Sunday, June 26, 2011

அடுப்பை விட வயிறுதான் அதிகம் நேரம் எரிகிறது!

ஜூன் 26,இன்றைய காலைப் பொழுதில் பல வீட்டு சமையல்கட்டில் அடுப்புகள் மெதுவாகத்தான் எரிந்திருக்கும். ஆனால் வயிறு மட்டும் வேகமாக பற்றி எரிந்தது.

பால்காரன் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட தலைப்பு செய்தி இதுதான்! கியாஸ் விலை ரூ.50  ஏத்திப்புட்டாங்களாமே...”

ஏன்தான் இப்படி ஏத்தி தொலைக்கிறாங்களோ... நம்ம மாதிரி நடுத்தர ஜனங்க இனி வாழவே முடியாது... ம்ம் என்ன செய்றது...? என்று அங்கலாய்த்து தவித்த பெண்கள் ஏராளம்.

வாழ்க்கை ஒரு போராட்டம் என்பார்கள். வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் கல்விக்கட்டணம் என்று பல செலவுகள் கழுத்தை நெரிக்கிறது. வரவுக்குள் திட்டமிட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தினர் குடும்பம் நடத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் துண்டு விழுவதால் மாத கடைசியில் கடனுக்கு கையேந்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கியாஸ் விலை திடீரென்று சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியது அவர்கள் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் உள்ளது.

சென்னையில் இதுவரை சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.352.35 ஆக இருந்தது. தற்போது ரூ.402.35 ஆக உயர்ந்துள்ளது. டெலிவரி சார்ஜையும் சேர்த்தால் ரூ.425 கொடுக்க வேண்டியதிருக்கும். கடுமையான விலை உயர்வை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள் பெண்கள்.

0 comments:

Post a Comment