Sunday, May 20, 2012

மத்திய அரசுக்கு முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்க அச்சம்!-ஹர்ஷ் மந்தர் சாடல்!


புதுடெல்லி:சிறுபான்மை மக்கள் வாழும் மாவட்டங்களை மையமாக கொண்டு மத்திய அரசு தயாராக்கிய சிறப்பு திட்டம் எவ்வித பலனையும் அளிக்கவில்லை என்று சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹர்ஷ் மந்தர் மத்திய அரசை சாடியுள்ளார்.
முஸ்லிம்களின் நிலைமையை மாற்ற உண்மையிலேயே மத்திய அரசு விரும்புமானால் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் மறுதலிக்கும் போக்கை கைவிடவேண்டும் என்று ஹர்ஷ் மந்தர் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம்களுக்கான நலத்திட்டம் என்ற பெயரால் கொண்டுவந்த சிறுபான்மை மாவட்டங்களுக்கான முழுமையான வளர்ச்சித் திட்டம் என்ற நோக்கம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதனை நிறுத்தவேண்டும் என்று கூறும் பாராளுமன்ற குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழலில் ஹர்ஷ் மந்தர் இதுக்குறித்து விமர்சனத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
திட்டம் அமல்படுத்துவதுக் குறித்து பாராளுமன்ற குழு உண்மையை கூறியதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ள ஹர்ஷ் மந்தர், அவர்கள் கண்டறிந்தவை ஏற்கனவே தாங்கள் கண்டறிந்த காரியங்களுடன் ஒத்துப்போவதாக கூறினார்.
முஸ்லிம்களை திருப்திப்படுத்துகிறார்கள் என்று பா.ஜ.க குற்றம் சாட்டிவிடும் என அஞ்சி முஸ்லிம்களுக்கான சிறப்பு திட்டங்களை தீட்டாமல், சிறுபான்மை திட்டம் என்ற பெயரால் சிறுபான்மை மக்களை மையமாக கொண்ட மாவட்டங்களை கருத்தில் கொண்டு சிறப்பு திட்டங்களை துவங்கியதாக ஹர்ஷ் மந்தர் குற்றம் சாட்டுகிறார்.
முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்க மத்திய அரசு அஞ்சுவதன் மூலம் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு தொடர் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 25 சதவீதம் சிறுபான்மை மக்கள் வாழும் மாவட்டங்களுக்கான திட்டங்களை தயார் செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களை மையமாக கொண்ட திட்டங்களைத்தான் தயாரித்திருக்க வேண்டும். இனிமேலும் இத்தகைய மறுதலிக்கும் போக்கை விட்டுவிட்டு அதற்கு பதிலாக விளிம்புநிலை மக்களான முஸ்லிம்களில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கான வளர்ச்சி திட்டங்களை தயாரிக்க முன்வரவேண்டும் என்று மத்திய அரசை ஹர்ஷ் மந்தர் வலியுறுத்தியுள்ளார்.
thanks to asiananban

0 comments:

Post a Comment