Thursday, May 19, 2011

மெரீனாவில் மாயமான சிறுமி அரசு மருத்துவமனை அருகே மீட்பு

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் காணாமல் போன 5 வயது சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்டாள். தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியை மருத்துவமனை போலீசார் மீட்டனர்.

ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். அவரது மனைவி ஹசீனா. அவர்களுக்கு தம்மன்னா, ரிகாத் என்னும் 5 வயது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

சையது நூர் அகமது கடந்த 11-ம் தேதி தனது குடும்பத்துடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார். அங்கே பஞ்சு மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமி திடீர் என்று மாயமானாள்.

மகளைக் காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கடற்கரை முழுவதும் தேடினர். ஆனாலும் பலனில்லை. இதையடுத்து
அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசாக் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனாலும் சிறுமி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சிறுமியின் படத்துடன் கூடிய போஸ்டர்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவிலும், திருப்பதி கோயில் அருகிலும் ஒட்டப்பட்டது. துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டது. அந்த போஸ்டரில் இருந்த எண்ணைப் பார்த்து ராஜவேலு என்னும் வாலிபர் தம்மன்னாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் சிறுமியை திருப்பதி கோயில் அருகே ஒரு பெண்ணுடன் பார்த்ததாகத் தெரிவித்தார்.

நூர் முகமது இது பற்றி போலீசில் கூறினார். உடனே தனிப்படை போலீசார் திருப்பதிக்கு விரைந்தனர். இந்நிலையில் சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு மருத்துவமனை அருகே தனியாக நின்று கொண்டிருந்தாள். அவளை அரசு மருத்துவமனை போலீசார் மீட்டனர். திருப்பதியில் பார்த்ததாக கூறப்பட்ட சிறுமி சென்னை அரசு மருத்துவமனை அருகே எப்படி வந்தாள் என்பது தம்மன்னாவிடம் விசாரித்த பிறகு தான் தெரிய வரும்.

இதற்கிடையே மெரினா கடற்கரையில் கடந்த 15-ம் தேதி ஐஸ்வர்யா(11) என்ற மன வளர்ச்சி குன்றிய சிறுமி காணாமல் போனாள். கலங்கரை விளக்கம் அருகே அழுது கொண்டிருந்த சிறுமியை மீனவர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். பிறகு போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

0 comments:

Post a Comment