Wednesday, May 11, 2011

சிரியா:13 முக்கிய தலைவர்களுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தடை

syria
ப்ரஸ்ஸல்ஸ்:எதிர்ப்பாளர்களை ராணுவரீதியாக அடக்கி ஒடுக்கும் சிரியா அரசின் 13 முக்கியத் தலைவர்கள் மீது ஐரோப்பிய தடை ஏற்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. சிரிய அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் சகோதரர் மாஹிருல் ஆஸாத் ஐரோப்பிய யூனியன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரகசிய புலனாய்வுத்துறை தலைவர் அலி மம்லூக், உள்துறை அமைச்சர் முஹம்மது இப்ராஹீம், மாஹிரின் உதவியாளரும் தொழிலதிபருமான ராமி மக்லூஃப் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மாஹிரின் தலைமையில் தான் எதிர்ப்பாளர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. பஸ்ஸாருல் ஆஸாத் தடைப்பட்டியலில் இடம் பெறாவிட்டாலும், அதிகாரிகளின் அக்கிரமத்தை தடுப்பதில் தோல்வியை தழுவியுள்ளதால் அவரும் தடையின் வரையறைக்குள் உட்படுவார் என ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கைத்துறை தலைவர் பரோணஸ் ஆஷ்டன் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்கவும், விசாவிற்கு கட்டுப்பாடு விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்ஸாருல் ஆஸாத் சீர்திருத்தத்திற்கு தயாராகி பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டுமென ஆஷ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு மிகுந்த பிரதேசமான தராவில் கடந்தவாரம் இரவில் ராணுவம் வீடுகளில் நடத்திய ரெய்டில் ஏறத்தாழ நூறுபேர் கைது செய்யப்பட்டனர். ஹம்ஸ்,பனியாஸ் ஆகிய இடங்களிலும் ராணுவம் ரெய்டை தொடர்கிறது. மாஹிருல் ஆஸாதின் மீது கடந்த மாதம் அமெரிக்கா தடை ஏற்படுத்தியிருந்தது. மார்ச் மாதம் நடந்த மோதலில் 621 சாதாரண மக்களும், 120 ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக சிரியன் அப்ஸர்வேட்டரி பார் ஹியூமன் ரைட்ஸ் என்ற அமைப்பு கூறுகிறது.

0 comments:

Post a Comment