Tuesday, June 28, 2011

வரலாற்று சிறப்புமிக்க ரஜப் மாதம்

    may 28  இஸ்லாமிய மாதங்களில் ரஜப் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும்.    இம்மாதத்தில் நடைபெற்ற    பல்வேறு    சம்பவங்கள் இஸ்லாமிய     வரலாற்றில் பதிவு    செய்யப்பட்டுள்ளன.   போர் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள  நான்கு  மாதங்களில் ரஜப் மாதமும் அடங்கும்.நபி(ஸல்) அவர்களின்  மிஃராஜ்  பயணம்  இம்மாதத்தில் நடந்தேறியது. அல்லாஹ் கூறுகிறான்:-

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِير

(அல்லாஹ்) மிக பரிசுத்தமானவன்.அவன் தன்னுடைய  அடியாரை கஃபத்துல்லாஹ் விலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்.(மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் பரகத்து செய்திருக்கின்றோம்.நம்முடைய அத்தாட்சிகளை காண்பிப்பதற்காக அவரை அழைத்துச் சென்றோம்.   நிச்சயமாக  அவன் யாவற்றையும் செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.                                               (பனி இஸ்ராயீல் : 1) .

   நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு  அளித்துவந்த  அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிப் மற்றும் அவர்களின் அருமை மனைவியான கதீஜா(ரலி) ஆகியோரின் மறைவால் நபி(ஸல்) அவர்கள் துயருற்றிருந்தார்கள்.    குறைஷிகளிடமிருந்து வெளிப்படையாகவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.    இந்த காலகட்டத்தில் தான் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் விண்ணுலகிற்கு அழைத்துச்சென்று தன்னுடைய அத்தாட்சிகளை காண்பித்தான். நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்னர் தலைமைப்பொறுப்பு பனி இஸ்ராயீல் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. கஃபத்துல்லாஹ்விலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு   அழைத்து சென்ற நிகழ்ச்சியானது தலைமைப்பொறுப்பு நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு அவர்களின் உம்மத்திற்கு கிடைக்கப்போகிறது என்பதை யூதர்களுக்கு உணர்த்தியது.  இஸ்ரா- வ- மிஃராஜ்  சம்பவத்திற்கு பின்னர்  நபி(ஸல்) அவர்களின் அழைப்புப்பணியிலே முன்னேற்றம் ஏற்பட்டது. அவ்ஸ், கஸ்ரஜ் மக்களிடமிருந்து  நபி(ஸல்) அவர்களுக்கு அதன் துவக்கம் ஏற்பட்டது. அவர்களின் உதவியோடு மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள்.

   இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்ற போர்களிலே தபூக் போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அக்காலத்தில் பெரும் வல்லரசாக ரோம் மற்றும் பாரசீகம் இருந்தது. இந்த போர் ரோமர்கள் மதினாவை நோக்கி படையெடுக்க ஆயத்தாமாகி வருகிற செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு கிடைத்தபின் மேற்கொண்ட நடவடிக்கையாகும். ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் தபூக் போர் நடைறெ இருந்த காலகட்டம் மிகக் கடுமையான கோடை காலமாக இருந்தது. முஸ்லிம்கள் மிகுந்த சிரமத்திலும், பஞ்சத்திலும், வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். மேலும் அது பேரீத்தம் பழங்களின் அறுவடைக் காலமாகவும் இருந்தது.  அதே போன்று   மதீனாவிலிருந்து  நீண்ட தூரம் பயணித்து  ஷாம் பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் ரோமர்களுடன் போர் செய்யாமலிருப்பதோ அல்லது இஸ்லாமிய நிலப்பகுதிக்குள் அவர்களை நுழைய விடுவதோ இஸ்லாமிய அரசிற்கு மாபெரும் பின்னடைவை தரும்  என்பதால் நபி(ஸல்) அவர்களுடன் முப்பதாயிரம் இஸ்லாமிய வீரர்கள் தபூக் களத்தை நோக்கி அணிவகுத்தார்கள். ஆனால் ரோமர்களும் அவர்களின் கூட்டாளிகளும் அஞ்சி நடுங்கியவர்களாக இஸ்லாமிய இராணுவத்தை சந்திக்க துணிவின்றி சிதறி ஓடினார்கள். ரோமர்களை நம்பி வாழ்ந்த கோத்திரங்களெல்லாம் இனி முஸ்லிம்களுக்கு தான் அடிபணிந்து வாழவேண்டும் என்று உணர்ந்தனர். இவ்வாறாக இஸ்லாமிய எல்லைப்பகுதி  நாளுக்கு நாள் விரிவடைந்து ரோமப்பகுதிக்கு  சென்றடைந்தது.

 ஐரோப்பிய  சிலுவைப்படையினரின்  ஆக்கிரமிப்பில் ஒரு நூற்றாண்டு காலம் இருந்த முஸ்லிம்களின் முதல்  கிப்லாவான அல்குத்ஸ் (ஜெருசலேம்)  இம்மாதத்தில் தான் மீட்கப்பட்டது.  ஹிஜ்ரி 583 ரஜப் மாதத்தில்  மாவீரர் சலாஹுதீன் அய்யூபி( ரஹ்) அவர்களின் தலைமையில் அடைந்த இம்மாபெரும் வெற்றியானது ஐரோப்பியர்களை குலைநடுங்கவைத்தது. அதன் பிறகு அதனை எதிரிகளால் நெருங்க இயலவில்லை. முதல் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் பாலஸ்தீனை உஸ்மானியா கிலாஃபத்திலிருந்து  பிரிட்டன் ஆக்கிரமித்தது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யூபிக்காக அல்குத்ஸ் ஏங்கிக்கொண்டிருக்கிறது.

 இம்மாதத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய நிகழ்வாக   ஹிஜ்ரி 1342  ,ரஜப்  28 (மார்ச் 3, கி. பி.1924 )   ல் முஸ்தபா கமால் பாஷா என்ற துரோகியின் மூலம்  கிலாஃபத் வீழ்த்தப்பட்டது. உலக முஸ்லிம்களின் தலைமையாகிய விளங்கிய  கிலாஃபத் வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருந்தன. கிலாஃபத் வீழ்த்தப்பட்டதோடு உலக அளவில் முஸ்லிம்களுக்கு இருந்த தலைமை பறிபோனதால் இஸ்லாத்தின் எதிரிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அவர்களின் வெறுப்புணர்வை அடக்கிவைக்க முடியாமல் வெளிப்படையாகவே உமிழ்ந்தனர். இது குறித்து அன்றைய இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு கிலாஃபத்தை வீழ்த்திய பின்னர் 1924 ஜூன் 24ல் லாஸன்  மாநாட்டில் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு பிறகு  முஸ்லிம்களின் மீதான  தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

"முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம்.அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது.ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம் ".

நபி (ஸல்) அவர்கள் இந்த சிறப்பு மிக்க ரஜப் மாதத்தில் 12, 13, 14 ஆகிய தின்த்திலும் மெஹ்ராஜ் தினமான 27 ஆம் தினத்தில் நோன்பு நோற்றார்கள். 

0 comments:

Post a Comment