Sunday, September 25, 2011

பணத்தை விட தங்கத்தின் மதிப்பு கூடுவது ஏன்?


உங்ககிட்ட 1991ம் வருசம் ஆயிரம் ரூபாய் இருந்ததாக வைத்துக்கொள்வோம்..அதை ஒரு பீரோவில் பத்திரமாகப் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து இப்போது பீரோவைத் திறந்து பார்த்தால், உள்ளே எவ்வளவு இருக்கும்?

‘என்னய்யா இது கூமுட்டைத்தனமான கேள்வி..ஆயிரம் ரூபாய் தான் இருக்கும்’ன்னு நீங்கள் டென்சன் ஆவது தெரிகின்றது.ஆனால் ஆயிரம் ரூபாய் அப்போது இருந்த அதே மதிப்புடன் தான் இப்போது இருக்கிறதா? அப்போது எங்கள் ஊர் தியேட்டரில் டிக்கெட் விலை 3 ரூபாய். 333 ஷோ இந்த ஆயிரம் ரூபாயை வைத்துப் பார்க்க முடியும். இப்போது டிக்கெட் விலை 60 ரூபாய். (முதல் நாள் என்றால் >150 தான்). உங்களால் 16 ஷோ தான் பார்க்க முடியும். என்ன ஆயிற்று அந்தப் பணத்தின் மதிப்பு?


இதுக்குப் பேர் விலைவாசி ஏற்றம் என்று நாம் சொல்கிறோம். பொருட்களின் விலை ஏற்றத்தை வைத்தே இதை நாம் குறிப்பிடுகிறோம். பொருளாதார வல்லுநர் இதையே பணத்தின் மதிப்புக்கு நேரும் பாதிப்பை வைத்து பணவீக்கம்(Inflation) என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கணக்கிட்டு, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எத்தனை சதவீதம் பொருட்களின் விலையானது கூடி உள்ளது / அதாவது பணத்தின் மதிப்பானது குறைந்து உள்ளது என்று கணக்கிடப்படுவதே பணவீக்க விகிதம்.



மீண்டும் ஃப்ளாஷ்பேக்கிற்குப் போவோம். நீங்கள் அதே 1991ம் வருடம் ஆயிரம் ரூபாய்க்கு 2 கிராம் தங்கம் வாங்கி வைக்கின்றீர்கள். அதை அதே பீரோவில் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து, இப்போது திறந்து பார்த்தால்.........அதே 2 கிராம் தங்கம் தான் இருக்கும், ஆனால் 5600 ரூபாய் மதிப்புடன்.


பணத்தை பணமாக வைத்திருப்பதன் ஆபத்து புரிகின்றதா? அது ஒவ்வொரு வருடமும், இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் தன் மதிப்பை இழந்து கொண்டே உள்ளது. சராசரியாக 7.5% என்ற அளவில் பணவீக்க விகிதம் உள்ளது. அதாவது சென்ற ஆகஸ்ட்டில் நீங்கள் நூறு ரூபாய் வைத்திருந்தால், அது தன் மதிப்பில் 7.5 ரூபாயை இழந்து இன்று வெறும் 92.5 ரூபாயாகவே உங்கள் கையில் உள்ளது.


அமெரிக்கா உள்ளிட்ட உலகப் பங்குச் சந்தைகளில் பல லட்சம் கோடிகளில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தினமும் பல லட்சம் கோடியில் வர்த்தகம் நடந்துகொண்டே உள்ளது. அவர்களுக்கு ஒரு நாள் பணத்தை சும்மா வைத்திருந்தாலும், அது பணவீக்கத்தால் பெரிய அளவில் மதிப்பை இழக்கும்.


தற்பொழுது அமெரிக்காவில் கிளம்பியுள்ள கடன் தர வரிசைப் பிரச்சினை, பங்குச்சந்தைகளை கடும் வீழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஐரோப்பிய வங்கிகளும் கடும் நிதிச்சிக்கலில் இருப்பதாக வரும் தகவல் வேறு ;எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்று முதலீட்டு நிறுவனங்களை பதற வைக்கிறது. எனவே தங்களிடம் உள்ள பங்குகளை பயத்தில் விற்றுத் தள்ளுகிறார்கள். அப்படி விற்ற பின் கிடைக்கும் பணத்தை கையில் வைத்திருந்தால், பணவீக்கம் அதைச் சாப்பிட்டு விடும். கொதிக்கும் எண்ணெய்க்குப் பயந்து, நெருப்பில் விழுந்த கதையாகி விடும். அப்போ என்ன தான் செய்வது?


மேலே உள்ள உதாரணத்தைப் படித்த உங்களுக்குப் புரிந்திருக்கும், அதை தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு என்று. அதையே அவர்களும் செய்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் திடீரென்று தங்க மார்க்கெட்டில் நுழைந்தால் என்ன ஆகும்?



ஒரு பொருளுக்கு தேவை அதிகமானால், அதன் விலை உயரும் என்று பொருளாதார விதி சொல்கிறது. நம் விதியும் அதையே சொல்வதால், வேறு வழியின்றி தங்கம் விலை ஏறுகின்றது. நம் மாதிரி குடும்பஸ்தர்களுக்கு அதுவே ஆப்பு வைக்கின்றது.


எனவே தங்க விஷயத்தில் பணவீக்கம் மற்றும் பங்குச்சந்தை செலுத்தும் ஆதிக்கத்தை கவனத்தில் வைப்போம். உபரியாக(!) பணம் இருந்தாலோ, அல்லது திருமணத் தேவைகளுக்காக வாங்க வேண்டி இருந்தாலோ விலை சற்றுக் குறைவாக இருக்கும் நேரத்தில் (அதாவது உலகம் ஷேமமாக இருக்கும் நேரத்தில்) வாங்கி வைப்போம்.


5 வயது குழந்தைக்கு 1991ல் தங்கம் வாங்கி வைத்திருந்தால், இப்போது அவர்களின் மனநிலை எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தங்க முதலீட்டை தள்ளிப்போடாமல் இருப்பதன் அருமை புரியும்.

0 comments:

Post a Comment