Friday, May 31, 2013

ஆட்சியாளர்களிடம் கேள்விகள் எழுப்பாமல் இருக்கவே கறுப்புச் சட்டங்கள் – எஸ்.ஏ.ஆர் கிலானி!

                        31 May 2013 SAR GEELANI
 
     திருவனந்தபுரம்:ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் குறித்து மக்கள் கேள்விகள் எழுப்பாமலிருக்கவே யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்களை ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது என்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், மனித உரிமை ஆர்வலருமான எஸ்.ஏ.ஆர் கிலானி கூறினார்.
 
     கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட மாநாட்டில் கலந்துகொண்டு எஸ்.ஏ.ஆர்.கிலானி உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியது:மக்களை பீதியில் ஆழ்த்தி, வாயை அடைப்பதற்கு கறுப்புச் சட்டங்களை அதிகார வர்க்கம் மேற்கொள்கிறது. ஆனால், ஒரு குடிமகனை கொல்ல முடிந்தாலும், அவனது மன உறுதியை குலைப்பதற்கு யாராலும் முடியாது.யு.ஏ.பி.ஏ சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களும், தலித்துகளும், பழங்குடி மக்களும் ஆவர்.
 
     நீதி மறுக்கப்படும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும் போராடவேண்டியது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை தொடர்பான கடமையாகும். அடக்குமுறையாளர்கள் எப்பொழுதுமே ஆட்சியாளர்கள்தாம். ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். தொடர் போராட்டங்களின் மூலமே உரிமைகளை பெற முடியும். நமது முன்னோர் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக மட்டுமே போராடவேண்டி இருந்தது. ஆனால், இன்று நாட்டை ஆக்கிரமிக்கும் நூற்றுக்கணக்கான கிழக்கு இந்திய கம்பெனிகளுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு எஸ்.ஏ.ஆர்.கிலானி கூறினார்.

0 comments:

Post a Comment