Wednesday, May 29, 2013

உ.பி சிறையில் மௌலான காலித் முஜாகித் படுகொலையை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI கண்டன ஆர்ப்பாட்டம்!!

20130528_173334
 
   உத்திர பிரதேசத்தில் கடந்த 2007 இல் ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மௌலான காலித் முஜாகித். அவரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தொடந்து வந்த நிலையில் கடந்த 18 ம் தேதி சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையை கண்டித்தும் தொடரும் இது போன்ற முஸ்லிம் விரோத போக்குகளையும் கண்டித்தும் SDPI கட்சி தேசிய அளவில் கண்டன போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இன்று 28.05.2013 மாலை 4:30 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
     ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சென்னை மாவட்ட பொது செயலாளர் இஸ்மாயில் கனி தலைமை வகித்தார். வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷித், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிஹ், மாநில செயலாளர்கள் கூ ரத்தினம் ,அமீர் ஹம்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
 
     SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதும் காவல் துறையாலும் , உளவு துறையாலும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல் மற்றும் முஸ்லிம் விரோதபோக்கின் ஒரு அடையாளமே மௌலானா காலித் முஜாகித் படுகொலை. கடந்த 2007 ல் டிசம்பரில் ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் போலியாக கைது செய்யப்பட்டார் காலித் முஜாகித்.இதுவரை அவரை விடுதலை செய்ய போராட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்து வந்தன .ஆனால் தங்கள் சதிகள் வெளியே தெரிந்துவிடும் என்பதால் காவல்துறை அதற்கு தடையாக இருக்கிறது. உ.பி அரசு இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி நிமேஷ் கமிஷனை அமைத்தது ஆனால் அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் அறிக்கையை வெளியிடவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லைகடந்த 18 ஆம் தேதி, கோர்ட்டில் ஆஜர்படுத்த 120 கி.மி தூரம் அழைத்துச் சென்ற காவல்துறை ஒரு மருத்துவ மனையில் கொண்டு சேர்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அவரது உடலில் இருந்த காயங்கள் அவர் படுகொலை செய்யப்பட்டதை நிரூபிக்கின்றன.

     இப்படித்தான் தேசம் முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவது தொடர்கிறது. பலர் சிறையிலும், இன்னும் பலர் என்கவுண்டர்களிலும் கொல்லப்படுகின்றனர். தற்போது பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், தமிழக முஸ்லிம் இளைஞர்கள் போலியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மனித உரிமை மீறல் மற்றும் முஸ்லிம் விரோதப் போக்கிற்கெதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. அந்த போராட்டம் இன்னும் தீவிரமடையும். உத்திர பிரதேச அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது. இது மாத்திரம் போதாது. குற்றம் சாட்டப்பட்ட 42 காவல்துறை அதிகாரிகளும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.   படுகொலை செய்யப்பட்ட காலித் முஜாகித் குடும்பத்திற்கு அரசு வேலையும், ரூ. 50 லட்சம் நிவாரண நிதியும் வழங்கவேண்டும். என பேசினார்.

     ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment