Showing posts with label nandri adirai aalim. Show all posts
Showing posts with label nandri adirai aalim. Show all posts

Wednesday, May 11, 2011

அந்த நாள்


பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
''அதற்கு என்ன நேர்ந்தது?'' என்று மனிதன் கேட்கும் போது-
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
(அத்தியாயம் : 99)



சூராவைப் பற்றி ..!இந்த சூரா அளவிலே சிறியதாக இருந்தாலும் அது உள்ளத்திலே ஏற்படுத்தும் தாக்கத்திலும் கருத்தாழத்திலும் மனித மனதை உசுப்பி சிந்தனையைத் உண்மையை உணரச் செய்வதிலும் அளவு கடந்தது.


இந்த பூமிக்கு என்ன நேர்ந்து விட்டது? அதனை நடுங்க வைத்துப் பெயர்த்து விட்டவன் யார்? என்று மூச்சுத் திணறிக் கொண்டு மனிதன் கேட்டுக் கொண்டிருப்பான். அவனுடைய கேள்விக்கு பதிலை பூமியே சொல்லும்.


அந்நாளில் அது தன் விஷயங்களை (எல்லாம்) அறிவிக்கும். ஏனென்றால் (இவ்வாறே) உனதிறைவன் வஹீ மூலம் தனக்குக் கட்டளையிட்டான் (என்று கூறும்).


ஆம்! மேற்குறிப்பிட்டவாறு அதிர்ந்த நடுங்கி வெடித்துச் சிதறி தன்னத்தே கொண்டிருந்தவைகளையெல்லாம் வெளியில் சிதறி விடுமாறு உம்முடைய இறைவன் தான் தனக்கு அறிவித்தான். அந்தக் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு சரணடைந்து விட்டதாகவே அது கூறும். அடக்கஸ்தலங்களை விட்டு வெளியேறும் காட்சியை குர்ஆன் இவ்வாறு வர்ணிக்கிறது.


அந்த நாளில் மனிதர்கள் (நன்மையோ, தீமையோ) தங்கள் வினைகளைக் காணும் பொருட்டு (பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.


மேற்படி பயங்கர நிகழ்வுகள் நடந்து முடிவதற்குள் நீதி விசாரணை நாள் வந்து விடும். அப்போது மனிதர்கள் கப்றுகளிலிருந்து வெளிப்படுவார்கள். பூமியை எங்கு நோக்கினும் இதே காட்சி தான் தென்படும். மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் வெளிப்படும் நாள் அது. வெளிப்பட்டவர்கள் எங்கும் பார்க்காமல், எதனையும் நோக்காமல் தலைகுனிந்து பார்வை தாழ்த்தி அழைப்பாளனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பார்கள். எங்கும் மயான அமைதி நிலவும். அன்றைய தினம் யாரும் யாரையும் பார்க்க முடியாது. பேச முடியாது. அங்கு எதுவுமே பயனளிக்கப் போவதில்லை.


அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றவர்களைக் கவனிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டு விடும் (81:37)


ஒரு பயங்கரமான பேரதிர்ச்சி.. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிகழக் கூடிய சில மகத்தான மறுமைக் காட்சிகள்.. இவற்றைப் பார்த்த மனிதன் ஏற்படக் கூடிய அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.. இதோ மனிதர்கள் எழுப்பப்படும் நாள்.. .. நீதி விசாரணை நடத்தப்படும் நாள்.. .. கூலி கொடுக்கப்படும் நாள்.. கண்ணெதிரே தோன்றுகிறது. இவ்வளவையும் அதாவது மறுமையின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரத்தினச் சுருக்கமாக சின்னச் சின்ன வசனங்களினூடாக ஒரு சிறிய சூராவில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளமை அல்குர்ஆனுக்குரிய அற்புதத் தன்மையாகும்.


அழிவு நாள் பேரதிர்ச்சி 
இப்பொழுதெல்லாம் நாம் பல்வேறு அதிர்ச்சிகள் சூழப்பட்டு ஓர் உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூமியதிர்ச்சித் தாக்குதல்கள், குண்டு அதிர்ச்சிகள், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இப்படியாக உளரீதியாகவும், சடரீதியாகவும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிகள் மலிந்த சூழலிது. ஆனால் பரிச்சயமான இத்தகைய அதிர்ச்சிகளைப் போன்றதல்ல அந்த அழிவு நாளின் பேரதிர்ச்சி.



பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டால், பூமி தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில்) எறிந்து விடும் சமயத்தில் அந்த அதிர்ச்சியையும் அதன் விளைவுகளையும் இங்கே சுட்டிக் காட்டுகின்றன.


ஆம்! அப்போது அகன்று விரிந்த, ஆழ அகலம் காண முடியாத பிரம்மாண்டமான மலைகளை முளைகளாகக் கொண்டிருக்கக் கூடிய, வானுயர்ந்த கட்டடத் தொகுதிகளையும், கோடான கோடி உயிரினங்களையும் உயிரற்றவைகளையும், தாவரங்களையும் இன்னும் பலவற்றையும் தன்னத்தே கொண்டு சிறிதும் அசைந்து கொடுக்காது உறுதியாகவும் நிலையாகவும் காணப்படுகின்ற இந்தப் பூமி ஓர் அதிர்வு அதிர்ந்து நடுநடுங்கி வெடித்துச் சிதறி சின்னாபின்னமாகும். அந்த நடுக்கம் சாதாரண நடுக்கமல்ல. அது பயங்கரமானது அந்த நாளின் அதிர்ச்சியைப் பற்றி அல்குர்ஆனில் மற்றுமொரு இடத்தில் குறிப்பிடும் போது,


மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர். எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல் ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (22:1-2)


இத்தகைய பேரதிர்ச்சி ஏற்பட்டால் பூமிக்குள் புதையுண்டு கிடப்பவற்றையெல்லாம் அது வெளியே துப்பி விடும். அது நீண்ட காலமாக தனக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருந்த மனித உடல்களாக இருக்கலாம். கனிப் பொருட்களாக இருக்கலாம். அல்லது வேறு சடப் பொருட்களாக இருக்கக் கூடும். அத்தகைய சுமைகளின் அழுத்தத்திலிருந்து இப்பொழுது பூமி மீட்சி பெறப் போவது போல அந்தக் காட்சி இருக்கும்.


கேள்வியும் பதிலும்திடுகூறாக இவ்வளவும் நடந்து விட்டால் அவன் ஏற்கனவே நிலநடுக்கங்களையும் கனல் கக்கும் எரிமலை வெடிப்புக்களையும் சந்தித்திருந்தாலும் கூட.. இந்த அதிர்ச்சியானது வித்தியாசமான விசித்திரமான பரிச்சயமே இல்லாத வியப்பூட்டக் கூடிய அதிர்ச்சியாகும். ஒரேயொரு அதிர்ச்சி.. .. அவ்வளவுதான் பூமியின் மீதுள்ள அனைத்தும் குடை சரிய ஆரம்பித்து விடும். மனிதன் தனக்கு எட்டக் கூடியதைப் பிடித்துத் தாங்கி நிமிர்ந்து நிற்க முயற்சிப்பான். முடியவே முடியாது. இப்பொழுது என்னவோ ஏதோ நடக்கப் போகிறது என மனிதன் வியந்து போய் கேட்பான்.


மனிதன் (திடுக்கிட்டு) இதற்கென்ன நேர்ந்தது? (ஏன் இவ்வாறு அதிர்ந்தது) என்று கேட்பான்.
அந்தக் கணத்தின் பயங்கரத்தை வர்ணிக்க வார்த்தைகளால் முடியாது.
எங்கு செல்கிறார்கள்?
தன்னுடைய வினைகளை காணும் பொருட்டு.. ..!



கண்குப் பார்த்தறிவதற்காக செல்கிறார்கள். அன்றைய தினம் அவனுடைய கணக்குகள் முடிக்கப்படும். அவனுடைய வினைச்சீட்டு அவனுக்குக் காண்பிக்கப்படும். குற்றவாளிகளைப் பொறுத்தமட்டில் படைத்த ரப்புக்கு முன்னால் தனது பாவச் செயல்கள் அம்பலத்துக்கு வரும் வேளை வெட்கித் தலைகுனிந்து தன்னுடைய விரல்களைக் கடித்துக் கொண்டு அழுது பிரலாபிப்பதை தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்?


எவன் தன்னுடைய இடக்கையில் வினைச்சீட்டு கொடுக்கப் பெறுவானோ அவன், என்னுடைய வினைச்சீட்டு கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா? என்னுடைய கணக்கையே இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டாமா? என்னுடைய பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே! என்னுடைய செல்வாக்கும் என்னை விட்டு அழிந்து விட்டதே! என்று பிரலாபிப்பான்.


அணுவுக்கும் திணிவுண்டு


இனி அமல் மீஸான் என்ற தராசில் நிறுக்கப்படும்.


ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (அங்கு) அதனையும் கண்டு கொள்வார். (அவ்வாறே) எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாரோ அதனையும் (அங்கு) கண்டு கொள்வார்.


வாழ்க்கைக் களத்திலே மனிதன் பிரம்மாண்டமான, மலையளவு பாவகாரியமாக இருந்தாலும்சரி. ஒரு அணுவளவு நன்மையான காரியமாக இருந்தாலும் சரி. இரண்டையும் அவன் அலட்டிக் கொள்வதில்லை. அலட்சியம் செய்து விட்டு மனம் போன போக்கில் செயல்படுகிறான்.


ஆனால் மறுமை நாளிலோ இறைவனுடைய தராசுத் தட்டிலே மனிதனுடைய பார்வையிலே எத்தகைய கணிப்பீடும் பெறுமதியும் அற்ற அணுவளவு செயலுக்குக் கூட, அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும்சரி. பெறுமதி உண்டு. அதனை அவன் கண்டு கொள்வான். எந்த ஒன்றையும் அத்தராசு விட்டு வைக்காது. உடலையும், உள்ளத்தையும் சிலிர்க்கச் செய்யும் அத்தராசுக்கு நிகர் அதுவே. அப்போது தான் மனிதன் உணர்ந்து கொள்ளப் போகிறான். ஆனால் அது காலம் கடந்த ஞானமல்லவா?


சூரா ஏற்படுத்தும் தாக்கம்


இப்படியாக இந்த சூரா வர்ணிக்கும் மறுமைக்காட்சிகளை கவனத்துடன் உணர்வுப்பூர்வமான உள்வாங்கலில் மனிதன் தன்னுடைய பாதங்களுக்குக் கீழால் இருப்பவைகளையெல்லாம் அதிர்ந்து நடுங்கி அசைவது போல் உணர்வான். இந்தப் பூமி அப்படியே அசைந்து நகர்ந்து பெயர்க்கப்படுவது போல் அவனுக்குத் தோன்றும். இந்த உணர்வு அவனை மறுமைக்கே அழைத்துச் செல்லும். மறுமை உணர்வுகள் அவனது உள்ளத்தில் அலை மோதும். உலகியல் சிந்தனைகளும், மனோஇச்சைகளும், தணிந்து விடும். இந்த உலகில் அவன் நிலையானவைகள் எனக் கருதிக் கொண்டிருந்தவையெல்லாம் அழிந்து விடக் கூடியவை என அவனுக்குப் புரியும். அப்போது அவனுடையஈமான் அதிகரிக்கும். உள்ளத்திலே ஊற்றெடுக்கும் அந்த ஈமான் அவனுடைய உறுப்புக்களுக்கும் பாய்ச்சப்பட்டு செயல்பாடுகளாக வெளிப்பட ஆரம்பிக்கும். இதுவே சூராவின் எதிர்பார்ப்பும் கூட. சிந்திப்போம். செயல்படுவோம்.

Thursday, April 28, 2011

யானை வரலாறு சுருக்கம்


நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.அத்தியாயம் - 105

அபீஸீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷியின் பிரதிநிதியாக யமனில் ஆட்சி செய்த அப்ரஹா என்பவன், அரேபியர்கள் மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வை ஹஜ் செய்வதையும் அதனை அவர்கள் புனிதப்படுத்துவதையும், மிகவும் தூரமான பகுதிகளிலிருந்தெல்லாம் அங்கு வருவதையும் கண்டபோது ஸன்ஆ என்ற ஊரில் பொரிய சர்ச் ஒன்று கட்டினான்.

ஹஜ்ஜீக்கு செல்லும் அரபியரை அதன் பால் திருப்பிவிட வேண்டும் என்பதற்காக இதைக் கேள்வியுற்றதும் அரபுக் குலங்களில் ஒன்றான பனூ கினானாவைச் சேர்ந்த ஒருவன் இரவில் அந்த சர்ச்சினுள் நுழைந்து அதன் சுவர்களில் மலத்தைத் தேய்த்து விட்டான். இதைக் கேள்வியுற்றதும் அப்ரஹா கொதித்தெழுந்தான். ஆறாயிரம் போர் வீரர்கள் கொண்ட மிகப்பெரும் படையைத் தயார்படுத்தினான். அப்படையில் ஒன்பது யானைகள் இருந்தன. அவற்றில் மிகப்பெரிய யானையைத் தனக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு கஃபதுல்லாஹ்வை இடிப்பதற்காக அப்படையுடன் புறப்பட்டான்.. மக்காவிற்கு அருகே வந்தடைந்ததும் தன் படையைத் தயார்படுத்தி மக்காவிற்குள் நுழைய ஆயத்தமானான். எனினும் அவன் யானை மக்காவை நோக்கிச் செல்லாமல் படுத்துவிட்டது. அவர்கள் யானையை வேறு திசைகளின் பக்கம் திருப்பினால் எழுந்து ஓட ஆரப்பிக்கிறது. மக்காவை நோக்கித் திருப்பினால் படுத்துக்கொள்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது "அபாபீல்" பறவைக் கூட்டங்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். அவை நரக நெருப்பில் சூடேற்றப்பட்ட சிறு சிறு கற்களை அவர்கள் மீது எறிந்தன. ஒவ்வொரு பறவையும் கொண்டைக் கடலை அளவிலான மூன்று கற்களைச் சுமந்து வந்தது. ஒன்று அவற்றின் அலகிலும் மற்ற இரண்டு இரு கால்களிலும் இருந்தன. அக்கற்கள் ஒருவன் மீது விழுந்துவிட்டால் அவனுடைய உறுப்புகள் துண்டு துண்டாகி சிதைந்து அவன் அழிந்தேபோவான். அவர்கள் பயந்து ஓடும்போது வழியிலேயே விழுந்து அழிந்தனர்.

அப்ரஹாவின் கதி என்னவெனில், அல்லாஹ் அவன் மீது ஒரு நோயை அனுப்பினான். அதன் காரணமாக அவனது விரல்கள் அழுகி விழுந்தன. ஸன்ஆவை அடைவதற்குல் அந்நோய் அவன் உடல் முழுவதும் பரவி அங்கேயே செத்து மடிந்தான். பிறகு யானைப் படையினருக்கு நேர வேண்டியது நேர்ந்தது பிறகு குரைஷிகள் அச்சமற்றவர்களாக வீடு திரும்பினர். இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் பிறப்பதற்கு ஐம்பது நாள்களுக்கு முன்பு நடைப்பெற்றது.

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்


ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக 'விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு' என்றான்.
'தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே' என்றேன். அதற்கு ஷைத்தான் 'நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப் போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம் இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!' என்றான். அவன் பேச்சில் மயங்கி உறங்கி விட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து 'வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது' என்றான்.
நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் 'உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை முழுமையாக அனுபவி' என்றான்.
நான் 'மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்', என்றேன். அதற்கவன் 'பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாது' என்றான்.
நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில் உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான்.
நான் 'அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்' என்றேன். 'இல்லை, இல்லை. நீ இரவு படுக்குமுன் துஆ செய்யலாமே' என்றான்.
நான் 'உம்ரா செல்ல நாடியுள்ளேன்' என்றேன்.'நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளு தானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்' என்றான்.
நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் ' நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?' என்றான்.
நான் 'பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம்' என்றேன். உடனே அவன் 'மார்க்க மேதைகளிடையே இசை, பாடல் குறித்து கருத்து வேற்றுமை உள்ளது' என்றான். 'இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான் படித்துள்ளேன்' என்றேன். உடனே அவன் ' அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது' என்றான்.
அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் 'என்ன வெட்கப்படுகிறாய்? முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!' என்றான். 'அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்' என்றேன். அவன் சிரித்து விட்டு 'இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான் ' என்றான்.
நான் 'தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்' என்றேன். உடனே அவன், 'ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?' என்றான். 'என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது' என்றேன். உடனே அவன் 'இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன் அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்த வேலையை செய்' என்றான்.
நான் 'இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார் ' என்றான்.
நான் 'இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்?' என்றேன்.அதற்கு அவன் 'அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன.' என்றான்.
நான் 'இமாம் புகாரி எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என் வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன்' என்று கோபமாகக் கூறினான்.
நான் 'ஸலாவுதீன் அய்யூபி எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'அவரைப் பற்றி பேசாதே. என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார்' என வெறுப்போடு கூறினான்.
நான் 'முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்' என இழுத்தேன். அதற்கு அவன், 'நீ என்னை கோபப்படுத்துகிறாய். அவருடைய பேச்சும், எழுத்தும் எரி நட்சத்திரம் போன்று என்னை சுட்டெரிக்கிறது' எனக் கத்தினான்.
நான் 'பிர்அவ்ன் எப்படி? ' என்றேன். அதற்கு அவன் 'அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன் வெற்றி பெற விரும்பினேன்' என்றான்.
நான் 'அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்?' எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன், 'அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள்' என்று உற்சாகமாகக் கூறினான்.

நான் 'அபூ லஹப் எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'நாங்கள் என்றென்றும் இணைபிரியாத தோழர்கள்' என்றான்.
நான் 'லெனின் எப்படி?' என்றேன். அதற்கு அவன். 'என் சிறந்த சீடர்;, ஸ்டாலின் என்ற என் சிறந்த தளபதியை உருவாக்கினார்,' என்றான்.
நான் 'மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி?' என இழுத்தேன். உடனே அவன் 'அவை தான் என் வேத புத்தகங்கள்' என்றான்.
நான் 'மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'அல்-ஜன்னத், சமரசம், விடியல் வெள்ளி, அல் முபீன், ஒற்றுமை, முஸ்லிம் பெண்மணி பற்றித் தானே கேட்கிறாய்? அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றை நான் படிப்பது வீண் விரயம்' என்றான் கேலியாக.

நான் 'டி.வி., சாடிலைட் சேனல் பற்றி' என்றேன். அதற்கு அவன் 'அவை தான் மக்களை என்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை' என்றான்.
நான் 'பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு' என்றேன்.
அதற்கு அவன் 'அவை மட்டுமல்ல சன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ் இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள் பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவை மூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்' என்று பெருமையாகக் கூறினான்.

நான் 'காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான் வரவேற்கிறேன்' என்றான்.
நான் 'சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப்', என்றான்.

நான் 'கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'என் எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து, அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன்' என்று பெருமையோடு கூறினான்.

நான் 'இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'நீ புறம் பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே' என்றான்.
நான் 'வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'அதுவே என் புகுந்த வீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும் அதுவே,' என்று பெருமையாகக் கூறினான்.
நான் 'மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'பேராசை, சந்தேகம், வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது, நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்'. ஆமாம், என்ன நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்று வினவினான்.

'சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்?' என்று நான் வினவினேன். அதற்கு அவன் 'அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான்' என்றான்.
'சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்?' என்று நான் வினவினேன்.அதற்கு அவன் 'அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும், கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடி செய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன்' என்றான்.
'நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது?' எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன் 'சபாஷ். நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது. ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது. ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச் செய்யலாம். 1. தந்தை, 2. சகோதரன், 3. கணவன், 4. மகன். சுருங்கச் சொன்னால் ஒரு பெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம்' என உற்சாகம் கொப்பளிக்கக் கூறினான்.

நான் 'இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'சினிமா, இசை, இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடை உடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும் ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான்' என்றான்.

நான் 'சரி நவீன, புதிய கலாச்சாரம் ((Modern Culture-Society)) பற்றி கூறேன்' என்றேன்.
அதற்கு அவன் 'என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே?' என்றான்.

நான் 'மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமே வெவ்வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள்' என்றான்.

நான் 'ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய்' என்றேன்.
அதற்கு அவன் கோபமாக 'அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள். நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள்; திக்ர் செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள்' என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.

நான் 'காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்?' என்று கேட்டேன்.
அதற்கு அவன் உற்சாகமாக, 'நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின் இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாக என் வலையில் வீழ்ந்தான்' என்று கூறினேன்.

நான் 'பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான்' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னை எதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என் அடிமையானான்' என்று கூறினான்.

நான் 'ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்?' என்று கேட்டேன்.
அதற்கு அவன் 'அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்; அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு தேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன்' எனக் கூறினான்.

நான் 'உன் துஆ எது?' என்றேன். அவன் 'சினிமா பாடல்கள்' என்றான்.
நான் 'உன் குறிக்கோள் என்ன?' என்றேன். அதற்கு அவன் 'மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது' என்றான்.
நான் 'எது உன்னை அழிக்கும்?' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'குர்ஆனில் உள்ள ஆயத்துல் குர்ஸி 2வது அத்தியாயம் 255வது வசனம் யார் ஓதுகிறார்களோ அவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான்,' என்று கூறினான்.

நான் 'அடடே! அப்படியா', எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன். உடனே ஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான்.
மூலம் - இஸ்லாம்வெப்.காம் - ஷேக் அயாத் அல் கர்னி
எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
பார்த்தீர்களா ஷைத்தானுடைய விஷம, விபரீத விளையாட்டை! எப்படி மனிதர்களை அவன் வழிகெடுக்கிறான் பாருங்கள். அவனுடைய வேலை நம்மை நேரடியாக நன்மை செய்வதை தடுப்பது அல்ல - அதைத் தாமதப்படுத்தி அதன் மூலம் மறைமுகமாகத் தடுப்பதே. இந்த உரையாடலை எடுத்துக் கொண்டால்,

1. பஜ்ர் தொழ எழுபவரை என்ன கூறி தடுத்தான் - 'இப்பொழுது தான் பாங்கு கூறினார்கள். இகாமத் வரை சிறிது தூங்கு'. பின்பு, இகாமத் கூறும்பொழுது 'விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆகவே சிறிது தூங்கு' – ' அப்படியே தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி உள்ளதே' என எப்படி நம்மை தொழுவதிலிருந்து தடுக்கிறான் பார்த்தீர்களா!
2. துஆ ஓத ஆரம்பித்தால், உடனே 'இரவு படுக்கும் முன் ஓதலாமே' எனக் கெடுப்பான். தூங்கும் முன் துஆ ஓத ஆரம்பித்தால், 'களைப்பாக இருக்கிறதே' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஓதாமல் தூங்கச் செய்து விடுவான்.
3. உம்ரா செல்ல நாடினால், சுன்னத்தை விட பர்ளு முக்கியம். எனவே, ஹஜ் செய்யலாமே, என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கெடுப்பான். பின்பு ஹஜ் காலத்தில் தங்கை நிக்காஹ், மகனின் படிப்பு செலவு, வீடு கட்டுவது என பல்வேறு செலவினங்களை முன்னிறுத்தி ஹஜ் செய்வதையும் தடுப்பான்.
4. ஹராமான காரியங்களை - இசை போன்றது - ஹலால் மாதிரி காட்டுவான். ஹதீஸ் கலை வல்லுநர்களிடையே கருத்துவேற்றுமை உள்ளது - பலஹீனமான ஹதீஸ் என தவறான எண்ணத்தை ஏற்படுத்துவான்.
5. அந்நியப் பெண்ணை பார்க்கலாம் - 'முதல்பார்வைக்கு அனுமதி உள்ளது' என்பான் - பின்பு, 'அழகை கலைக்கண் கொண்டு ரசிக்கலாம்' எனப் பாவம் செய்யத் தூண்டுவான்.
6. தாவா வேலை செய்வதைத் தடுக்க அவன் ஏற்படுத்தும் தீய எண்ணம் 'நாம் பெருமைக்கு செய்கிறோம்' எனத் தடுப்பது அல்லது நல்ல நோக்கில் செய்து வரும்போது மனதில் பெருமையை உண்டாக்குவது.
மேலும், மார்க்க அறிஞர்களை, ஆண்களை, பெண்களை, இளைஞர்களை எவ்வாறெல்லாம் வழிகெடுக்கின்றான் எனப் பார்த்தோம். அவனுடைய வழிமுறைகளை அறிந்த நாம் அவற்றிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வதே சிறந்தது - நம்மை நரக நெருப்பில் வீழ்வதை விட்டும் தடுக்கும்.
அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,

' நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள். ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி ஆவான் ' குர்ஆன் 2 : 208
ஆகவே, இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும் ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம். நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம் செயல்பட அறிவுறுத்துவோம்.