Tuesday, May 1, 2012

கூடங்குளம் போராட்டத்தை அடக்கி ஒடுக்க கூடாது: ஆம்னஸ்டி!



Kudankulam N-plant issue- Amnesty International plea to PM
சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் நடத்தும் அமைதியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் ஒன்று திரளவும், சொந்த உணர்வுகளை வெளிப்படுத்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது. அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தையும், போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் அடக்கி ஒடுக்குவதை உடனே நிறுத்தவேண்டும் என்று ஸ்விட்சர்லாந்தைச் சார்ந்த பீட்டர் கேட்டன் உள்பட ஆம்னஸ்டியின் மூத்த உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தின் நகல் கூடங்குளத்தில் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் பீப்பிள்ஸ் மூவ்மெண்ட் எகைன்ஸ்ட் நியூக்ளியர் எனர்ஜிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கூடங்குளம் போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 180 பேரை உடனடியாக விடுதலைச் செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவும் பிரதமர் நடவடிக்கை எடுக்க ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது.
அணுமின் நிலையம் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களையும், கவலைகளையும் போக்க தொடர்புடைய அதிகாரிகளால் இயலவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கூறுகின்றனர்.
போராட்டக் குழு தலைவரான எஸ்.பி.உதயகுமாரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் ரெய்டு நடத்தி அச்சுறுத்தியுள்ளது. போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வியாபாரிகளை போலீஸ் மிரட்டுகிறது. அமைதியாக நடக்கும் போராட்டத்தை அடக்கி ஒடுக்க அரசு முயற்சிக்கிறது என்று ஆம்னஸ்டி குற்றம் சாட்டுகிறது.
கடந்த மாதம் நடந்த காலவரையற்ற உண்ணாவிரதம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட 180 பேரில் 25 பேரை தவிர மீதமுள்ளவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேசத்துரோகம், கொடிய ஆயுதங்களால் கலவரத்தை உருவாக்குதல் போன்ற குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஆயுள் தண்டனை கிடைக்கும் பிரிவுகளாகும் இவை.
கூடங்குளம் போராட்டம் தொடர்பாக போலீஸ் இதுவரை 55 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
thanks
www.thoothuonline.com

0 comments:

Post a Comment