Monday, July 2, 2012

சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வோர் 6 மாதங்கள் ஆனாலும் ஜாமீன் கேட்கக்கூடாது. கருணாநிதி !


 தமிழகம் முழுவதும் ஜுலை 4-ம் தேதி நடக்கும் அறப்போராட்டத்தில் கைதாகி சிறைக்கு போனால், ஜாமீன் கேட்க கூடாது என்று தமது கட்சியினருக்கு திமுக தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.  
அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து வரும் 4-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. 
இந்நிலையில்,சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரத்தில் நேற்று நடந்தது. 

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "திமுகவின் வரலாறு போராட்ட வரலாறு.ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஆட்சிக்காக பாடுபவர்கள் அல்ல நாங்கள்.ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம்.ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவோம்.என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கு இணங்க,தொடர்ந்து இளம் வயது முதல் இன்று வரை, பெரியார் காலமாக இருந்தாலும்,அண்ணா காலமாக இருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.
 

தொடர்ந்து நாங்கள் நடத்துகின்ற இந்த இயக்கம் மக்கள் பிரச்னைக்காக,அதுவும் திராவிட மக்களுக்காக, அடிமைப்படுக்கிடக்கின்ற ஒரு சமுதாயத்தை எழுச்சி பெற செய்வதற்காக தொடங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.
 


திராவிட இயக்கம் தற்போது திமுகவாக இருந்தாலும்,திராவிடர் கழகம்,நீதிகட்சி என்று பல்வேறு நிலைகளில் திராவிடர்களை எழுச்சிபெறச் செய்தது.அண்ணா ஆட்சியில் இருந்த காலத்திலும்,அவரது மறைவுக்கு பிறகும்,அந்த ஆட்சியை தொடர்ந்து நானே 5 முறை முதலமைச்சராக இருந்து நடத்தி பல தியாகங்களை,போராட்டங்களில் ஈடுபட்டு,நெருக்கடி கால கொடுமைகளை அனுபவித்தோம்.
 

இன்று எனக்கு முன்னால் நாங்கள் எதற்கும் தயார்.நெருப்பில் இறங்கவா, பட்டினிகிடக்கவா என்று கூறும் வீர வாலிபர்களை,திராவிட செல்வங்களை திமுக இயக்கம் பெற்றிருக்கிறது.இந்த போராட்டம் ஏன்?எப்படி நடத்துவது? என்பதாக இந்த கூட்டம் நடக்கிறது.
 

முதலிலேயே, மிகுந்த கவனத்துடன் இந்த போராட்டத்தை அறப்போராட்டம் என்றேன்.அறப்போராட்டம் என்றால்,அகிம்சா போராட்டம் ஆகும்.நம்மை நாமே தியாகத்திற்கு உட்படுத்துகிற போராட்டம் ஆகும்.வன்முறை போராட்டம் என்பது பிறரை தாக்கும் போராட்டம் ஆகும்.
 

இந்த போராட்டத்தில் அறவழியைத்தான்,அமைதி வழியைத்தான்,அண்ணா வழியைத்தான் கடைபிடிப்போம்.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை கடைபிடிப்போம்.நான்கு நான்கு பேராக அணிவகுத்து களத்திலே நின்று, பொதுமக்களுக்கு இன்னல் வராமல்,போலீசுக்கும் சிக்கல் வராமல் எல்லோருக்கும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.
 

உங்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம்,உறுதியாக களம்கண்டு நமது போராட்டத்தை அறவழியில் நடத்த வேண்டும்.ஏனென்றால்,இப்போதே ஒரு தவறு நடக்கலாம்.தானே ஒரு கல்லை தூக்கி போட்டுவிட்டு வன்முறை வழக்கு போடலாமா? என்று இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
 

சொல்வேறு, செயல்வேறாக இருக்க கூடாது.சொன்ன சொல்லை நாம் காப்பாற்ற வேண்டும்.6 மாதம் ஜெயிலில் இருப்பேன் என்று கூறிவிட்டு,ஜெயிலுக்கு போனால் மறுநாளே ஜாமீன் கேட்ட கூடாது.போராட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு போனால் யாரும் ஜாமீன் கேட்க கூடாது.
 

நாம் தியாக திருவிளக்காய்,எதையும் தாங்கும் இதயமாய்,அண்ணாவின் தம்பியாய், பெரியாரின் சீடராய் அனைவரும் இருக்க வேண்டும்.எந்த வழக்கு போட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல்,சிறுத்தை கூட்டமாக,சிங்க கூட்டமாக இருக்க வேண்டும்.
 

நாம் நடத்தும் போராட்டத்தை யாராவது அடக்க நினைத்தால்,அவர்கள்தான் அடங்கிப் போக வேண்டும்.நாம் போராட்டத்தை அறவழியில் நடத்துவோம்.அமைதி வழியில் நடத்துவோம்.எந்த வகையிலும்,அந்த போராட்டத்தில் வன்முறை தலைகாட்டக்கூடாது.
 

இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி இங்கே கூறினார்கள்.ஆட்சி எப்படி நடக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.எனவே, இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க, புத்தி சொல்ல, அறிவுறுத்த,இந்த போராட்டம் அறவழியில் நடத்துவது அவசியம். அதற்கு தயாராக இருங்கள்" என்றார்.

thanks to asiananban

0 comments:

Post a Comment