Saturday, July 23, 2011

மரைக்கழன்று திரியும் பா.ஜ.கவினர்!


இந்தியாவிற்கு பயங்கரவாத தாக்குதல்கள் கடுமையான சர்வதேச‌ பிரச்சனையாக மாறிவருகிறது. துரதிருஷ்டவசமாக சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாதிகளின் இலக்காக இந்தியா மாறிவிட்டது என்றே கூறலாம். மும்பை மக்களின் உயிர் இழப்பைக் கண்டு ஒவ்வொரு இந்தியனும் அதிர்ச்சி அடைந்துள்ளான். முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், இந்துக்கள் என அனைத்து சமுதாய அப்பாவி மக்களும் இந்த குண்டுவெடிப்பின் போது உயிரிழந்துள்ளனர். இன்னும் அதிகமானோர் படுகாயங்களுடன் உயிருக்காக போராடி வருகின்றனர்.


இதன் மூலம் பயங்கரவாத கூலிப்படைகளாக செயல்பட்டு அப்பாவி பொதுமக்களை கொன்று வரும் இந்தத் தீவிரவாதிகள் தவறான பாதையில் வழி நடத்தப்பட்டவர்கள் என்று உறுதியாக கூறலாம். இத்தகை கொடிய செயல்களில் ஈடுபடுபவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது எந்த அனுதாபமோ, மரியாதையோ கொண்டிருக்கவில்லை. இத்தகைய செயல்களில் ஈடுபடும் இந்த பயங்கரவாதிகளுக்கு எந்தவித நியாயமான் கோரிக்கைகளும் கிடையாது, மாறாக ஒரு வரம்பு இல்லாத தன்னிச்சையாக செயல்பட்டு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர். உண்மையில் இத்தகைய பயங்கரவாதிகள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் கிடையாது, ஏனென்றால் உலகில் உள்ள எந்த மதமும் ஒருவனுடைய குறிக்கோள் நிறைவேறுவதற்காக அப்பாவி மக்களை கொலை செய்யப்படுவதை அனுமதிக்கவில்லை.
துப்பாக்கி பயிற்சி எடுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஊழியன். யாரை சுடுவதற்காக இந்த பயிற்சி? பா.ஜ.கவின் கண்களுக்கு இது ஏன் தெரியவில்லை?

எனவே இஸ்லாமிய தீவிரவாதம் என்றும், இந்து தீவிரவாதம் என்றும் ஆதாரமில்லாத அறிக்கைகளை  வெளியிடுவது அர்த்தமற்றதாகும். ஆனால் அடிக்கடி தொலைக்காட்சி சேனல்களில் மத துவேஷம் கொண்ட அரசியல் வாதிகளால் பொறுபற்ற முறையில் "இஸ்லாமிய பயங்கரவாதம்" என்று அடிப்படை ஆதாரம் இல்லாத வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டும் அதன் பின்பும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கும்படியான பேச்சுக்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களது இந்த விவாதத்தினால் கவரப்பட்ட சில இளைஞர்கள் மூலை சலவைக்கு ஆளாகி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகளாகவும், தேசத் துரோகிகளாகவும் சித்தரித்து விடுகின்றனர். அப்சல் குரு மற்றும் கசாப்பை பற்றி கருத்துக்களை கேட்கப்படும்போது அவர்கள் இருவரையும் உடனே தூக்கில் போட வேண்டும் என்று கருத்துகூறுகின்றனர், அவர்களுடைய அறியாமைத்தனத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு சாதகமான வேலைகளை செய்கின்றனர். அஜ்மல் கசாப்பையும், அப்சல் குருவையும் தூக்கில் போட்டுவிட்டால் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நின்றுவிடுமா? சட்டத்தை நன்கு ஆராயாமல், தீவிர விசாரணை மேற்கொள்ளாமல் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இந்தியாவில் இராணுவ ஆட்சியா நடைபெற்றுகொண்டிருக்கிறது?
குற்றவாளிகள் சுதந்திரமாக திரிவதும், அப்பாவிகள் சிறைச்சாலையில் வாடுவதும் தொடர்ந்து நடக்கிறது


அரசியல்வாதிகளின் இந்த பொறுப்பற்ற நடத்தைதான் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேடுகெட்ட அரசியல்வாதிகளின் இந்த அணுகுமுறையால் இதனால் வரை இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்த சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் சீரழியும் அபாயம் உள்ளது. அடுத்து இவர்கள் பிரச்சாரம் செய்யும் இன்னொரு கூற்று "காங்கிரஸ் அரசாங்கம் சிறுபான்மை முஸ்லிம்களை திருப்திபடுத்துவதற்காக செயல்பட்டு வருகிறது" என்பதாகும்.
இது ஒரு கேவலமான அறிக்கையாகும் ஏனென்றால், இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான நிலையை ராஜேந்திர சர்ச்சார் கமிட்டி தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது. முஸ்லிம்கள் இந்தியாவில் இரண்டாந்தார குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களுடைய வாழ்வில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் எதுவும் இல்லை, எனவே அவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பிலும் 10% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸ் அரசாங்கத்தால் இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களின் நிலையை கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் சர்சார் கமிட்டி. நீதிபதி ராஜேந்திர சர்ச்சார் கடுமையான ஆய்வுக்கு பிறகு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று கூறியும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் இது வரை இந்த விஷயத்தில் மெத்தன போக்கையே கையாண்டு வருகிறது. இதிலிருந்து காங்கரஸ் அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தை திருப்திபடுத்துவதற்காக செயல்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் முடிவு பெறாத நிலையிலும், உண்மை குற்றவாளிகள் அறியப்படாத நிலையில் பா.ஜ.க அரசியல்வாதிகள் தங்களுடைய மழுங்கிய புத்தியை கொண்டு குண்டுவெடிப்பிற்கு காரணம் இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் என்றும், சிமி, இந்தியன் முஜாஹீதீன் போன்ற அமைப்புகள் தான் என்றும் உளறி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் "குறிப்பிட்டு ஒரு மதத்தினர் மீது மட்டும் சந்தேகப்பட்டு விசாரணை நடத்துவது தவறாகும், இந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். போன்ற ஹிந்துத்துவ அமைப்புகளின் மீதும் விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறியதற்காக மிக கடுமையான் முறையில் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார்.

ஆனால் மத துவேஷம் கொண்ட பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர்கள் அனைத்து ஆங்கில தொலைக்காட்சிகளிலும் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் இவர்கள் நாட்டின் ஒற்றுமைய சீர்குழைத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் கட்சியின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அந்த கட்சியின் உறுப்பினராக இருக்கும் ஒரு பெயர் தாங்கி முஸ்லிமான ஷானவாஸ் கானை பயன்படுத்துவதன் மூலம் என்ன கூற வருகிறார்கள் பா.ஜ.கவினர்? இது அவர்களுடைய குறும்புத்தனத்தையல்லவா காட்டுகிறது! இந்துத்துவா பயங்கரவாத குழுக்களின் சூழ்ச்சிகள் பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு தெரியாதா? சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு போன்ற நாசவேலைகளை செய்தது இந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் தான் என்பது இன்றைக்கு தெள்ளத்தெளிவாக் தெரிந்துள்ளதே! அப்படி இருக்க அவர்களை கண்டிக்கவோ, அல்லது அவர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடவோ வக்கில்லாத இந்த கேடுகெட்ட பா.ஜ.கவினருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்தைப்பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? தற்போது இந்தியாவில் இந்து மத பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் இந்துத்துவா தீவிரவாதிகளும் இருக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ டெல்லியில் நடத்திய அமைதிப்போராட்டம்
இன்று இந்தியாவில் எங்கு  குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அதில் முஸ்லிம்களே முதலில் சந்தேகிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு பிறகும் முஸ்லிம்கள் வெகுஜன சமூகத்திலிருந்து சிறிது சிறிதாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். பிற சமூக மக்களுடன் ஒற்றுமையுடனும், இணக்கத்துடனும் வாழ்வதற்கு இது மிகப்பெரிய தடையாக உள்ளது. ராஜேந்திர சர்ச்சார் குறிப்பிட்டது போன்று இரண்டாம் தார‌ குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். வாடகைக்கு வீடு தேடுவதாக இருந்தாலும், வேலை தேடுவதாக இருந்தாலும், குடியிருப்பு கட்டிடங்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு முஸ்லிம் இளைஞர் தாடி வைத்திருந்தால் அவனை இந்த சமூகம் ஒரு வித சந்தேக கண்ணோட்டத்துடனே பார்க்கின்றனர். அவர்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விசாரணை நடத்துவதும், பொய் வழக்கு போட்டு கைது செய்வதும் தொடர் கதையாகிப்போனது.
இது போன்ற சூழ்நிலைகளின் போது சமூக வட்டாரத்திலிருந்து முஸ்லிம்கள் தனைமைப்படுத்தப்படுகின்ற்னர்.


எத்துனையோ முஸ்லிம் இளைஞர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல் பல ஆண்டுகாலமாக விசாரணைக்கைதிகளாகவே சிறைச்சாலைகளில் வாழ் நாளை கழித்து வருகின்றனர். இந்திய நீதிமன்றங்களில் ஆமை வேக விசாரணையால் இவ்வாறு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனையோ இளைஞர்கள் தங்களது கல்வியை தொடர முடியாமல் வாழ்கையை இழந்து நிற்கின்றனர். இப்படி செய்யாத குற்றத்திற்காக சிறைவாசகம் அனுபவிக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஒருபோதும் தீவிரவாதத்தின் நிழலை கூட நெருங்கமாட்டார்கள்.

ஒவ்வொரு தடவையும் ஏதாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டால் முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் இயக்கங்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டியதோடு மட்டுமின்றி, முஸ்லிம்களுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எப்போது முஸ்லிம்கள் நம்பப்படுவார்கள் என்பது தெரியவில்லை.

முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலான மக்கள் இதை பற்றி வாய்திற்பபதில்லை, காரணம் அவர்களும் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் முஸ்லிம்களாகத்தான் இருக்கக்கூடும் என்று நம்புகின்றனர், அந்த அளவிற்கு ஒரு பொய் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு உண்மையாகிப்போகிறது. இதனால் ஒரு முஸ்லிம் அநியாயமாக பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டால் அவனுக்காக குரல் கொடுக்க முஸ்லிம் சமூகத்திலேயே பலருக்கு தயக்கம் இருக்கிறது.
நடுநிலையான இந்துக்களும் இதனை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். சங்கபர்வாரங்களின் இந்த தீய பிரச்சாரத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டுவிடக்கூடாது. இந்த நாட்டில் எந்த பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும், எந்த சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டாலும் அது ஒட்டு மொத்த இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பே ஆகும்.
அதே போன்று எதற்கெடுத்தாலும் உள்துறை அமைச்சருக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதும், ஆளும் கட்சியினை கண்டிப்பதும் தேவையில்லாததாகும். இத்தகைய தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான எந்த வேலை நடப்பதாக தெரிந்தாலோ உடனே காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.  "தான் உண்டு தன் வேலை உண்டு" என்று இருப்பதால் தான் இந்தியாவில் இத்தனை அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நூற்றி இருபது கோடி மக்களை உள்துறை அமைச்சராலோ, அரசாங்கத்தினாலோ அல்லது  காவல்துறை அதிகாரிகள் மட்டும் சேர்ந்து பாதுகாத்துவிட முடியாது. ஆளும் கட்சியினை குற்றம் சுமத்துவதிலேயே மும்முரமாக செயல்பட்டு வரும் பா.ஜ.கவினர் மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இத்தகையை குண்டுவெடிப்புகள் நிகழாது என்பதற்கு அவர்களால் உத்திரவாதம் தர முடியுமா?
காங்கிரஸ் ஆட்சியின் போது ஐம்பது குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தால், பா.ஜ.க ஆட்சியின் போது நூறு குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்படுகிறது. எனவே பசுத்தோல் போர்த்திய புலியாக செயல்பட்டு வரும் பா.ஜ.கவினருக்கு இனி வாழ்க்கை இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது.

கட்டுரை: முத்து

0 comments:

Post a Comment