Monday, June 20, 2011

நேட்டோ விமானப் படைகள் நடத்திய தாக்குதலில், இரு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் பலி


may 20 டிரிபோலி : லிபியாவில் "நேட்டோ' விமானப் படைகள் நடத்திய தாக்குதலில், இரு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு, லிபிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லிபியா தலைநகர் டிரிபோலியில், கடாபி ராணுவத்தினருக்குச் சொந்தமான ஆயுதக் கிடங்குகள், தளவாடங்கள், கட்டடங்கள், ராணுவ மையங்கள் மீது "நேட்டோ' விமானங்கள் குண்டுகளை வீசி, தாக்கி வருகின்றன. இத்தாக்குதலில் பொதுமக்களும் பலியாகின்றனர் என, லிபிய அரசு ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் "நேட்டோ' விமானப் படைகள், அல் அராடா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், இரு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியாகினர். தாக்குதல் நடந்த இடத்துக்கு, லிபியா அரசு சார்பில் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இடிபாடுகளில் இருந்து இரு உடல்கள் மீட்கப்பட்டதை நேரில் பார்த்த பத்திரிகையாளர்கள், டிரிபோலியில் உள்ள அரசு மருத்துவமனையில் பலியான பெண் மற்றும் குழந்தைகளின் உடல்களையும் கண்டனர்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள லிபிய அரசு, "இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை "நேட்டோ' உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிப்பதாக,"நேட்டோ' உறுதியளித்துள்ளது. நேற்று காலை டிரிபோலியில் நடந்த மற்றொரு குண்டு வீச்சில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.

0 comments:

Post a Comment