Saturday, September 10, 2011

ஜகாத் வசூலிப்பை உளவுப் பார்க்க வேண்டும் என்னும் சுற்றறிக்கையை திரும்பப் பெறவேண்டும் – பாப்புலர் ஃபிரண்ட்

ஹைதராபாத்:இந்தியாவில் முஸ்லிம்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் மற்றும் முஸ்லிம் மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் இயக்கங்களை கண்காணிப்பதையும் அவற்றின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பதையும் தொழிலாக கொண்டுள்ள சில பாசிச சிந்தனை கொண்ட அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் இந்நாட்டின் சாபக்கேடு என்று சொன்னால் அது மிகையாகது. அவ்வாறு பாசிச சிந்தனை கொண்ட ஒரு சுற்றறிக்கைதான் ஆந்திர காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரால் தற்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர பிரிவுக்கு எதிராக ஆந்திராவில் அமலில் உள்ளது.


பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ரமலான் மாதத்தில் எவ்வளவு ஜகாத் வசூலித்தார்கள் என்பதை உளவு பார்க்குமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணைதான் அது. இவ்வாணையை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய ஆணையை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர பிரிவு மாநிலத் தலைவர் முஹம்மது ஆரிப் ஆந்திராவின் முதலமைச்சரையும் உள்துறை அமைச்சரையும் வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர பிரிவு மாநிலத் தலைவர் முஹம்மது ஆரிப் கூறியதாவது; பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் முஸ்லிம்களால் நிறுவப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு. இவ்வமைப்பு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. ஆந்திர மாநிலத்தின் குர்நூல் மாவட்டத்தில் இதற்கு மாநில தலைமையிடம் உள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஆந்திராவையும் சேர்த்து நாடு முழுவதும் கல்வி, பொருளாதாரம், சமூக சேவை மற்றும் அவசரகால உதவி போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவருகிறது. மேலும் இவ்வமைப்பு கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் பாசிச தீவிரவாதிகளால் இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் ஏற்படும் பாதிப்புக்கு எதிராக வெளிப்படையாக போராடி வருகிறது.

எனவே பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ரமலான் மாத வசூலிப்பை உளவு பார்க்க மாநில காவல்துறை ஆணை பிறப்பித்திருப்பது நீதிக்கு எதிரானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். மேலும் ஜகாத் கொடுத்தவர்கள் மற்றும் வாங்கியவர்களின் பெயர் விவரங்களை கேட்பது சிறுபான்மையினரின் உரிமைகளை மீறுவது ஆகும் என தெரிவித்தார்.

மேலும் முஹம்மது ஆரிப் கூறியதாவது; பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்ட இயக்கமோ அல்லது மறைவாக செயல்களை செய்யக்கூடிய இயக்கமோ அல்ல. இதுவரை இவ்வமைப்பின் உறுப்பினர்கள் யாரும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர் என்று கைது செய்யப்படவும் இல்லை. மேலும் இவ்வமைப்புக்கு இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இருப்பதாக எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் சில பத்திரிக்கைகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத செய்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அவற்றிற்கு போலீசிடம் ஆதாரம் இருப்பதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. இது போன்ற அடிப்படை ஆதாரம் இல்லாமல் வரும் செய்திகள் எல்லாம் மாநில காவல்துறை உயர் பதவிகளில் இருக்கும் சில பாசிச தரகுகளின் ஜோடிப்பாகதான் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.

மதசார்பற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் ஆந்திராவில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவது முதல் முறை அல்ல என்றும் ஏற்கனவே மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் பல அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் வைத்து சித்ரவதை செய்ததும் இறுதியில் மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தது ஹிந்துத்வா தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்டதும் நாடறிந்த உண்மை என்று கூறினார்.

முஸ்லிம்களின் மத உரிமையான ஜகாத்தை பற்றி கவலைப்படும் மாநில காவல்துறை ஹிந்துத்வா பாசிசவாதிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது பற்றி ஏன் கவலை கொள்வது இல்லை என வினவியுள்ளார்.

இதுபோன்ற பாசிச சிந்தனை கொண்ட ஹிந்துத்வாவாதிகள் காவல்துறையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு பாசிச சிந்தனை கொண்ட ஹிந்துத்வா போலிஸ் அதிகாரிகளை நீக்கவில்லை என்றால் சிறுபான்மை அமைப்புகளும் மனித உரிமைக் கழகமும் இணைந்து மாநிலம் முழுவதும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source:
Thoothuonline.com

0 comments:

Post a Comment