Tuesday, September 20, 2011

கூடங்குளம் அணு உலையை ஏன் உடனே மூட வேண்டும்






திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 127 பேர் இடிந்தகரையில் இன்று 10 வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளோம் .

தினமும் 15000 க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு ஊர்களிலிருந்து கலந்துகொண்டு வருகின்றனர் .நாளுக்கு நாள் இப்போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது .பல்வேறு அரசியல் கட்சிகளும் ,அமைப்புகளும்,குறிப்பாக பதிவுலகமும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இத்தகைய கடுமையான போராட்டம் இப்போது அதுவும் அணு உலையை கட்டி முடிக்கும் தருவாயில் ஏன் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது. முதலில் அணு உலையை மூடக் கோருவதற்கான காரணங்களைத் தருகிறேன் .


1) கூடங்குளம் அணு உலையானது மிகவும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது .பொதுவாக இது போன்ற பெரிய அணு உலைகள் அமையும் பகுதியிலிருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மிகக் குறைவான மக்கள் தொகையே இருக்கவேண்டும்.மாறாக இங்கு 16 கிலோ மீட்டருக்குள் 1 லட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள் .அணு உலை நல்ல நிலையில் இயங்கினால்கூட இவர்களுக்கு பல்வேறு குணமாக்க முடியாத நோய்கள் ஏற்படும் .


2 ) சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்ததைப் போலொரு விபத்து கூடங்குளத்தில் நிகழுமாயின் அணு உலையைச்சுற்றி 30 கிலோமீட்டருக்குள் வசிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப் படவேண்டும் .இது முற்றிலும் சாத்தியமில்லாதது.

3)முக்கியமான இன்னொரு காரணம் தரமற்ற கட்டுமானம் .இதைப் பற்றி விளக்கமாக அறிய கூடங்குளம் அணு உலை பில்டிங் வீக் என்ற இப்பதிவை வாசிக்கவும் .

4) உக்ரைனின் செர்நோபில் விபத்து போல விபத்து நிகழுமாயின் தமிழகம் மற்றும் வடக்கு இலங்கையில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழினமே அழியும் .


5) அணு உலையிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் கலந்த நீர் கடலில் கலக்கப் படுவதால் கடல் வளங்கள் அழியும் .

6) அணு உலையின் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மண்ணுக்கடியில் புதைக்கப் படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் .மேலும் இவற்றை 24000 ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்க படவேண்டும் .

7 ) அணு உலைகள் கடற்கரையில் கடல்மட்டத்திலிருந்து வெறும் 7 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளதால் எளிதில் சுனாமி தாக்கும் ஆபத்து உள்ளது .சமீபத்தில் ஃபுகுஷிமா அணு உலைகளை 20 மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கியது நினைவுகூறத் தக்கது .

8 )தீவிரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளுக்கு முக்கிய இலக்கு அணு உலைகள். இலங்கையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும் கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது .




பொதுவாக இதுபோன்ற பெரிய பெரிய திட்டங்களை ஆரம்பிக்கும் முன்னதாக அதன் சாதக பாதகங்களை மக்களுக்கு விளக்கி அவர்களின் கருத்து அறியப் படவேண்டும் .ஆனால் அணு உலைகளால் ஏற்படும் பாதகமான அம்சங்கள் மக்களிடம் அரசால் மறைக்கப்பட்டன மாறாக அணுமின் நிலையங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மிகப்பெரிய தொழிற்ச்சாலை என மக்களிடம் திரித்து கூறப்பட்டு இப்பகுதி மக்களின் ஆதரவோடு கட்டத் தொடங்க பட்டது .

நாளடைவில் மக்கள் விழிப்புனர்வடையத் தொடங்கினர் விளைவாக போராட்டங்கள் தொடங்கின .ஆனால் அரசின் ஒடுக்கு முறையால் வெளியுலகுக்கு அவை தெரியவில்லை .

சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை விபத்து மக்களுக்கு முழு அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியது .அதன் விளைவாக அணு உலை கட்டி முடிக்கப்படும் தருவாயிலும் அதை செயல்படவிடாமல் தடுத்தே ஆகவேண்டும் என்ற நோக்கில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இப்போதும் போராட்டத்திலிருந்து தமிழக மக்களை திசை திருப்ப அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது .

0 comments:

Post a Comment