Thursday, June 2, 2011

ரூ. 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி அரேபியா


Riyadh Saudi Arabia
ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலிய ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான செளதி இப்போது பெட்ரோலி கச்சா எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே தனது மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

ஆனால், மின்சாரத்தில் தேவை மிக மிக அதிகமாகி வருவதாலும், எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை மிக மிக அதிகமாக இருக்கும் என்றும் கருதும் செளதி, அந்த எண்ணெய்யை ஏற்றுமதி செய்யாமல் அதை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று கருதுகிறது.

மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் செளதியின் மின் தேவை ஆண்டுக்கு 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மின் உற்பத்திச் செலவைக் குறைக்க அணு மின் நிலையங்களைக் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த 20 ஆண்டுகளில் 16 அணு உலைகளைக் கட்ட செளதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அணு உலைகளைக் கட்டுவதற்காக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட உள்ளதாக சவூதி அணுசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் கனி மாலிபரி தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் 2 அணு உலைகள் கட்டி முடிக்கவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 அணு உலைகளைக் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டுக்குள் 16 அணு உலைகளைக் கட்டி முடிக்க செளதி முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு அணு உலையும் இன்றைய மதிப்பில் ரூ. 35,000 கோடி செலவில் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை செளதியின் மின் தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்யுமாம். மேலும் 80 சதவீத மின்சாரம் தொடர்ந்து பெட்ரோலிய எண்ணெய் அடிப்படையிலான மின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படும்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்-சுனாமியால் புகுஷிமா உள்ளிட்ட அணு மின் நிலையங்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவு செய்துள்ள நிலையில் செளதி புதிதாக அதற்குள் காலடி வைக்கிறது.

அண்டை நாடான ஐக்கிய அரபு நாடுகள் ரூ. 1 லட்சம் கோடி செலவில் 4 அணு உலைகளைக் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அணு உலைகளை தென் கொரியா கட்டி வருகிறது.

செளதியின் அணு உலைகளை அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கட்டித் தரலாம் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment