Sunday, March 13, 2011

லிபியா:எண்ணெய் நகரத்தை கத்தாஃபியின் ராணுவம் மீட்டது

திரிபோலி,மார்ச்.13:கடுமையான மோதலுக்கு பிறகு கத்தாஃபியின் ராணுவம் எண்ணெய் நகரமான ராஸ் லானூஃபை மீட்டுள்ளது.

நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தாங்கள் இருப்பதாக எதிர்ப்பாளர்களின் தலைவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

லிபியாவை விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்படும் பகுதியாக அறிவிப்பதுக் குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமா என்பதுக் குறித்து விவாதிக்க அரபு லீக்கின் அவசரக்கூட்டம் கெய்ரோவில் துவங்கியுள்ளது.

விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்படும் பகுதியாக லிபியாவை அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் என கூட்டம் நடைபெறுவதற்கு முன் அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார்.

ஐ.நா, அரபு லீக், ஆப்பிரிக்க யூனியன், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் ஆதரவு இத்தீர்மானத்திற்கு கிடைக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

வருகிற நாட்களில் வலுவாக மீண்டுவருவோம் என எதிர்ப்பாளர்களின் பக்கம் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் ஃபத்தா யூனுஸ் தெரிவித்துள்ளார். போராட்டம் துவங்கிய பிறகு அவர் எதிர்ப்பாளர்களின் பக்கம் சேர்ந்துள்ளார்.

ராஸ் லானூஃபில் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டம் நடந்துவருகிறது. கூடுதல் வெடிப் பொருட்களுடன் வந்த கத்தாஃபி ராணுவம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும், ஆயுதக் கிடங்குகளிலும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

திரிபோலிக்கு அடுத்துள்ள ஸாவியா நகரத்தை சில தினங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. நகரத்திலிருந்து செய்தியை வெளியிட பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் பலத்த மோதல் நடந்துவருகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 comments:

Post a Comment