந்து பெறப்பட்டது. இதற்காகவே பி.எஸ். மூஞ்சே எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் 1930களில் இத்தாலிக்குப் பயணித்து முசோலினியைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்த பாசிஸ்டு பயிற்சி முகாம்களை நேரடியாக கவனித்து அதன் அடிப்படையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டது. இந்துத்துவ இயக்கங்களுக்கு பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்ட் கட்சியோடிருந்த தொடர்புகள் பற்றிய மார்ஸியா கஸோலரி என்பரின் விரிவான ஆய்வுகளும் வேறு பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரான கோல்வல்கர் ஹிட்லரை ஆதர்ச நாயகனாகவே வழிபட்டுள்ளார். இது குறித்த அவரது புத்தகம் இன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.
புதிதாக சேரும் சாதாரண உறுப்பினர்களையே இந்தளவுக்குத் தயாரிக்கிறார்கள் எனில் முழு நேர ஊழியர்களான ப்ரச்சாரக்குகளை எந்தளவுக்குத் தீவிரமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருப்பார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். தானும் தனது கூட்டாளிகளும் வைத்த குண்டுகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஏற்படுத்தாத குற்ற உணர்ச்சியை, அதனால் நாடெங்கும் கோடிக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் சுற்றிவளைக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட போது ஏற்படாத குற்ற உணர்ச்சியை, பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் இளைஞனின் நற்செயல்கள் ஏற்படுத்தியதென்று அசீமானந்த் குறிப்பிடுகிறார்.
இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உண்மையை முழுமையாக்கும் முக்கியமான விஷயங்கள் சன்ச்சல்குடா சிறைச்சாலைக்கு வெளியேயும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தற்போது தன்னோடு சதியில் ஈடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்திய பிரதேச மாநில பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர பிரச்சாரக்கான சந்தீப் டாங்கே, மூத்த ப்ரச்சாரக் ராம்ஜி, மேல் மட்ட உறுப்பினர் சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், பிரச்சாரக் தேவேந்திர குப்தா, பிஜேபி எம்.பி யோகி ஆதித்யானந், குஜராத் விவேகானந்த சேவா கேந்திரத்தின் பாரத்பாய், மாநில அமைப்பாளர் டாக்டர் அசோக், இன்னொரு முக்கிய பிரமுகர் லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, சாமியார் தயானந் பாண்டே  ஆகிய பெயர்களை உதிர்த்திருக்கிறார்.
தேவேந்திர குப்தா
தேவேந்திர குப்தா
இதில் ஆர்.எஸ்.எஸ் மத்திய கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமார் தான் குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்ட சதிக்குழுவுக்கு வழிகாட்டும் தலைவராக செயல்பட்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றிய கீழ் மட்ட பயங்கரவாத அலகுகளுக்குத் தொடர்பாளராக சுனில் ஜோஷி இருந்துள்ளார். குறிப்பாக குஜராத் -  பரோடா – பெஸ்ட் பேக்கரி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை சுனில் ஜோஷி தனது பொறுப்பில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர்கள் மாட்டிக் கொண்டால் இந்திரேஷ் குமாரும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களைக் கொன்று போடும் படி அசீமானந்த் ஜோஷியிடம் சொல்லியிருக்கிறார்.
அதற்கு சில தினங்களுக்குள் டிசம்பர் 2007ஆம் ஆண்டு ஜோஷி தனது சக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஆறு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் பெரியளவில் வெடித்து வருவதும், புலனாய்வுத் துறையினரின் விசாரணை ஒரு சங்கிலி போல் கீழ்மட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை நீண்டு வருவதையும் யூகித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது சொந்த உறுப்பினர்களையே கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கக் கூடும்.
அசீமானந்தின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அப்பாவி கலீமின் நன்னடத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி ஒரு காரணமென்றால், ஜோஷியின் படுகொலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மனக்கிலேசமும் முக்கியமான பங்காற்றியிருக்க வேண்டும். அசீமானந்தின் ஷாப்ரிதம் ஆஷ்ரமிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் தொடங்கி இன்னாள் தலைவர் மோகன் பாகவத் வரை பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
தெட்டத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இப்போது கிடைத்துள்ள நிலையிலும் இது வரை இந்த அரசு அதன் மேல் ஒரு சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது பாரதிய ஜனதா ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமென்வெல்த் உள்ளிட்ட ஊழல்களைக் குறித்து எழுப்பும் கூச்சலின் அளவைப் பொருத்து வாயை அடைப்பதற்கு மட்டும் பயன்படும்.
லோகேஷ் சர்மா
லோகேஷ் சர்மாஆனால், இந்த பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை காங்கிரசின் கைகளில் கொடுத்து விட்டு மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் அப்பாவி ஆடுகளின் வெகுளித்தனத்திற்கு ஒப்பானதாயிருக்கும். அந்த மந்தையின் மேப்பன் வேண்டுமானால் ஓநாய் புகுந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூடனாயிருக்கலாம் – ஆனால், காங்கிரசு அப்பாவியும் அல்ல மூடனும் அல்ல. தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் தனது லட்சியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் வளங்களைத் திறந்து விடும் நடைமுறைக்கும் பாரதிய ஜனதாவாவும் வெகுவாக உதவுகிறதுஎன்பதால் பார்ப்பன பயங்கரவாதிகளின் எந்தச் செயலும் மன்னிக்கப்பட்டு விடும்.
இத்தனை நாட்களாக தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை ஒட்டி பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத், வனவாசி கல்யாண் ஆஷ்ரம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பரிவார அமைப்புகளின் பெயர்கள் அம்பலப்பட்ட போதும், குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொண்டதைப் போல இந்த பெயர்களைத் தனித் தனியே உச்சரித்து வந்தன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால், ஆக்டோபஸின் கரங்கள் தனித்தனியே இயங்கினாலும் அதன் மூளை ஒன்றாக இருப்பதை போல, இந்த அமைப்புகளின் மூளையாகவும், மைய்யமாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
சாதாரணமாக குண்டுவெடிப்புகள் என்றால் உடனே அப்பாவி இசுலாமிய மக்கள் கைது செய்யப்படுவதும், பாக் சதி என்று ஊடகங்கள் கதை பின்னுவதுமான நாட்டில் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகள் இத்தனை ஆதரங்களோடு வெளிப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டுமென்றோ, அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படவேண்டுமென்றோ யாரும் பேசுவதைக்கூட நாம் கேட்க முடிவதில்லை. காரணம் இந்து மதவெறி பயங்கரவாதம் என்பது இந்த நாட்டின் அமைப்பு முறையின் ஆசிர்வாதத்தோடு செயல்படுகிறது என்பதால் அதை எவரும் கண்டு கொள்வதில்லை.
ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்

ஷார்ஜாவில் வெகு சிறப்பாக நடைபெற்ற “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்”

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” என்ற குடும்ப நிகழ்ச்சி 22.04.11 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்குபெற்று பயனடைந்தனர். முன்னதாக, திருமறை வசனங்களை ஓதி சகோ. அப்துல் கஃபூர் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். E.I.F.F.-ன் பணிகள் குறித்த அறிமுகவுரையை அதன் பொருளாளர் சகோ. அஷ்ரஃப் அலீ அவர்கள் நிகழ்த்தினார்.

அமீரகத்தில் EIFF செய்து வரும் பல்வேறு சமூகநலப் பணிகளைப் பற்றி அவர் எடுத்துரைத்தார். துபாய் முனிசிபாலிட்டியுடன் இணைந்து கடற்கரைகளைச் சுத்தப்படுத்துதல், லேபர் கேம்ப்களில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்,லேபர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளை மேற் கொள்ளுதல், உடலும் உள்ளமும் புண்பட்டு மருத்துவமனைகளில் அடைந்து கிடக்கும் நோயாளிகளைச் சந்தித்து பூக்களையும், பழங்களையும் அன்பளிப்பாக அளித்து ஆறுதல் கூறுதல், அமீரகத்தில் ஆதரவற்று நிற்கும் இந்தியர்களுக்கு உரிய உதவிகளைச் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை EIFF செய்து வருவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார். தூக்குக் கயிற்றின் நிழலில் சிறையிலிருக்கும் ஓர் அப்பாவி முஸ்லிம் தமிழ்ச் சகோதரரை விடுதலை செய்யும் முயற்சியில் EIFF இப்பொழுது ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்பின் “இஸ்லாமியப் பார்வையில் நல்லதொரு குடும்பம்” என்ற தலைப்பில் சகோ. செய்யது அலீ அவர்கள் சிறப்புரையாற்றினார். ஆரோக்கியமான குடும்பம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பல எடுத்துக்காட்டுகளுடன் கூறிய அவர், இஸ்லாம் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை விவரித்துக் கூறினார். இன்று இஸ்லாமிய ஒளி வீசாததால் மேலைநாட்டுக் குடும்பங்கள் எப்படி சின்னாபின்னமாகச் சிதறி சீரழிந்து கிடக்கின்றன என்பதைப் பல ஆதாரங்களுடன் அழகுற விளக்கினார்.

பின்னர் “மார்பகப் புற்றுநோய்” என்ற தலைப்பில் துபாய் பிரைம் மெடிக்கல் சென்டரில் மகப்பேறு மருத்துவ நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராணி நடராஜன் MD அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறிது நேரமே உரையாற்றினாலும் உரை முழுவதும் தகவல்களாகத் தந்து அசத்தினார். மார்பகப் புற்று நோய் குறித்த நல்லதொரு விழிப்புணர்வை பெண்களிடம் அவர் ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக “ஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான செய்திகள்” என்ற தலைப்பில் துபாய் ராஷித் மருத்துவமனையில் ஃபிஸியோ தெரபிஸ்டாகப் பணியாற்றும் டாக்டர் முஹம்மத் இஸ்மாயீல் அவர்கள் சிறப்புரை யாற்றினார். தனது உரையின் மூலம் அனைவரை யும் கட்டிப்போட்ட அவர் நவீன உலகில் நமது வாழ்க்கைப் பாணி (Life Style) முற்றிலும் மாறிவிட்டதையும், அதனால் இன்று பல நவீன நோய்கள் உருவாகி விட்டதையும் உணர்த்தினார்.

பெண்கள் தங்கள் இல்லங்களில் இருந்துகொண்டே ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்ட அவர், அதற்காக பல ‘டிப்ஸ்’களைத் தந்தார். தினமும் சில மணித் துளிகளாவது உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இன்று உலகில் பரவலாகக் காணப்படும் முதுகுவலி குறித்து தனது உரையில் விரிவாகக் குறிப்பிட்டார். முதுகுவலி வராமல் இருக்கவும், ஆரோக்கிமயான வாழ்க்கை வாழவும் எளிதான சில உடற் பயிற்சிகளை ஒரு சகோதரரை வைத்து செய்தும் காண்பித்தார்.

குழந்தைகளுக்குத் தனியாக திருக்குர்ஆன் ஓதுதல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

STRATA நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் சகோ. MMS ஹாஜா அலாவுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். சிறப்புரையாற்றிய மருத்துவர்களுக்கும், தங்கள் கல்விக்கூடத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு மனமுவந்து அனுமதியளித்த ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலின் எக்ஸகியூட்டிவ் டைரக்டர் சகோ. கலந்தர் அவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் சகோ. ஹாஜா அலாவுதீன் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார். EIFF-ன் பொருளாளர் சகோ. அஷ்ரஃப் அலீ அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.

சகோதரி யாஸ்மின் ரியாசுத்தீன் அவர்கள் “மனித சமூகம் ஒரு குடும்பம” மற்றும் “குடும்ப வாழ்வின் நோக்கம” ஆகிய தலைப்புகளில் நிகழ்ச்சியின் முடிவுரையாற்றினார். இறுதியாக சகோ. பண்பொழி பஷீர் அவர்கள் நன்றியுரை நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கலந்துகொண்டவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் சிறப்பம்சம்: டாக்டர் ராணி நடராஜன் MD அவர்கள் உரை நிகழ்த்தி முடித்ததும் கலந்து கொண்ட பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை (Free Consultation) வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நிகழ்ச்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, தங்கள் உடல் பிரச்னைகள் குறித்து பெண்களில் பலர் தனியறையில் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனைகள் பல பெற்று பயனடைந்தனர்.

அனைவருக்கும் கருத்துப் படிவம் (Feedback Form) கொடுத்து நிகழ்ச்சி குறித்து அவர்களின் கருத்துகள் எழுதி வாங்கப்பட்டன. கலந்துகொண்ட அனைவரும் இந்த இனிய மாலை நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அகமகிழ்வுடன் கூறினர்.

EIFFன் தன்னார்வத் தொண்டர்கள் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வெகு விமரிசையாகச் செய்திருந்தனர். கலந்துகொண்ட ஆண்களுக்கு ஆண் தொண்டர்களும், பெண்களுக்கு பெண் தொண்டர்களும் ஓடி ஓடிச் சென்று உதவிகள் புரிந்தனர். சிறப்பு விருந்தினர் சகோ. MMS ஹாஜா அலாவுதீன் அவர்கள் தொண்டர்களின் அர்ப்பணிப்பை வெகுவாகப் பாராட்டினார். நிகழ்ச்சி  முழுவதையும் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து  வழங்கினார் 

செத்தது 10 கோடி; சாகப்போவது 100 கோடி!


புகையிலையினால் மனித குலத்திற்கு ஏற்படும் அகால மரணங்களைத் தடுக்க கடுமையான சட்ட அமலாக்கங்கள் தேவை என உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஆண்டொன்றுக்கு புகையிலை நோயால் 60 இலட்சம் பேர் மரணமடைவதாக உலகச் சுகாதார நிறுவன புள்ளி விவரம் கூறுகிறது.
“இருதய நோய், வாதம், புற்றுநோய், உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் புகையால் ஏற்படுகின்றன. தொற்றா நோய்களில் 63 விழுக்காடு புகையிலையால் ஏற்படுகிறது எனப் புள்ளி விபரம் கூறுகிறது. அதோடு புகையிலையைப் பயன்படுத்துவோரினால் அதன் அருகிலிருப்போருக்கு எற்படும் மரணங்கள் 6 இலட்சம் எனவும் அது விவரிக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் சீனப்பிரதிநிதி டாக்டர் மைக்கல் ஓ வியரி இதுபற்றிக் கூறும்போது, “தடுக்கப்பட்டிருக்கக்கூடிய மரணங்களில் பெரும்பான்மையானவை புகையிலையால் ஏற்படும் மரணங்களே” என்கிறார்.
எதிர்வரும் 2030இல் புகையிலை மரணங்கள் 80 இலட்சத்தை எட்டும். 20 ஆம் நூற்றாண்டில் புகையிலை 10 கோடி பேரைக் கொன்றிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் இது 100 கோடிப் பேரைக் கொல்லும் என மதிப்பிடப்படுகிறது.
“வேண்டாம் புகையிலை” நாளான இன்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைச்சு விடுக்கும் கோரிக்கை; வீடுகளுக்குள்ளும், அலுவலகங்களுக்குள்ளும் புகைப்பதைத் தடைசெய்யுங்கள். புகைப்பதை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு அதிகமான வரியை விதியுங்கள்” என்பதுதான் என சுகாதார நிறுவனம் கோருகிறது.

தேடப்படும் குற்றவாளி முஷாரப் : பாகிஸ்தான் கோர்ட் அறிவிப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு, அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது. பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில், பெனாசிர் புட்டோ கொலை வழக்கு நடந்து வருகிறது. இக்கோர்ட் மூலம் முதலில் முஷாரபுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. முஷாரப் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை கைது செய்ய உதவி புரியும்படி பாக்., தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை, சட்டச் சிக்கல்களைக் காட்டி பிரிட்டன் மறுத்துவிட்டது. இதனால், நேற்று நடந்த விசாரணையில், முஷாரபை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, அவ்வாறே அறிவித்தார். இதுகுறித்த விளம்பரங்கள் பத்திரிகைகளில் விரைவில் வெளிவர வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதோடு, முஷாரபின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் விரைவில் ஈடுபடுவர்

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தன. 

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. 

இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது. 

இந்நிலையில் புகைப்பிடிப்பதன் காரணமாக இலங்கையில் ஒரு நாளைக்கு தலா 50 - 60 பேர்வரை உயிரிழப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புகைப்பிடிப்பதனால் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு நாளைக்கு தலா 15 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இவர் ஒரு மின்கலம் (வீடியோ இணைப்பு)

இந்த உலகத்திலேயே உயிருள்ள பற்றறியாக செயல்படக் கூடிய ஒரே ஒரு நபர் சேர்வியா நாட்டைச் சேர்ந்த சிலவிசா பச்கிக். இவரது உடலுக்கு மின்சாரத்தை தாங்குகின்ற அபூர்வ சக்தி உள்ளது.



இதனால் இவரால் மின்சாரமாக செயல்படுகின்றமைக்கும் முடிகின்றது. மின்சாரத்தை பொறுத்த வரை வேறு எவருக்கும் இல்லாத சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கின்றமையாலேயே இவர் மின்சாரத்தின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றார்.



இவர் இச்சிறப்பு இயல்புகளை 17 ஆவது வயதில் முதன்முதல் அறிந்து கொண்டார். இவருக்கும் மின்சாரத்துக்கும் இடையிலான தொடர்பு கின்னஸ் சாதனைகளாக மலர்ந்து உள்ளது.

பேஸ்புக் - உண்மைக் கதையுடன் ஒரு செய்தி (srilanka)

கொடிகாமத்தில் உள்ள எனது நண்பனின் அப்பாவின் ஆண்டுத் திவசத்துக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒருபோன் வருகிறது. உடனே வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுப் போனை எனது சேட் பொக்கெற்றிலிருந்து எடுத்து யார் என்று கதைக்க எங்கே நிற்கிறாய்? ஒரு பெண் குரல்... யார் என்று கேட் டேன் நான்தான் தம்பி உனது பெரியம்மா எனச் சொல்ல, ஓ... என்ன விசயம் என்று கேட்க, ஒருக்கால் வீட்டை வந்து போயேன் என்று சொன்னா. என்ன விசயம் என்று மறுபடியும் கேட்டேன். நேரில் வா சொல்கிறேன் என்று சொல்லிப் போனை பெரியம்மா துண்டித்துவிட்டா.

கொடிகாமத்தில் இருந்து வந்த களைப்பைப் பாராமல் வலிகாமம் பகுதியில் இருக்கும் பெரியம்மா வீட்டுக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் அங்கே நின்ற எல்லோரின் கண்ணில் இருந்தும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

என்ன நடந்தது என்று கேட்டேன். பெரியம்மா உடனே உள்ளே வாவன் என்று அக்கம் பக்கம் பார்த்துச் சொல்லிவிட நானும் உள்ளே பதற்றத்துடன் சென்றேன்.

இதைப் பாரண்டா, பெரியப்பாவின் மண்டையை பக்கத்து வீட்டுப் பெடியன் கொட்டனாலே அடித்து உடைத்து விட்டான். இப்ப ஆஸ்பத்திரியிலே மறிச்சுப் போட்டாங்கள். ஏன் என்ன நடந்தது என்று கேட்க... வேறு என்ன என்ர மகள் கம்பசில படிக்கப் போய் பேஸ்புக்கில தனது படத்தையும் விலாசத்தையும் போன்நம்பரையும் கொடுத்து வைத்ததாலே பிரச்சினை வந்திட்டுதடா என்றார். பிரச்சினை என்ன என்று கேட்க பிரச்சினையோ... வெளிநாட்டில் வேலை பார்க்கிற ஒருவன் இவளது பேஸ்புக்கில் இவளைத் தொடர்பு கொண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலுக்கட்டாயப்படுத்தி வருகிறான்.

அவன் யாரென்றும் தெரியாது. இவளது போன் நம்பரில கதைக்கிறான். பக்கத்து வீட்டுப் பெடியனுக்கு அவனைத் தெரியும். ஆதலால் பக்கத்து வீட்டுப் பெடியனுடன் அவன் கதைத்து என்ர மகளோடு பேசும்படியும் சொல்லியிருக்கிறான். அவனும் அடிக்கடி என்ற மகளை வீதியில் மறிக்கிறதும் அவனைத் திருமணம் செய்யும்படியும் வற்புறுத்துகிறதும் நாளுக்குநாள் கூடிக் கொண்டே செல்கிறது. இதனைக் கண்ட என்ர அவர் போய்க் கேட்டதும் என்ன ஏது என்று சொல்லாமல் தலையில் கொட்டனால் அடித்துவிட்டான்.

நீங்கள் ஏன் பொலிஸுக்குப் போகவில்லை என்று கேட்க... பொலிஸுக்குப் போகப் பயமாக இருக்கிறது. பொலிஸுக்கு முறைப்பாடு செய்தால் என்ன நடக்கும் என்று தெரியுமோ என்று வெருட்டுகிறான். என்ன நீங்கள் எந்த உலகத்திலே இருக்கிறியள். பேஸ் புக்கில் பிரச்சினைகள்வரும் என்று தெரியாதா என்றேன். எனக்கு என்னடா விளங்கும். பேஸ்புக் என்றால் ஏதோ ஒரு படிக்கிற புத்தகம் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. அது இணையத்தள வசதி என்று. படிச்ச இவளுக்கு என்ன தெரியும். இப்படி மாட்டுப்பட்டுப் போய் இருக்கிறாள்.

சரி சரி நடந்தது நடந்து போச்சு. மகளிட்ட போனைக் கொடுக்காதேங்கோ. இனி ஏதாவது நடந்தால் பார்ப்பம் என்று சொல்லி விட்டு பெரியம்மா வீட்டை விட்டு வெளிக்கிட்டுச் சென்றேன். அந்தப் பக்கத்து வீட்டுப் பெடியன் வீட்டு போட்டிக் கோவில் நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான். எனக்குப் பயமாக இருந்தது. அவன் ஏதோ தன்னைக் கட்டுப்படுத்த வந்தனான்போல என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் மோட்டார் சைக்கிளை வேகமாக எடுத்துக் கொண்டு வந்தேன். பார்த்தியளோ உந்த பேஸ் புக்காலை வந்த வினையை. இது உலகத்திலை பேசுகிற ஒரு விடயம். பேஸ்புக் சம்பந்தமாக எத்தனை குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படு கிறது. பேஸ்புக்கைப் பயன் படுத்துபவர்களுக்குத் தெரிய வில்லையா ஆழம் தெரிந்தும் காலை விட்டு விட்டு எடுக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறவர்களில் கூடுதலானவர்கள் பெண்கள்தான்.

ஆகவே, பெண்கள்தான் இந்த பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கூட்டிக் கொண்டு கொக்குவில் பகுதிக்கு வரும்போது அங்கே இருந்த நெற்கபேயில் இருந்து பல இளம் பெண்கள் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டு வந்தேன்.

வெள்ளை தங்கக் கைபேசி

கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற GoldVish SA’s ‘Le Million’ Piece Unique என்ற கைபேசி. இந்த ஜேனிவாவில் உள்ள luxury communications நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 1.3 மில்லியன் யூரோவாகும்.

சுமார் 8 கிலோ வெள்ளைத் தங்கத்தினாலும், 20 காரட்VVS1 என்ற வைரக்கற்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த கைபேசியில்Bluetooth, 2 GB of storage, FM radio, a digital camera and MP3 playback போன்ற வசதிகள் உள்ளது.



சர்வதேச கிரிக்கட்டில் இருந்து சஹித் அப்ரிடி விலகுவதாக திடீர்அறிவிப்பு


Shahid Afridi
மே 31
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ஷாஹித் அப்ரிதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாபஸ் பெற்றாலோ அல்லது தற்போதைய வாரியத்தைக் கலைத்து விட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலோ, தனது முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் அப்ரிதி அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டித் தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் போட்டிகளில் ஆடியது. அப்போது 5 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று தொடரையும் அப்ரிதி தலைமையிலான அணி கைப்பற்றியது. இந்தநிலையில் அவருக்கும், பயிற்சியாளர் வக்கார் யூனிஸுக்கும் இடையே பூசல் வெடித்தது. இதையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து அப்ரிதி நீக்கப்பட்டார்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ் பட் கூறுகையில், அப்ரிதியை நீக்க எங்களிடம் வலுவான காரணங்கள் உள்ளன. சமயம் கிடைக்கும்போது அவற்றை நான் வெளியிடுவேன். காரணமே இல்லாமல் அப்ரிதியை நாங்கள் நீக்கவில்லை என்றார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கண்டிஷன் போட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அப்ரிதி. இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஒரு மனிதனுக்கு முக்கியமாக தேவை மதிப்பு,மரியாதை. அதை விட பெரிது எதுவும் இல்லை. என்னை கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம் கடும் கண்டனத்துக்குரியது. எல்லாவற்றுக்குமே ஒரு அளவு உள்ளது.

இந்த வாரியத்தின் கீழ் நான் விளையாட மாட்டேன். எனவேதான் விலகுவதாக அறிவிக்கிறேன். ஒரு வேளை வாரியம் தனது முடிவை மாற்றிக் கொண்டால் நானும் எனது முடிவை மாற்றிக் கொள்வேன். அதேசமயம், புதிய வாரியம் அமைக்கப்பட்டால் நான் எனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தயார். ஆனால் தற்போதைய வாரியத்தின் கீழ் விளையாட எனக்கு விருப்பமில்லை.

இப்படி ஒரு அவமரியாதைக்குப் பிறகும் யாராவது தொடர்ந்து விளையாட முன்வருவார்களா?. வீரர்களை மதிக்காத வாரியம் எனக்குத் தேவையில்லை. வாரியத்தின் அவமரியாதையை எதிர்க்கும் வகையில்தான் ஓய்வு முடிவை அறிவிக்கிறேன்.

நான் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது என்னிடம் எதையும் அவர்கள் சொன்னதில்லை. வீரர்கள் யார் என்பதைக் கூட சொல்லவில்லை. ஒரு உடைந்து போன அணியுடன்தான் நான் விளையாடினேன்.

என்னை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கருதுகிறேன். அவர்களது தொண்டையில் சிக்கிய முள்ளாக நான் இருந்திருக்கிறேன் என்றார் அப்ரிதி.

அப்ரிதி ஓய்வு பெறுவதாக அறிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2006ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருந்தார். பின்னர் உலகக் கோப்பைக்குப் பின்னர் அதுகுறித்து முடிவெடுப்பேன் என்று பின்வாங்கினார். இதையடுத்து மீண்டும் டெஸ்ட் போட்டிகளி்ல ஆட ஆரம்பித்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரிலும் பங்கேற்றார். பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக கூறினார்.

இதையடுத்து சல்மான் பட் கேப்டனாக்கப்பட்டார். ஆனால் அவரும் பின்னர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு பதவியை இழந்தார். இதையடுத்து மிஸ்பா உல் ஹக் டெஸ்ட் கேப்டனாக்கப்பட்டார். அப்ரிதி ஒரு நாள் கேப்டனாக தொடர்ந்து வந்தார்.

உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாகவே விளையாடியது. அதிக விக்கெட்களை வீழ்த்தி, அணியின் சிறப்பான வெற்றிகளுக்கு அப்ரிதி காரணமாக இருந்தார்.

இந்த நிலையில்தான் அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இருப்பினும் இலங்கையில் நடைபெறப் போகும் இலங்கை பிரீமியர் லீக் என்ற தொடரில் அப்ரிதி பங்கேற்று ஆடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

ஒரே மாதத்தில் 2 சூரிய கிரகணங்கள்-ஒரு சந்திர கிரகணம்!


Antarctic Total Solar Eclipse. Image by Fred Bruenjes
may 31
சென்னை: வரும் ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும், ஒன்று சந்திர கிரகணமாகும்.

இதில் இரண்டு சூரிய கிரகணங்களும் இந்தியாவில் தெரியாது. சந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் பார்க்க முடியும்.

ஜூன் 2ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.55 மணி முதல் அதிகாலை 4.37 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இதை சீனா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளில் காண முடியும்.

ஜூன் 15ம் தேதி இரவு 11.52 மணி முதல் அதிகாலை 3.33 மணி வரை சந்திக கிரகணம் ஏற்படும். இதை இந்தியாவிலும், ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காண முடியும்.

ஜூலை 1ம் தேதி மாலை 6.15 மணி முதல் இரவு 9.48 மணி வரை அடுத்த சூரிய கிரகணம் ஏற்படும். இதை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், அண்டார்டிகா பகுதியிலும், மடகாஸ்கரிலும் காணலாம். ஆனால், இந்தியாவில் இது தெரியாது.

இந்த மூன்று கிரகணங்களுமே வட அமெரிக்காவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள படம், 2003ம் ஆண்டு அண்டார்டிகாவில் ஏற்பட்ட நீண்ட சூரிய கிரகணத்தைக் காட்டுகிறது. இதை படம் பிடித்தவர் பிரட் ப்ருயென்ஜெஸ். சூரியனை சந்திரன் மறைக்கும் அந்த கணத்தை மிக அட்டகாசமான படம் எடுத்துள்ளார்.