Thursday, March 3, 2011

மைசூர் சிங்கம் மன்னர் ஹைதர் அலி!



ஹைதர் அலி
ஹைதர் அலி
வீரம், மானம், தியாகம் இவையெல்லாம் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்கள் உலகின் போக்குகளை மாற்றியிருக்கின்றன. பல நேரம் ஏழை வர்க்கத்தில் தோன்றிய சாமான்யர்களால் வரலாறுகளையே திணறடிக்கவும் முடிந்திருக்கிறது.
அப்படியரு வரலாற்று பெருவீரன்தான் ஹைதர் அலி. ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் போருக்கு எதிராக கர்ஜித்த மைசூர் சிங்கம்தான் ஹைதர் அலி.
இவரது முன்னோர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டில், ஒரு சூபி குடும்பம் குல்பர்காவை நோக்கி வந்தது. அப்பகுதியில் பீஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஷியா சிந்தனைப் பிரிவின் தாக்கமும், பாரசீக மொழியின் ஆளுமையும் அப்பகுதியில் இருந்தது. அக்குடும்பத்தில் மார்க்க அறிஞர்கள், போர் வீரர்கள், தர்ஹா பணியாளர்கள் என பலரும் இருந்தனர்.
இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1686ல் ஒளரங்கசீப், பீஜப்பூர் மீது படையெடுத்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்திருக்கிறார்கள். அந்த சூஃபி குடும்பத்திலிருந்த ஒருவர் தான் பத்தே முஹம்மது. பஞ்சாபிலிருந்து புறப்பட்டு, பல ஊர்களில் குடியமர்ந்து இறுதியாக கோலார் (தங்கவயல்) பகுதியில் குடியேறினார்கள். இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடைக்காலத்தில் கன்னடத்தின் வெவ்வேறு பகுதிகளில் தங்களின் வசதிக்கேற்ப சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
ஆனால், பத்தே முஹம்மது கோலாரில் தங்கினார். பின்னர் ஆற்காடு நவாபின் படையில் முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார்.
சிங்கம் பிறந்தது
அப்போது தஞ்சாவூரில் செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஹைதர் அலி. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மரணித்து 14 வருடங்களுக்குப் பிறகு 1721ல் பிறந்தார் ஹைதர் அலி.
ஒளரங்கசீபின் மரணத்திற்குப் பின்னால் முகலாய சாம்ராஜ்யம் அரசியல் குழப்பத்திற்கு உள்ளாகி பலவீனம் அடைந்தது. அவரது வாரிசுகளின் திறமையின்மையால் பாபரில் தொடங்கிய முகலாயர் வரலாறு, முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத் தில்தான் ஹைதர் அலி வளர்கிறார்.
அக்காலக் கட்டத்தில்தான் ஒளரங்கசீபால் நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட நவாபுகளும், நிஜாம்களும் முகலாயப் பேரரசை உடைத்து தங்களைத் தாங்களே ஆட்சியாளர்களாக முடிசூட்டிக் கொள்கின்றனர். அப்போதுதான் ஆங்கிலேயர்கள் வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்குப் போட்டியாக பிரெஞ்சுக்காரர்கள் வேறு.
மைசூர் அரசியல்
இத்தகைய அரசியல் தட்பவெப்பம் நிலவிக் கொண்டிருந்த போது, மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர். இதற்கு முன்பு மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழும், பாமினி¢, சுல்தான்களின் ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது கிருஷ்ணராஜா என்ற 20 வயது இளைய மன்னனிடம் சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.
1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.
தொடர்ந்து முன்னேற்றம்
அதற்குப் பரிசாக குதிரைப் படைக்குத் தளபதியாக நியமிப்பார் ஹைதர் அலி. திறமைசாலியின் உழைப்பு வீண் போவதில்லைதானே…!
1750-ல் ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுகாரர்களுக்கும் இடையில் கர்நாடக யுத்தம் நடைபெற்றது. மைசூர் அரசு பிரஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போது நடைபெற்ற போரில் ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார்.
அந்தப் போர் அனுபவம்தான் ஹைதர் அலிக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது! ஐரோப்பியர்களின் ராணுவ நுட் பங்களையும், நவீன ஆயுதங்களைக் கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.
இத்தருணத்தில் மைசூர் ஆட்சியில் நிலவிய உள் அரசியலை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். 1734ல் ஐந்து வயதில் குழந்தை மன்னராகப் பதவியேற்ற சிக்க கிருஷ்ணராஜாவை ஆட்டிப் படைக்கும் அமைச்சராக இருந்தவர் நஞ்சராஜர். இவரும் படைத்தளபதி தேவராஜும்தான், குழந்தை மன்னரின் தந்தையைக் கொன்றவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவலாகும்!
அத்தகைய திறமை(!) வாய்ந்த அமைச்சர் நஞ்ஞராஜர், ஹைதர் அலியின் திறமையை நம்பினார். மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார். தன் மீது வைத்த நம்பிக்கையை அவர் வீணாக்கவில்லை. ஐரோப்பிய ராணுவ நுட்பங்களைக் கண்டறியும் இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கினார். மேலும் ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் பீரங்கி படையையும் அங்கு உருவாக்கினார்.
பட்டமும் பாராட்டுகளும்
இன்னொருபுறம் ஆட்சிக்கு எதிராக மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. சம்பள உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் 1758ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு ஹைதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த வருடம் மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. வலுவான மராட்டியப் படையை வேறு யாரால் எதிர்கொள்ள முடியும்? இப்போதும் ஹைதர் அலிதான் தலைமையேற்று களமாடினார்.
அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ‘‘தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்’’ என்ற பட்டத்தை மைசூர் அரசவை ஹைதருக்கு வழங்கி கௌரவித்தது.
எந்த ஒரு தலைவனும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் சிறந்த தலைவனாக உருவாக முடியும்.
மைசூர் படையில் சம்பள பாக்கியின் காரணமாகத்தான் முன்பு கலகம் ஏற்பட்டது. கலகம் அடக்கப்பட்டாலும், அதிருப்தி நீடித்தது.
இது நல்லதல்லவே… என தீவிரமாக யோசித்த ஹைதர் அலி, தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார்.
இதனால் மைசூர் படை வீரர்கள் ஹைதர் அலியைக் கொண்டாடினர். மன்னர் சிக்க கிருஷ்ணராஜரும் மகிழ்ச்சியடைந்தார்.
- எம். தமிமுன் அன்சாரி

0 comments:

Post a Comment