Friday, May 31, 2013

ஆட்சியாளர்களிடம் கேள்விகள் எழுப்பாமல் இருக்கவே கறுப்புச் சட்டங்கள் – எஸ்.ஏ.ஆர் கிலானி!

                        31 May 2013 SAR GEELANI
 
     திருவனந்தபுரம்:ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் குறித்து மக்கள் கேள்விகள் எழுப்பாமலிருக்கவே யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்களை ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது என்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், மனித உரிமை ஆர்வலருமான எஸ்.ஏ.ஆர் கிலானி கூறினார்.
 
     கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட மாநாட்டில் கலந்துகொண்டு எஸ்.ஏ.ஆர்.கிலானி உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியது:மக்களை பீதியில் ஆழ்த்தி, வாயை அடைப்பதற்கு கறுப்புச் சட்டங்களை அதிகார வர்க்கம் மேற்கொள்கிறது. ஆனால், ஒரு குடிமகனை கொல்ல முடிந்தாலும், அவனது மன உறுதியை குலைப்பதற்கு யாராலும் முடியாது.யு.ஏ.பி.ஏ சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களும், தலித்துகளும், பழங்குடி மக்களும் ஆவர்.
 
     நீதி மறுக்கப்படும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும் போராடவேண்டியது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை தொடர்பான கடமையாகும். அடக்குமுறையாளர்கள் எப்பொழுதுமே ஆட்சியாளர்கள்தாம். ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். தொடர் போராட்டங்களின் மூலமே உரிமைகளை பெற முடியும். நமது முன்னோர் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக மட்டுமே போராடவேண்டி இருந்தது. ஆனால், இன்று நாட்டை ஆக்கிரமிக்கும் நூற்றுக்கணக்கான கிழக்கு இந்திய கம்பெனிகளுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு எஸ்.ஏ.ஆர்.கிலானி கூறினார்.

கறுப்புச்சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஓயாது!-கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சி!

Conference against UAPA law PFI
 
      திருவனந்தபுரம்:நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது. யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரண யாத்திரா’ என்ற மக்கள் விசாரணை பயணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை வகித்திருந்தார். இப்பயணம் நேற்று (மே 30-ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான பேரணி மற்றும் மாநாட்டில் அணி திரண்ட மக்கள் வெள்ளம், பல மணிநேரங்கள் கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தது. சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதி காலவரையற்று சிறைகளில் அடைக்கும் அரசு-அதிகார வர்க்க கூட்டணிக்கு எதிரான பிரம்மாண்ட எதிர்ப்பாக பேரணியும், மாநாடும் அமைந்தது. மாலை 3.30 மணியளவில் பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய மக்கள் எழுச்சிப் பேரணி புத்தரிக் கண்டம் மைதானத்தில் நிறைவுற்றது.
 
     யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்தை வாபஸ்பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான பிரகடனத்துடன் கேரள தலைநகரில் திரண்ட மக்கள் வெள்ளம், புதிய வரலாற்றைப் பதிவுச் செய்தது. மாலை 5 மணிக்கு பிரம்மாண்ட கண்டன மாநாடு துவங்கியது. மஃரிப் தொழுகைக்காக 6.45 மணிக்கு இடைவேளை விட்ட வேளையிலும் கூட மக்கள் கூட்டங்கூட்டமாக மாநாட்டு அரங்கிற்குள் வந்துகொண்டிருந்தனர். பிஞ்சுக்குழந்தைகள் முதல் வயோதிகர் வரை தாங்களும் இப்போராட்டத்தில் பங்காளர்கள் என்ற முறையில் கலந்துகொண்டது மாநாட்டுக்கும், பேரணிக்கும் மெருகூட்டியது. பெண்களும், இளைஞர்களும், மார்க்க அறிஞர்களும் பெரும் திரளாக ஆவேசத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 
     கண்டன மாநாட்டை ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் முன்னாள் தேசிய செயலாளரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான இ.அபூபக்கர் துவக்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை தாங்கினார். பேராசிரியர் எஸ்.ஏ.ஆ.கிலானி (டெல்லி பல்கலைக்கழகம்), ஒ.எம்.அப்துல் ஸலாம்(பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தேசிய பொதுச் செயலாளர்), எ.ஸயீத்(எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர்), பேராசிரியர் ஜக்மோகன் சிங்(சுதந்திரப்போராட்ட தியாகி பகத் சிங்கின் சகோதரி மகன்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். கறுப்புச் சட்டங்களில் கைதுச் செய்யப்பட்டு அநியாயமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு கேரள தலைநகரில் நடந்த மாநாடும், பேரணியும் ஆறுதலை தரும்.

Thursday, May 30, 2013

சுதந்திரம் மறுக்கப்படும் முஸ்லிம்கள்


பாராபங்கி! (Barabanki) - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம்.
புதிய கொலைக் களம் : போலீஸ் வேன்!

ஃபைஸாபாத் மாவட்ட பாராபங்கி நீதிமன்ற விசாரணையை முடித்துக்கொண்டு லக்னோ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில்,  ராம் சனெஹி கட் எனும் ஊரைக் கடக்கும்போது போலீஸ் வேனுக்குள் திட்டமிட்டபடி ஒரு படுகொலை நடைபெற்றது.

நாள்: 18.5.2013 சனிக்கிழமை
கொலையுண்டவரின் பெயர்: காலித் முஜாஹித்
கூட்டுக் கொலையாளிகளாகப் பட்டியலிடப் பட்டுள்ளவர்கள்: சப் இன்ஸ்பெக்டர் ராம் அவத்ராம், கான்ஸ்டபிள்கள் சந்திரசேகர், ஆனந்த் ப்ரகாஷ், ஜிதேந்திரா, மனோஜ் குமார், ராம்ஜி யாதவ், தீபக் குமார், ஜெயப்ரகாஷ் மற்றும் லாலாராம்.

***
ஒரு சிறிய Flashback!
நவம்பர் 23, 2007 அன்று லக்னோ, வாரணாசி மற்றும் ஃபைஸாபாத் நீதிமன்றங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. 14 உயிரிழப்புகள்; காயமடைந்தோர் பலர். குண்டு வெடிப்பு நடத்திய உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உ.பி. காவல்துறைக்கு வக்கில்லாமல் போனது; அல்லது உண்மைக் குற்றவாளிகள் காவலர்களுக்கு உத்தரவிட்டதன்படி டிசம்பர் 12, 2007இல் ஆஸம்கர் எனுமிடத்திற்கு டாட்டா சுமோ வாகனத்தில் வந்த சிறப்பு அதிரடிப்படையினர் (STF), யூனானி மருத்துவரான முஹம்மது தாரிக் காசிமி என்பவரைப் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்க அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர்.

நான்கு நாள்கள் கழித்து, டிசம்பர் 16, 2007 அன்று பள்ளி ஆசிரியரான, மேற்கூறிய மவ்லவீ காலித் முஜாஹித் என்பவரை ஜோன்பூர் எனும் இடத்தில் பலரும் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிறப்பு அதிரடிப்படையினர் தூக்கிச் சென்றனர்.

ஏறத்தாழ பத்து நாள் வரைக்கும் அவ்விருவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் 14.12.2007 அன்று முஹம்மது தாரிக் காசிமியின் குடும்பத்தினர், நகரக் காவல் நிலையத்தில் 'ஆள் கடத்தல்' புகார் ஒன்றைப் பதிவு செய்தனர். மட்டுமின்றி, 19.12.2007 அன்று நீதிமன்றத்தில் 'ஆள் கொணரும்' (ஹேபியஸ் கார்பஸ்) வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, NLP (National Loktantrik Party) கட்சியின் சவுத்ரி சந்தபால் சிங் என்பவர், உ.பி. காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தினார். அதில் முஹம்மது தாரிக் காசிமியையும் மவ்லவீ காலித் முஜாஹிதையும் திருப்பி ஒப்படைப்பதற்கான கெடுவாக 22.12.2007ஐ நிர்ணயித்திருந்தார்.

டிஸம்பர் 22, 2007 அன்று ஒரு பத்திரிகையாளர்களின் சந்திப்பை லக்னவின் ADGP பிரிஜ்லால் ஏற்பாடு செய்து, கடந்த 23.11.2007இல் நீதிமன்றங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் 'முக்கியக் குற்றவாளிகள்' என்பதாகத் தாரிக்கையும் காலித் முஜாஹிதையும் அன்று(22.12.2007) 'பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன்' பாராபங்கி ரயில்வே ஸ்டேஷனில் வைத்துக் கைது செய்ததாக சரடு விட்டார். (FIR 1891/2007; FIR 547/2007).
'கெட்டிக்காரன் புளுகு எட்டே நாட்களில் உடையும்'; 'நுணலும் தன் வாயால் கெடும்' எனும் சொலவடைகளுக்கு ஒப்ப, "உ.பி. நீதிமன்றங்கள் மூன்றில் நடந்த குண்டு வெடிப்புகள் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளை ஒத்திருக்கின்றன" என்று பிரிஜ்லால் கூடுதலாக உளறி வைத்தார். (மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவாதான் என்று ஸ்வாமி அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்). வழக்கம்போல் காவிச் சார்பு ஊடகங்கள் இல்லாத 'இஸ்லாமியத் தீவிரவாதம்' பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்தன.

இரு கைதிகளின் குடும்பத்தினரும் மனித உரிமை ஆர்வலர் குழுக்களும் இணைந்து காவல்துறையின் கபட நாடகத்துக்கு எதிராகக் களங்கள் கண்டனர். உ.பி. காவல்துறைக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்தன. இறுதியாக, மேற்காணும் வழக்கில் காவல்துறையினரின் முறைகேடுகளையும் கைது நடவடிக்கைகளையும் குறித்து விசாரிப்பதற்கு அப்போது ஆட்சியிலிருந்த மாயாவதி அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி R.D. நிமேஷ் என்பவரின் தலைமையில் கடந்த மார்ச் 2008இல் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தரும்படி உத்தரவிட்டது.

R.D. நிமேஷ் கமிஷனின் பதவிக் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.

ஆறுமாதக் கெடு கொடுத்து அமைக்கப்பட்ட R.D. நிமேஷ் கமிஷன், நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் 31, 2012இல் தனது அறிக்கையை உ.பி. அரசிடம் சமர்ப்பித்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆட்சியை இழந்து, சமாஜ் வாடியின் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி இருந்தார். ஆறு மாதங்களாகியும் கமிஷனின் அறிக்கையை உ.பி. அரசு வெளியிடாமல் கண்ணாமூச்சு விளையாடியது.

லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த 12.10.2012 கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ராஜேந்தர் சச்சார், "நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்ப்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது?" என்று வினா எழுப்பினார்.
மேலும், இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயம் கிடைக்கவேண்டும்; உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அண்மைக் காலமாக முஸ்லிம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது இவ்வரசின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார், விசாரணைக் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னும் அதை வெளியாக்குவதில் காட்டும் தாமதம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நொறுக்கிவிடும் என்றும் கூறினார்.

கெட்டிக்கார இணைய ஊடகங்கள் சில, உ.பி. காவல்துறையின் தில்லுமுல்லுக் கைதுகளைக் கண்டிக்கும் R.D. நிமேஷ் கமிஷனுடைய அறிக்கை பகுதிகளை வெளியிட்டன. அவற்றுள், சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறை கருப்பாடுகள் தண்டிக்கப்பட வேண்டும் எனும் பரிந்துரை தலையாயது. சட்ட விரோதமாக இரு அப்பாவிகளைக் கைது செய்வதற்கு சதி செய்ததாகவும் உடந்தையாக இருந்ததாகவும் 42 காவல்துறை அதிகாரிகள் மீது R.D. நிமேஷ் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டியிருந்தது.
According to sources, the Commission described the picking up of Tariq and Khalid as an “unlawful activity” and recommended punishment to officials involved in “detaining and torturing” them. The Commission, which heard over 100 witnesses, is reported to have concluded that the two were not arrested on December 22 from Barabanki as claimed by the STF but had been picked up several days earlier — Tariq, a Unani practitioner, from the Shankarpur checkpost near Sarai Meer in Azamgarh “by some people in a Tata Sumo” on December 12 and Khalid, a teacher, in the same manner from Mariyahu in Jaunpur on December 16. Both were taken to different locations and tortured, the Commission is reported to have said, censuring the Azamgarh and Jaunpur police for not taking cognisance of complaints and FIRs on the “forcible capture of Qasmi and Mujahid by people in Tata Sumo.” The Commission is said to have recommended appointment of non-police gazetted officers as witnesses of recoveries as a safeguard against falsification of records; disposal of terror cases within two years and action against officials for delays beyond this period; investigation of cases by gazetted officers different from those making the arrests and videorecording of interrogation. 
Source: http://www.thehindu.com/news/national/other-states/khalid-death-turns-focus-on-nimesh-panel-report/article4730505.ece


R.D. நிமேஷ் கமிஷனுடைய அறிக்கை உ.பி. சட்டமன்றத்தின் முன்வைக்கப்பட்டால் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி மேலும் பலர் மாட்டிக் கொள்வார்கள். எனவே, நிரபராதிகளுக்கு எதிராகப் புனையப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாகக் கடந்த 24.4.2013 அன்று நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் உ.பி.யின் உள்துறைச் செயலர் சர்வேஷ் சந்திர மிஸ்ரா அறிவிப்புச் செய்தார்.

ஆனால், நிரபராதிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறமுடியாது என பாராபங்கியின் நீதிபதிகள் கடந்த 10.5.2013 அன்று மறுத்துவிட்டனர். பெரும்பாலான நீதிபதிகள் வித்ய பாரதியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட முன்னாள் மாணவர்களல்லவா? ஒரு மாநில அரசின் முடிவின்படி முதல் நிரபராதியாக ஒரு முஸ்லிம் விடுதலையாகிவிட முடியுமா? நீதித்துறை விடுவித்தாலும் காவல்துறை விட்டுவிடுமா?

"இது, காலங் காலமாக சிறுபான்மையினருக்கு எதிராகக் காவல்துறைக்குள் ஊட்டப்பட்ட வெறுப்பு" என்கிறார் உ.பி.யின் முன்னாள் ஐ.ஜியான எஸ்.ஆர் தாராபூரி, ஐ.ப்பீ.எஸ்.


There is a communal bias in the police department. I have seen that majority of the officers have a communal bias towards the minorities. This practice has been going on for a while now and no attempt has been made to stop this. Moreover there is no action against those police personnel who book innocent people in wrong cases. What has happened in Hyderabad? So many people were let off by the court. The police who booked the cases for reasons best known to them continue to remain unpunished.
Source: http://news.rediff.com/interview/2010/jun/15/interview-darapuri-majority-of-police-force-is-biased.htm


கடந்த 20.5.2013 அன்று பத்திரிகையாளர்களுக்கு தாராபூரி அளித்த பேட்டியில் "காலிதை பொய் வழக்கில் சிக்க வைத்தவர் உ.பி.யின் முன்னாள் DGP விக்ரம் சிங்" என்று குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

"நேற்று முன்தினம் போலீஸ் வேனில் கொல்லப்பட்ட காலித் முஜாஹித் ஓர் அப்பாவி; கைது செய்யப்பட்டபோது அவரிடம் ஆயுதம் ஏதும் இருக்கவில்லை. அன்றைய DGP விக்ரம் சிங், ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டு, கிடைக்காத காரணத்தால் காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவரையும், இந்த வழக்கில் அநியாயமாக சிக்கவைத்தார்.

காலித் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், சட்டத்துக்கு புறம்பான முறையில் புலனாய்வுத் துறையினரின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், அவர்தம் குடும்பங்களுக்குக்கூட தெரியாத வகையில் 'கடத்தப்பட்டு' ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் போது, தேவைப்படும் வழக்குகளில் அவர்கள் சிக்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு ரகசிய காவலில் வைக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள், பன்றிக்கறி சாப்பிடவும் மூத்திரம் குடிக்கவும் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.


Many Muslim youth who have been missing from their districts and even their families do not know about them because the investigative agencies have abducted them and kept them at a secret place so that implicate them in bomb blast some time in future. These youth are forced to eat pig meat and drink urine. It is at the connivance of police officials that these innocent are put behind bars showing that they had an unlicensed pistol. When Khalid Mujahid and Tariq Qasmi were arrested nothing was found on them but Vikram Singh told them that if they paid him Five lac rupees they would-be set free and someone else would be implicated instead.


முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் காவலில் சாகடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. பல நேரங்களில் பல உண்மைகள் உலகுக்குத் தெரியவராமலேயே புதைக்கப்படுகின்றன" என்கிறார் தாராபூரி.

***
போலீஸ் வேனுக்குள் வைத்து 18.5.2013இல் கொலை செய்யப்பட்ட மவ்லவீ காலித் முஜாஹித், "அன்று மதியம் 3.30 மணிவரை நீதிமன்றத்தில் இருக்கும்போது எவ்வித அயர்ச்சியுமின்றி திடகாத்திரமாகவே இருந்தார்" என அவருடைய வழக்கறிஞர் முஹம்மது ஷுஐப் தெரிவித்துள்ளார்.

ஆனால், "வெப்பம் தாளாமல் இறந்துவிட்டார்" என முதலில் கூறிய ஃபைஸாபாத்தின் DIG தர்மேந்த்ர சிங் யாதவ், "மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மாரடைப்பால் மரணித்தார்" என பல்டி அடித்துள்ளார்.

நீதிமன்றத்தின் விசாரணை முடிந்து போலீஸ் வேனுக்குள் சென்றபோது வெள்ளை பைஜாமா-குர்தா அணிந்திருந்த காலித் முஜாஹித், காவல்துறையினரால் பிணமாகக் காட்டப்படும்போது ட்டீ ஷர்ட் அணிவிக்கப்பட்டிருந்தார். பாராபங்கி மருத்துவமனைக்கு காலிதைக் கொண்டு சென்றபோது கண்ணால் கண்ட சாட்சிகள், காலிதின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வழிந்திருப்பதையும் முகத்தில் புதிய காயங்களையும் பார்த்திருக்கின்றனர். [படம்].

மவ்லவீ காலித் முஜாஹிதின் மாமா ஸஹீர் ஆலம் ஃபலாஹீ என்பவர் கடந்த 19.5.2013 அன்று ஒரு முதல் தகவல் அறிக்கையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். அதில், தம் மருமகன் காலிதைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக உயரதிகாரிகள் உட்பட 42 காவல்துறையினரைப் பட்டியலிட்டுள்ளார். இத்தனைக்குப் பின்னரே CBI விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

காவிகள் நடத்தும் குண்டுவெடிப்புகளைப் பற்றிய செய்திகள் காட்சி ஊடகங்களில் காலையில் வெளியானால் எவ்வித விசாரணையும் நடைபெறாத அன்று மாலையே "முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு" என்று கூசாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள்;
ஏமாளி முஸ்லிம்களைத் தூக்கிக் கொண்டுபோய் யாருக்கும் தெரியாத இடத்தில் அடைத்து வைத்துக்கொண்டு "ஐந்து லட்சம் ரூபாய் தா; இல்லையென்றால் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியே நீதான்" எனக் காசு பறிக்கும் விக்ரம் சிங் போன்ற பகல் கொள்ளைக் காரன்கள்;
இலஞ்சம் கொடுப்பதற்கு மறுக்க, மறுக்க இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்தேறிய பல்வேறு குற்றங்களில் அப்பாவி முஸ்லிம்களைச் கோத்துவிடும் காவல்துறையினருக்குத் துணையாக 'பங்கு' ஏதும் தேறாதபோது சிறைச்சாலைக்குள்ளேயே வைத்துக் கொன்றுபோடும் ஜெயிலர்கள்
விசாரணை என்ற பெயரால் அப்பாவிகளைக் கைது செய்து போலீஸ் வேனுக்குள்ளேயே வைத்துக் கொலை செய்யும் ராம் அவத்ராம், சந்திரசேகர், ஆனந்த் ப்ரகாஷ், ஜிதேந்திரா, மனோஜ் குமார், ராம்ஜி யாதவ், தீபக் குமார், ஜெயப்ரகாஷ் மற்றும் லாலாராம் போன்ற 'காவலர்கள்' என்ற பெயருக்கே இலாயக்கற்ற போலீஸ் பொறுக்கிகள்;
காட்டுத் தனமாகத் தாக்கப்பட்டதில் முகத்தில் வெளிப்படையாகத் தெரியும் காயங்களைக்கூட குறிப்பிடாமல் பிரேதப் பரிசோதனை தயாரிக்கும் சோரம்போன அரசு மருத்துவர்கள்;
இத்தனை தகவல்களையும் உளவுத்துறை மூலம் தெரிந்துகொண்டு, "காலிதின் மரணம் இயற்கையானது போலத்தான் தெரிகிறது" என்று அறிக்கை விடும் மோசடி அரசியல்வாதிகள்;
நூறு சாட்சிகளுக்குமேல் விசாரித்து, "குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் நிரபராதிகள்" என நிமேஷ் கமிஷனின் அறிக்கை வந்த பின்னர் பொய்வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் நிரபராதிகளை விடுதலை செய்யுமாறும் அறிவித்த உ.பி. மாநில அரசின் கோரிக்கையை மறுதலித்து, அப்பாவி முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய மறுக்கும் நீதி(!)பதிகள்!

இவர்களுக்கு மத்தியில்தான் முஸ்லிம்கள் வாழவேண்டியுள்ளது - "நாங்கள் அப்பாவிகள்" என்று சொல்வதற்குக்கூட சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களாக.
[இச்செய்தி பதிவாகும் வேளையில் உ.பி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வழங்கிய நிவாரணத் தொகையான ஆறு இலட்சம் ரூபாயை முகத்தில் அடித்தார் போன்று திருப்பி வீசியுள்ளனர் காலித் முஜாஹித் குடும்பத்தினர். இதற்குப் பகரமாக, காலிதை அநியாயமாக அடித்துக் கொலை செய்த கொலையாளிகளுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.]

Wednesday, May 29, 2013

இந்தியாவில், சி.ஐ.ஏ.வுக்கு ரகசிய உளவு விமான தளம்! என்னங்க இது புதிய கதை?

    
 

    அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர், அநேக இந்தியர்களுக்கு ஒரு உல்லாசப் பயண ஸ்தலம் மட்டுமே. ஆனால், போர்ட் பிளேர் என்ற பெயர் தற்போது படு தீவிரமாக பென்டகனில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பது, அநேக இந்தியர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
 
     பென்டகன் எதற்காக போர்ட் பிளேர் பற்றி யோசிக்க வேண்டும்? அமெரிக்காவின் உளவு விமான ஆபரேஷன்களுக்கான ஆபரேஷன் தளம் ஒன்றை போர்ட் பிளேரில் அமைக்க விரும்புகிறார்கள் அவர்கள். அதாவது, தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. அமைத்துள்ள உளவு விமான தளம் போல ஒன்றை அந்தமான் தீவுகளில் அமைக்கும் முடிவில் உள்ளார்கள் அவர்கள். இது தொடர்பாக மத்திய அரசிடம் ஒரு தடவை பேசப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள், ராணுவ வட்டாரங்களில்.
 
     நேற்று நாம் வெளியிட்ட கிரைம் தொடர்பான கட்டுரையின் ஆங்கில லிங்கில் அதிக எண்ணிக்கையான வாசகர்கள் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர். எமது நன்றிகள்.  இந்தக் கட்டுரை ராணுவம் தொடர்பான கட்டுரை.  இதற்கு வாசகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
 
     இந்தியா தற்போது சீனாவுடன் ஒருவித ராணுவ ரீதியான முறுகல் நிலையில் உள்ளதால், அந்தமானில் உளவு விமான தளம் அமைப்பதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி தரும் என நினைக்கிறது அமெரிக்கா.
 
     பென்டகன் அதிகம் பிரஸ்தாபிக்காமல் வைத்திருந்த இந்த திட்டம், எதிர்பாராத விதமாக ராணுவ வட்டாரங்களில் தெரிய வந்து விட்டது. ஆனால், இந்தியாவில் யாரும் இது பற்றி பேசுவதாக தெரியவில்லை.
 
     சரி. கதை எப்படி வெளியே தெரிய வந்தது? அமெரிக்க செனட் பாதுகாப்பு கமிட்டி, பென்டகனுக்கு உத்தரவு ஒன்றை கொடுத்திருந்தது. ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவம் விரைவில் வெளியேறவுள்ள நிலையில், தென்னாசிய பகுதியில் உளவு விமானத் தளங்களுக்கு சரியான இடங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது.
 
     பென்டகன், இந்தப் பொறுப்பை அமெரிக்க ராணுவத்துக்கான கள ஆய்வுகளை செய்யும் ரான்ட் கார்ப்பரேஷனிடம் (RAND Corporation) கொடுத்திருந்தது. இவர்கள் முழுமையான ஆய்வு செய்து அறிக்கை கொடுத்து விட்டனர். அந்த அறிக்கை பென்டகனால் அப்ரூவல் கொடுக்கப்பட்டு, அமெரிக்க செனட் பாதுகாப்பு கமிட்டியிடம் போயிருக்கிறது.

    இந்த அறிக்கை லீக் ஆனதில், விஷயம் ராணுவ வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
 
     ரான்ட் கார்ப்பரேஷன் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள, உளவு விமான தளத்துக்கான ஐடியல் ஸ்பாட் – போர்ட் பிளேர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர்!
 
     பென்டகன், 3 நாடுகளை ‘அமெரிக்கா ராணுவ ரீதியாக ஒரு கண் வைத்திருக்க வேண்டிய நாடுகள்’ என்ற பிரிவில் வைத்திருக்கிறது. ஈரான், வட கொரியா, சீனா ஆகியவையே இந்த 3 நாடுகள். இவற்றில் சீனா மீது ஒரு கண் வைத்திருக்க ஐடியல் இடம், போர்ட் பிளேரில் உளவு விமானத்தளம் அமைப்பது.
 
    இந்தியாவுக்கும் சீனா மீது ராணுவ ரீதியான உரசல் இருப்பதால், இந்தியா தலையாட்டி விடும் என்பது, பென்டகனின் வியூ பாயின்ட் (ஒருவேளை இதற்காகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமீபகால உரசலை ஏற்படுத்தினார்களோ… ஆண்டவனுக்குதான் வெளிச்சம்! ஆனால், சி.ஐ.ஏ. முன்பு ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே செயற்கையான உரசல் ஒன்றை ஏற்படுத்தி வெற்றி கண்டது என்பதை மறக்காதீர்கள்) மற்றொரு விஷயமும் இங்கு உள்ளது.
 
     சி.ஐ.ஏ.வுக்கு பாகிஸ்தானில் ஒரு ரகசிய உளவு விமான தளம் இருந்தது. பாகிஸ்தான் அரசின் அனுமதியுடன் அந்த தளம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த தளத்தின் ஆபரேஷன் ரகசியமாகவே இருந்தது.
 
     சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தானில் ஷாம்சி என்ற இடத்திலுள்ள விமானப்படை தளத்தில் இருந்துதான் ஆரம்பத்தில் சி.ஐ.ஏ.வின் உளவு விமானங்கள் புறப்பட்டுச் சென்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. ஷாம்சி என்பது ஒரு சிறிய ஊர். பாலுசிஸ்தானின் குவேட்டா நகரிலிருந்து 350 கி.மீ. தென்மேற்கில் இருக்கிறது.
 
     பக்கா கிராமப்புற ஊரில் இருந்து இயங்கிய இந்த விமானத் தளம் பற்றிய தகவல்கள் வெளியாகாதபடி பார்த்துக் கொண்டார்கள். விறுவிறுப்பு.காம் thanks


தேச விரோத விளையாட்டு!


     ங்கிலாந்து அறிஞர் பெர்னார்ட் ஷாவிடம் கிரிக்கெட் விளையாட்டு குறித்து கருத்து கேட்டபோது "11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் விளையாட்டு" என்று சொன்னார்.
அறுபதாண்டுகளுக்கு முந்தைய நிலவரப்படி 11,000 முட்டாள்கள் என்ற எண்ணிக்கை இங்கிலாந்திலிருந்த ரசிகர்களை மட்டும் கணக்கில் கொண்டு சொல்லியிருக்கவே வாய்ப்புண்டு. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியிருக்கக் கூடும்.  பெர்னாட்ஷா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் 11,000 முட்டாள்கள் என்றதை "11 மில்லியன் முட்டாள்கள்" என்று மாற்றி சொல்லியிருப்பார்.
 
குளிர்பிரதேச நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், ஓய்வுக் காலங்களில் வீடுகளில் முடங்கியிருக்காமல் நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் பொழுதுபோக்காகவே கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமாகியது. தொடர்ந்து, பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகளுக்கும் கிரிக்கெட் ஏற்றுமதியாகியது. அவ் வகையில்தான் இந்தியாவுக்கும் கிரிக்கெட் அறிமுகமானது.
 
இன்று அனைத்து ஊடகங்களையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆட்கொண்டு, இந்தியாவின் தகவல் வளங்களையும் மக்களுடைய வளமான சிந்தனையை சீரழித்து, பயனுள்ள பல கோடி மணி நேரங்களை வீணடித்து துவேஷம் வளர்க்கிறது கிரிக்கெட்.
ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் ஒருநாளாகக் குறைக்கப்பட்டு, தற்போது 20 ஓவர்களைக் கொண்ட போட்டிகளாகச் சுருங்கியதன் பின்னணியில், குறுகிய நேரத்தில் கொள்ளை லாபம் ஈட்டும் முதலாளித்துவ சுரண்டல் உள்ளது. அதனால்தான் உலகக் கோப்பை போட்டிகளை ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டு ஸ்பான்ஸர் செய்கின்றன.
 
ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்காக அறிமுகமான கிரிக்கெட், முதலாளிகளால் வணிகமயமாகி, இந்திய அரசியல்வாதிகளால் தேசப் பற்றின் அளவுகோலாகவும் திரிக்கப்பட்டது. இத்தனைக்கும் கிரிக்கெட் ஒன்றும் இந்தியாவின் தேசிய விளையாட்டல்ல!  நாளிதழ், ரேடியோ, தொலைக்காட்சி, இணையம், செல்பேசி என இன்று அனைத்து ஊடகங்களையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆட்கொண்டு, இந்தியாவின் தகவல் வளங்களையும் மக்களுடைய வளமான சிந்தனையை சீரழித்து, பயனுள்ள பல கோடி மணி நேரங்களை வீணடித்து துவேஷம் வளர்க்கிறது கிரிக்கெட்.
 
இந்திய சினிமா நட்சத்திரங்களின் கருப்புப் பணத்தை முதலீடு செய்யும் கள்ளச் சந்தையாக உருவெடுத்து, சூதாடிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் கைமாறியுள்ள பிறகும் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் கிரிக்கெட் தொடர்பான சமூகச் சீரழிவுகளைக் கண்டுகொள்ளாமல் பூசி மெழுகி வருகின்றனர்.
 
தேசங்களுக்கு இடையிலான நட்புறவை வளர்க்கும் கருவியாகக் கருதப்பட்ட கிரிக்கெட், எதிரி நாட்டின் பெயரில் சமூகத்தில் வெறுப்பை விதைத்து பிரிவினையை வளர்க்கும் மதவெறியர்களின் பகடைக் காயாகவும் மாறியுள்ளது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வீரர்களைக் குத்தகைக்கு வாங்கி விளையாடப்படும் IPL போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களை விலை கொடுத்து வாங்க எந்த அணியும் முன்வரவில்லை என்பதிலிருந்து கிரிக்கெட்டை விளையாட்டாகப் பார்க்கும் போக்கு காலாவதியாகி, அதில் மதவெறியும் மிகைத்துள்ளது உறுதியாகியுள்ளது.
 
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை சீரழித்தும், அவர்களைச் சிறைபிடித்து கொன்றதோடு மட்டுமின்றி ஈழத் தமிழர்களை கொன்றொழித்த இலங்கை நாட்டின் அணியுடன் இந்திய நாட்டு அணி மோதும் போட்டிகளைவிட, இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் ஊடக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை நாட்டின் அணிக்கும், இந்தியர்களை தினந்தோறும் அடித்து விரட்டிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய நாட்டின் அணிக்கும் ஆதரவளித்தால் ஒரு நிலையும், பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளித்தால் இன்னொரு நிலையும் என விளையாட்டு ரசிப்பையும் கூட தேசப்பற்றின் அடையாளமாகத் திரிக்கும் வெவ்வேறு அளவுகோலைக் கொண்டது கிரிக்கெட்.
 
நாட்டுப்பற்றையும், நாடுகளிடையேயான அரசியல் நட்புறவையும் வளர்க்கும் என்று முன்னிறுத்தப்பட்ட கிரிக்கெட், IPL போட்டிகளுக்குப்பிறகு மாநிலங்களுக்கிடையிலான போட்டிகளால் நாட்டில் பிரிவினையை வளர்க்கும் வகையில் மாறிவிட்டது. இந்திய அணிக்காக ஆடிய டோனியும், டெண்டுல்கரும் தங்கள் மாநில அணிக்கு எதிராக விளையாடும்போது தோற்க வேண்டும் என்ற பிராந்திய வெறி வளர்க்கும் விளையாட்டாக கிரிக்கெட் தரமிழந்தது. இந்தியாவுக்காக ஒரே அணியில் ஆடிய ஹர்பஜன் சிங்கும் ஸ்ரீசாந்தும் தாம் ஆடும் மாநில அணிக்காக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட கேவலம் நாடே அறிந்தது!
 
கோடிக்கணக்கில் கிடைக்கும் விளம்பர வருவாய்க்காகவும், புகழுக்காகவும் வீரர்கள் களமிறங்குகிறார்கள் என்றாலும் அரைநிர்வாண நங்கைகளின் குலுக்கல் நடனங்கள் ஏனென்று புரியவில்லை! ஆபாச அசைவுகள் கொண்ட திரைப்பட காட்சிகளுக்குத் தணிக்கை செய்யும் அரசுகள், அரைகுறை ஆடையுடன் விளையாட்டு மைதானத்தில் நேரலை ஒளிபரப்பில், காமக் களியாட்டம் போடுவதற்கோ அவற்றைக் காட்டும் தொலைக்காட்சிகளுக்கோ தடைபோடவில்லை.
 
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்தைக் குற்றவாளி போன்று நடத்தக் கூடாது என்றும், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவராகவே நடத்த வேண்டுமென்றும் மத்திய அமைச்சர் சசி தரூர் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்லர் எனினும் ஸ்ரீசாந்த் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வலிமையான ஆதாரங்கள் இருக்கும் நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு மத்திய அமைச்சரே இப்படி சொல்வதை எவ்வகையில் எடுத்துக் கொள்வது?
 
தாடி வைத்திருந்தார்கள்; தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதற்காக குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான முஸ்லிம்களுக்கும் இதே அளவுகோல் பொருந்தும் என்றாலும் கேடுகெட்ட எந்தவொரு அரசியல்வாதியும் வாதத்திற்காகக் கூட முஸ்லிம்களுக்காக வாய் திறக்கவில்லை என்பதிலிருந்து, கிரிக்கெட் (சூது) மோகம் அரசியல் வியாதிகளின் மூளையை எந்த அளவு மழுங்கடித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
 
இந்த லட்சணத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுப்பதற்குச் சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று வேறு அறிவித்துள்ளனர். பிராந்திய வெறி, மதவெறி, இனவெறி, சூதாட்டம், விபச்சாரம், கருப்புப் பணம், சமூக விரோதிகளின் கொலைக்களம் என்ற அனைத்து தீமைகளையும் உள்ளடக்கியுள்ள கிரிக்கெட், தேசவிரோத விளையாட்டு என்று அறிவித்துத் தடை செய்யப்பட வேண்டியது இன்றைய தேதிக்கு அவசியமான ஒன்றாகும்!

- அதிரைக்காரன் thanks, satyamargam

மௌலான காலித் முஜாஹிதீன் அடித்து படுகொலை:இரமாநாதபுரத்தில் SDPI கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

                                         ramnad...kalith  mujakith 

      உத்தர பிரதேசத்தில் 2007ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் முஜாஹித் விசாரணைக்காக நீதி மன்றம் அழைத்து வரும் வழியில் போலிசாரால் அடித்தே கொலை செய்யப்பட்டுளார் .
இவருடைய கைது தொடர்பாக நியமிக்கப்பட்டிருந்த நிமேஷ் கமிசன் தனது அறிக்கையில் காலித் முஜாஹித் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டிருந்த தாரிக் காசிமி ஆகியோர் அப்பாவிகள்,  அவர்கள் போலியாக கைது செயப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும். இவர்களை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.  மேலும் இவ்விருவரும் விரைந்து விடுதலை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தது.
 
     காவல் துறையினரோ காலித் முஜாஹிதை என்கவுண்டரில் கொன்றுவிடுவோம் என்று பலமுறை மிரட்டியும் உள்ளனர்.  இது நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட இருந்தனர்.  இச்சூழ்நிலையில் அப்பாவியான காலித் முஜாஹித் போலிசாரால் அடித்ஹ்டே கொலை செய்யப்பட்டுள்ளார்.  இம்மரணம் தொடர்பாக காவல்துறையினரை கைது செய்து  சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் கேணிக்கரையில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
 
     இராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ நகர் தலைவர் நியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன்,  மாவட்ட துணை தலைவர் சோமு, பைரோஸ் கான், மாவட்ட பொது செயலாளர் செய்யது ஹாலிது, மாவட்ட செயலாளர்கள் செய்யது இபுராஹீம், ராம கிருஷ்ணன், இராமநாதபுரம் தொகுதி தலைவர் அப்பாஸ் அலி ஆலிம், செயலாளர் சேகு இபுராஹீம், திருவாடனை தொகுதி தலைவர் சஹீர்தீன், முதுகுளத்தூர் தலைவர் இஷாக். பரமக்குடி தொகுதி தலைவர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரை ஆற்றினார். இறுதியாக இராமநாதபுரம் நகர் துணை தலைவர் அப்பாஸ் நன்றி கூறினார். எஸ்.டி.பி.ஐ செயல்வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  
20130527_173738  20130527_173508 20130527_171607

பாஜக விலிருந்து ராம் ஜெத்மலானி 6 ஆண்டுகள் நீக்கம்!

                       29 May 2013 63864
 
     கட்சிக்கு விரோதமாக தொடர்ந்து பேசியதாக மாநிலங்களவை எம்.பி.யும் பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.
 
     பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் ராம்ஜெத் மலானி, கட்சியின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் குறித்தும் அண்மையில் விமர்சித்திருந்தார். குறிப்பாக மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது பாரதிய ஜனதா மென்மையான போக்கை கடைபிடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
 
     இந்நிலையில் ராம்ஜெத் மலானியின் கட்சி விரோத பேச்சு குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் பதில் அளிக்காததால், அவரை கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
 
     இனிமேல் ராம்ஜெத் மலானி மாநிலங்களவையில் சுயேட்சை உறுப்பினராக கருதப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

உ.பி சிறையில் மௌலான காலித் முஜாகித் படுகொலையை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI கண்டன ஆர்ப்பாட்டம்!!

20130528_173334
 
   உத்திர பிரதேசத்தில் கடந்த 2007 இல் ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மௌலான காலித் முஜாகித். அவரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தொடந்து வந்த நிலையில் கடந்த 18 ம் தேதி சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையை கண்டித்தும் தொடரும் இது போன்ற முஸ்லிம் விரோத போக்குகளையும் கண்டித்தும் SDPI கட்சி தேசிய அளவில் கண்டன போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இன்று 28.05.2013 மாலை 4:30 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
     ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சென்னை மாவட்ட பொது செயலாளர் இஸ்மாயில் கனி தலைமை வகித்தார். வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷித், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிஹ், மாநில செயலாளர்கள் கூ ரத்தினம் ,அமீர் ஹம்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
 
     SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதும் காவல் துறையாலும் , உளவு துறையாலும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல் மற்றும் முஸ்லிம் விரோதபோக்கின் ஒரு அடையாளமே மௌலானா காலித் முஜாகித் படுகொலை. கடந்த 2007 ல் டிசம்பரில் ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் போலியாக கைது செய்யப்பட்டார் காலித் முஜாகித்.இதுவரை அவரை விடுதலை செய்ய போராட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்து வந்தன .ஆனால் தங்கள் சதிகள் வெளியே தெரிந்துவிடும் என்பதால் காவல்துறை அதற்கு தடையாக இருக்கிறது. உ.பி அரசு இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி நிமேஷ் கமிஷனை அமைத்தது ஆனால் அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் அறிக்கையை வெளியிடவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லைகடந்த 18 ஆம் தேதி, கோர்ட்டில் ஆஜர்படுத்த 120 கி.மி தூரம் அழைத்துச் சென்ற காவல்துறை ஒரு மருத்துவ மனையில் கொண்டு சேர்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அவரது உடலில் இருந்த காயங்கள் அவர் படுகொலை செய்யப்பட்டதை நிரூபிக்கின்றன.

     இப்படித்தான் தேசம் முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவது தொடர்கிறது. பலர் சிறையிலும், இன்னும் பலர் என்கவுண்டர்களிலும் கொல்லப்படுகின்றனர். தற்போது பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், தமிழக முஸ்லிம் இளைஞர்கள் போலியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மனித உரிமை மீறல் மற்றும் முஸ்லிம் விரோதப் போக்கிற்கெதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. அந்த போராட்டம் இன்னும் தீவிரமடையும். உத்திர பிரதேச அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது. இது மாத்திரம் போதாது. குற்றம் சாட்டப்பட்ட 42 காவல்துறை அதிகாரிகளும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.   படுகொலை செய்யப்பட்ட காலித் முஜாகித் குடும்பத்திற்கு அரசு வேலையும், ரூ. 50 லட்சம் நிவாரண நிதியும் வழங்கவேண்டும். என பேசினார்.

     ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tuesday, May 28, 2013

காலித் முஜாஹிதின் மரணம்:பாரபட்சமற்ற விசாரணை-முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் உறுதி!

                         28 May 2013 package of Rs 45000 crore for Uttar Pradesh
 
     லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தீவிரவாத வழக்கில் சிக்கவைத்து போலீஸ் காவலில் மர்மமான முறையில் காலித் முஜாஹித் மரணமடைந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று உ.பி மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.
 
     இச்சம்பவம் தொடர்பாக உள்ளார்ந்த நேர்மையுடனும் மிக கவனத்துடனும் செயல்படுவோம் என்று தன்னை சந்தித்த முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். காலித் முஜாஹிதின் உறவினர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
 
     மவ்லானா ஃபஸலுர்ரஹ்மான் வாஸி, முஃப்தி அப்துல் இர்ஃபான் மியான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் அளித்தனர்.
 
     முஸ்லிம் தலைவர்களுடனான சந்திப்பின்போது அகிலேஷ் யாதவ் கூறியது: எந்தவொரு நபர் மீது அநீதி இழைக்க மாநில அரசு அனுமதிக்காது. காலிதின் உறவினர்களுடைய கோரிக்கையை ஏற்று இவ்வழக்கின் விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஃபைஸாபாத் ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட்டின் கீழ் நீதி விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. இதுவல்லாமல், சம்பவம் நடந்த உடனே உள்துறை செயலாளர் ராகேஷ், கூடுதல் டி.ஜி.பி ஜாவீத் அக்தர் ஆகியோர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலிதின் போஸ்ட்மார்ட்டம் இரண்டு முஸ்லிம் டாக்டர்கள் அடங்கிய குழுவினர் நடத்தினர். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
 
     கடந்த 2007-ஆம் ஆண்டு உ.பி யின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பாவியான காலித் முஜாஹித் கைதுச்செய்யப்பட்டார். இம்மாதம், 18-ஆம் தேதி பைஸாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு லக்னோ சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் போலீஸ் வேனில் வைத்து காலித் மரணம் அடைந்ததாக போலீஸ் கூறியது. ஆனால், போலீஸின் கொடூரச் சித்தரவதையில் காலித் மரணமடைந்தார் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மியான்மர்:முஸ்லிம்கள் 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற அரசின்கொள்கைக்கு சூகி கண்டனம்!

                      28 May 2013 _41692572_06_2002_afp
 
     யங்கூன்:மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்குஎதிர்கட்சி தலைவர் ஆங்சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
     ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முதன் முதலாக சூகி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களிடம் இதுக் குறித்து சூகி கூறுகையில்,’கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுக் குறித்து எனக்கு தெரியாது.
 
     இத்தகைய முயற்சிகள் சட்டவிரோதமாகும். மக்களிடையே பாரபட்சம் காட்டுவது நல்லது அல்ல.மனித உரிமைகளை பரிசீலிக்காமல் அரசு இம்முடிவை எடுத்துள்ளது என்று சூகி தெரிவித்துள்ளார்.

வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி!-மலேசிய இந்திய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

                         28 May 2013 Waythamoorthy4
 
     கோலாலம்பூர்:மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்து விவகாரங்களின் அமைச்சக பதவி, ஹிண்ட்ராஃப் என்ற ஹிந்துத்துவா ஆதரவு அமைப்பின் தலைவர் வேதமூர்த்திக்கு அளிக்கப்பட்டதற்கு மலேசிய இந்திய காங்கிரஸ்(மஇக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
     மலேசியாவில் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நஜீப் ரஸ்ஸாக் தலைமையிலான அரசு மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இவ்வரசின் அமைச்சரவையில் ஹிந்துத்துவா பாசிச ஆதரவு அமைப்பான ஹிண்ட்ராஃபின் வேதமூர்த்திக்கு இந்திய வம்சாவளி மக்களின் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதுத் தொடர்பாக பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், சுற்றுச் சூழல் அமைச்சருமான பழனிவேலு பேட்டி அளித்தார்.
 
     அவர் தனது பேட்டியில் கூறியது: பிரதமர் நஜீப் ரசாக்கின் நேரடிப் பார்வையில், பிரதமர் அலுவலகத்தில் இந்தத் துறைக்கான துணை அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதை எந்த வகையிலும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுக் குறித்து பிரதமர் நஜீப் ரஸ்ஸாக்குடன் விவாதித்திருந்தோம்.ஆனால், அவர் எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை.
 
     கடந்த பல தசாப்தங்களாக மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் நலன்களை நாங்களே முன்னெடுத்து வருகிறோம் எங்களது கட்சியியே அவர்களது “தாய்க் கட்சி” ஆகும். ஓர் அரசியல் கட்சியான எங்களிடம் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்த துறையை அளிக்காமல், ஒரு தனி நபரான வேதமூர்த்தியிடம் அது அளிக்கப்பட்டது தவறு ஆகும். எங்களது கோரிக்கைகளை பிரதமர் நஜீப் ரசாக் நிராகரித்தால் தமது கட்சி அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று பழனிவேலு கூறினார். அவர்கள் அமைச்சரவையிலிருந்து விலகுவார்களா என்கிற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
 
     வேதமூர்த்தி மஇக-வை எதிர்ப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார் என்றும் அவரால் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் பழனிவேலு மேலும் கூறினார்.

அப்ஸா:உமர் அப்துல்லாஹ்வுக்கு காங்கிரஸ் ஆதரவு!

                        28 May 2013 22_11_50_28_OMAR_ABDULLAH
 
     ஸ்ரீநகர்:ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை(அப்ஸா) கஷ்மீரின் சில பகுதிகளில் இருந்து வாபஸ் பெறவேண்டும் என்ற ஜம்மு-கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
 
     தேவையுடைய பகுதிகளில் மட்டும் அமல்படுத்தவேண்டிய தற்காலிக சட்டமே அப்ஸா. தேவையற்ற பகுதிகளில் இருந்து இச்சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று ஜம்மு-கஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சைபுத்தீன் சோஸ் செய்தியாளர்களிடம் கூறினார். அதேவேளையில் திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு பதிலாக இப்பிரச்சனையை அரசியல் ஆக்குகிறார் முதல்வர் உமர் அப்துல்லாஹ் என்று சோஸ் குற்றம் சாட்டினார்.
 
     ராணுவ மற்றும் துணை ராணுவ தலைமைகளில் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்புடையவர்களின் பொது ஒப்புதலைப் பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Monday, May 27, 2013

பள்ளிவாசல்களில் நூலகம் அமைப்போம்!

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்று.
திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்திலிருந்து, சில மணி நேரங்கள் வழக்கம் போல தாமதமாகத் தான் திருமண நிகழ்ச்சி துவங்கும் என்று தெளிவாகத் தெரிந்தது.
சரி, அதுவரை அருகில் இருக்கும் பள்ளிவாசலுக்குச் சென்று ஏதேனும் வாசிக்கலாமே என்றெண்ணி பள்ளியினுள் நுழைந்தேன். ஏதாவது நூல்கள் இருக்கிறதா என்று பள்ளிக்குள் சுற்றி வர ஆரம்பித்தேன்.

அல்லாஹ் அக்பர்! அங்கு இருந்தவை சவூதியிலிருந்து எப்போதோ இலவசமாக வழங்கப்பட்ட குர்ஆன்கள், இன்னும் சில இந்தியாவில் அச்சான குர்ஆன்களும் (மிகவும் சிதிலமடைந்த நிலையில்), தன்னை எவரும் தொட்டுப் பல வருடங்கள் ஆகின்றன என்பதை தன் மீதிருந்த ஒட்டடையாலும், அழுக்குகளாலும் சொல்லிக் கொண்டிருந்தன.

"மனித உள்ளங்களில் படிந்துள்ள அழுக்கு எண்ணங்களை நீக்க வந்த உலகப் பொதுமறை மீது இத்தனை தூசியா?" என்று எண்ணும் போது மனம் வலித்தது. இனி, எந்த பள்ளிவாசலுக்குச் சென்றாலும் வாசிப்பதோடு நில்லாமல், அங்கிருக்கும் குர்ஆன்களை எடுத்து அதன்மீது தூசு இருப்பின் துடைத்து விட்டு வர வேண்டும் என்று உறுதி பூண வைத்தது.

அதோடு முடிந்து விட்டதா? இல்லை!

முழு மஸ்ஜிதையும் சுற்றி முடிந்தாகி விட்டது. ஆனால், ஒரேயொரு இஸ்லாமிய நூலைக் கூட அங்கு காண முடியவில்லை. அன்றைக்கு இஸ்லாமிய பல்கலைக் கழகங்களாய் திகழ்ந்த பள்ளிவாசலின் நிலை இது. இத்தனைக்கும், இஸ்லாமியர்கள் பெருவாரியாகவும் செல்வச் சீமான்களாகவும் வாழும் ஊர் அது.

இதே மஸ்ஜிதுகள் அன்று - நபியவர்களின் காலத்தில் அறிவின் கேந்திரங்களாகத் திகழ்ந்தன. இன்னும் "வாசிப்பே சுவாசிப்பு!" என்ற மூல மந்திரத்தை திருமறையின் முதல் வசனம் சொல்லித் தர, அதை தன் முதுகுக்குப் பின் வீசி மறந்தவர்களாக நம் இன்றைய சமுதாயம்!
இஸ்லாமிய நூல்கள் மனித மனங்களில் எத்தகைய மனமாற்றத்தை, கல்வி ஞானத்தை வழங்கும் என்பது எதிரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதன் அருமை நமக்குத் தெரியவில்லை
இஸ்லாமிய உம்மாவின் இடைக் கால வரலாறு நமக்கு சொல்லித் தருகிற பாடம் என்ன தெரியுமா? இஸ்லாத்தை அடியோடு வேரறுக்கப் புறப்பட்ட கூட்டத்தினர் அள்ளிச் சென்றதென்னவோ அறிவுக் கருவூலங்களான இஸ்லாமியப் புத்தகங்களைத் தான். எதிரிகளில் சிலர் அவற்றை எடுத்துச் சென்று அழித்தனர். சில ஆற்றைக் கடக்க பாலங்களாக்கினார்கள். "இவைகளை விட்டு வைத்தால், இந்தச் சமூகம் மீண்டும் விழிப்புணர்வு பெற்று எழுந்து விடும்!" என்ற எண்ணம் பயத்தை உண்டாக்க, உடனடியாக அவற்றைத் தீயிட்டு கொளுத்தினர் சிலர்.

அதாவது, இஸ்லாமிய நூல்கள் மனித மனங்களில் எத்தகைய மனமாற்றத்தை, கல்வி ஞானத்தை வழங்கும் என்பது எதிரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதன் அருமை நமக்குத் தெரியவில்லை.

கடல் கடந்து பொருளீட்டச் சென்றிருக்கும் என் இஸ்லாமிய சகோதரனே! உள்ளூர்களில் வாழும் செல்வந்தரே! தயவு கூர்ந்து உங்கள் ஊர்களின் ஒரு சில சிறந்த இஸ்லாமியப் புத்தகங்களை வாங்கி மஸ்ஜிதுகளில் வையுங்கள். பள்ளிக்குள் நுழைகின்ற எவரேனும், ஒரேயொரு செய்தியைப் படித்து அதைச் செயல்படுத்தினாலும் இறைவனிடம் ஈடு இணையில்லா நற்கூலி பெறுவீர்கள்.

உயிருக்குயிரான சத்தியத் தூதர் நபி(ஸல்) அவர்களின் காட்டிய வழிக்கு உரித்தாக்குவோம் நாம் கப்ருடைய வாழ்வை. உள்ளூரில் நம் கட்டிய அழகு கோட்டைகளும், சொகுசு வாகனங்களும், C க்கள் மதிப்பில் இருக்கிற நம் வங்கிக் கணக்குகளாலும் நம் கப்ருக்கு வளங்களை சேர்க்காது. கீழ்க்கண்ட இந்த வலுவான நபிமொழியை மனதில் நிறுத்திப் பாருங்கள்:

ஒருவன் மரணித்த பின்னால் அவனுடைய அனைத்துச் செயல்களும் அவனிடமிருந்து துண்டிக்கப்பட்டு விடும். ஆனால் அவனுக்கான மூன்று செயல்கள் இறுதி நாள் வரை தொடர்ந்து வந்து நன்மை தந்து கொண்டே இருக்கும்.

1. சதக்கத்துல் ஜாரியா (நிலையான தருமம் - அதிலிருந்து, பின் அதிலிருந்து என சங்கிலித் தொடராக பலன்கள் பெறப்படுமே அது)

2. பயன் தரும் கல்வி

3. தன் பெற்றோருக்காகத் துஆச் செய்யும் நல்ல குழந்தை.

நீங்கள் நூலகம் ஒன்று அமைப்பதற்காகச் செய்யவிருக்கும் நற்செயல் முதலிரண்டிலும் அடங்குவதைக் கவனியுங்கள். நீங்கள் வாங்கி வைக்கும் ஒவ்வொரு புத்தகமும் உங்கள் மண்ணறைக்குத் தொடர்ந்து பூத்துக் குலுங்கும் பூக்களை அனுப்பும் என்பது உறுதியாகத் தெரிந்து விட்டபின், ஏன் இன்னும் தயக்கம்?

"அப்படியே நான் வாங்கி வைத்தாலும் எனதூர் பள்ளிவாசலில் வருவோர் போவோர் எடுத்து சென்று விடுவார்களே!" என்ற ஒரு சிலர் கேட்கும் கேள்வி காதில் விழத்தான் செய்கிறது.  என்ன செய்வது? சில நேரம், சில ஊர்களில் அப்படியும் நடந்து விடலாம். இதற்கு ஒரு சிறிய யோசனை உள்ளது.

புத்தகத்தை வாங்கி பள்ளிவாசலில் வைக்கும் முன், புத்தகத்தின் உள் பகுதியில் “அன்பரே! இது வக்பு செய்யப்பட்ட நூல். இதை நீங்கள் திருடிச் சென்றால் கியாமத் நாளன்று கணக்கு தீர்க்கப்படும்!" என்று எழுதி வைத்துவிட வேண்டியது தான்.

இதற்கு மேலும் சுரணை இல்லாமல் ஒருவர் திருடிச் செல்வர் எனில், நம்மால் என்ன செய்ய முடியும்? கணக்கு தீர்ப்பவனிடம் விட்டு விட வேண்டியது தான்.

ஆனால், நாம் வைக்கும் எண்ணத்திற்கு கண்டிப்பாக கூலி உண்டு என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக் கனியாகும். நல்ல எண்ணத்தோடு, நாம் செய்யும் செயலுக்குத் தக்கக் கூலி உண்டு என்ற எதிர்பார்ப்போடு நாமும் செய்வோம், நண்பர்களை செய்யத் தூண்டுவோம். ஒரே ஊராக இருந்தால் கூட்டாக சேர்ந்து மாதம் இரண்டு மூன்று என்று சேர்த்தாலே ஒரு நூலகம் ஆகிவிடும்.

நல்ல செயல்களில், சிந்தனைகளில் கூட்டு சேர்கின்றன நல்ல நிலையை இறைவன் தருவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

- ஹஸனீ thanks, satyamargam