Monday, March 21, 2011

லிபியா:பார்வையாளராக மட்டும் மாறிவிடாதீர்கள் – மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கோரிக்கை


புதுடெல்லி:லிபியாவுக்கெதிராக நேட்டோ படையினர் நடத்தும் தாக்குதலை பார்வையாளராக மெளனமாக இருந்து விடாமல் இரத்தக் களரியை தடுத்திடுவதற்கான அவசரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசுக்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “லிபியாவில் அமைதியையும், மனித உரிமையையும் நிலைநாட்டப் போகிறோம் என்ற பெயரில் ராணுவத் தாக்குதலை நடத்திவரும் அமெரிக்காவையும், நேட்டோவையும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை தனது செல்வாக்கை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.
லிபியாவுக்கெதிரான ஐ.நா தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தியா கலந்துக் கொள்ளாதது துக்ககரமானது.
தீர்மானத்தை ஆதரிப்பதற்கு சமமானதுதான் இந்தியா போன்ற நாடுகள் கடைபிடிக்கும் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் கொள்கையாகும்.
லிபியாவை விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்பட்ட பகுதியாக அறிவித்திருப்பது நல்லதல்ல. இந்த தீர்மானம் லிபியா மக்களின் சுதந்திரம், அமைதி, பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றின் மீது முகத்தில் அறைவதற்கு சமம்.
ஆக்கிரமிப்பிற்கு சியோனிஸ்ட், அமெரிக்க சக்திகள் முன்வைக்கும் நியாயங்களுக்கு சமமான வார்த்தைகள்தாம் இந்த தீர்மானத்தில் உள்ளன. லிபியாவை விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பது அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கான பகிரங்க அங்கீகாரமாகும்.
தற்போதைய தாக்குதல்கள் லிபியாவுக்கெதிராக போர் பிரகடனம் செய்ததற்கு சமமாகும்.” இவ்வாறு எ.சயீத் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment