Friday, April 27, 2012

ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் - பாராளுமன்றம் நோக்கி பேரணி

பல அமைப்புகள் ஒன்றினைந்து உருவாக்கப்பட்டுள்ள "மூவ்மென்ட்ஸ் ஃபார் சிவில் ரைட்ஸ்" என்ற அமைப்பின் சார்பாக நேற்றைய தினம் 26-04-2012 அன்று புதுடெல்லியில் மாபெரும் பேரணி நடைபெற்றது. மத்திய அரசு இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணியில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர்.


டாக்டர் மெளலானா முஃப்தி முகர்ரம், ஃபதஹ்பூரி மஸ்ஜித் ஷாஹி இமாம் உட்பட பல்வேறு அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இஸ்ரேல் அரசு நமது தேசத்தின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. இதனை கண்டித்தும் மத்திய அரசு உடனே இஸ்ரேலுடனான உறவை முறிக்க வலியுறுத்தியும் இப்பேரணி நடைபெற்றது.

நேற்றைய தினம் காலை 10 மணிக்கு ராம்லீலா மைதானம் அருகே தொடங்கிய இப்பேரணி ஜந்தர் மந்தரில் நிறைவுற்றது. அதனை தொடர்ந்து ஜந்தர் மந்தரில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள்  இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்ததோடு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாரு வந்தனர்.


மெளலானா முஃப்தி முகர்ரம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அவர் கூறும்போது " நம் தேசத்தந்தை மஹாத்மா காந்தி ஜியோனிஸ் கொள்கைக்கு எதிராக பேசியுள்ளார். அதன் பின்னர் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்து ஜவஹர்லால் நேரு அணி சேரா கொள்கை கொண்ட நாடுகளுடன் இந்தியாவையும் இணைத்தார். ஆரம்பகாலகட்டத்தில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை இந்தியா அங்கீகரிக்கவே இல்லை. துரதிஷ்டவசமாக இந்த நிலை மாறி முதன் முதலாக 1991களில் அப்போதையை பிரதமர் நரசிம்ம ராவ் இஸ்ரேலுடன் உறவை மேற்கொண்டார். அதன் பின்னரே இந்தியா இஸ்ரேலின் மிகப்பெரிய வாடிக்கையாளராக மாறியது. இஸ்ரேலிடமிருந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்கியது இந்தியா தான்" இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளரும் எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளருமான ஹஃபீஸ் மன்சூர் அலி கான் சாஹிப் கூறும்போது "இஸ்ரேலிய தூதர்களில் பல பேர் மாநில அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இஸ்ரேலிய தூதர்களில் பல பேர் மாநில அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறான உறவுகள் நாட்டின் நெறிமுறைகளை மீறக்கூடிய செயலாகும். இஸ்ரேலின் உளவு நிறுவனமான "மொஸாத்" நமது நாட்டில் நடைபெற்ற பல வழக்குகளை நேரடியாக விசாரித்து வருவதை பார்க்கும்போது இஸ்ரேல் நாட்டிற்கு நமது நாட்டின் புலனாய்வுக்குழுவின் மீது நம்பிக்கை இல்லாததையே உணர்த்துகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் கூறும்போது "இஸ்ரேலுடனான இந்தியாவின் இராணுவம் தொடர்பான ஒப்பந்தம் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நம்முடைய கலாச்சாரம், பண்பு மற்றும் ஜனநாயகத்தை சீர்குலைக்கக்கூடிய வகையில் செயல்படும் மத்திய அரசு தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். இஸ்ரேலுடைய உளவு அமைப்பான மொஸாதை இந்தியாவிற்குள் விசாரணைக்காக அனுமதிப்பது என்பது நமது நாட்டின்  காவல்துறை, புலனாய்வுத்துறை மற்றும் இராணுவத்தினரை அவமதிப்பதாகவே உள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் செய்யது காஜ்மியின் கைது நடவடிக்கை இந்தியாவில் ஜியோனிஸ கொள்கைகளை எதிர்த்து வருபவர்களை முடக்குவதற்கான செயலே ஆகும். இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகள் இந்திய மண்ணில் வீழ்த்தப்படும், காரணம் இஸ்ரேலை எதிர்க்கக்கூடிய  ஐக்கிய ஜனநாயக கூட்டணி இந்தியாவில் வலுப்பெற்று வருகிறது" இவ்வாறு அப்துர்ரஹ்மான் கூறினார்.


ஆல் இந்தியா இஸ்லாஹி இயக்கத்தின் தலைவர் அப்துல் வஹ்ஹாப் கில்ஜி கூறும்போது "இஸ்ரேல் எப்பொழுதுமே பயங்கரவாதத்தை பொழுது போக்கிற்காகவே செயல்படுத்தி வருகிறது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டதே வன்முறையை அடிப்படையாக வைத்துத்தான். இஸ்ரேலுடனான உறவு இந்தியாவில் பதட்டத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஃபலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களை இந்தியா அங்கீகரிப்பதாக ஆகிவிடும். எனவே இஸ்ரேலுடனான எல்லா உறவுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

தலித் கூட்டமைப்பின் சார்பாக கலந்து கொண்ட உதித் ராஜ் கூறும்போது "மத்திய அரசை வலியுறுத்த இதுவே சரியான தருணமாகும். தலித்களும், முஸ்லிம்களும் ஒன்றினைந்து கூட்டணியாக செயல்பட்டு தங்களுக்காக அவர்கள் வாக்களிக்க வேண்டும்." என்று கூறினார்.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி கூறும்போது "இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குளின் குற்றவாளியான தயானந்த பாண்டேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆடியோ டேப்புகளில் இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களே ஈடுபட்டுள்ளனர் என்பதும், இதற்கு மூளையாக இருந்து செயல்பட்ட முன்னால் இராணுவ அதிகாரி கர்னல் புரோஹித்திற்கு இஸ்ரேலிடமிருந்து உதவிகள் கிடைத்ததும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு இரு காரணங்களே உண்டு. ஒன்று இஸ்ரேல் மற்றொன்று ஃபாசிஸ சங்கப்பரிவாரங்கள்" என கூறினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பான உண்மை செய்தியை எழுதியதற்காகவே தனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அஹமது காஜ்மியின் மகன் துராப் அலி காஜிமி தெரிவித்துள்ளார். என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் இஸ்ரேல் நாட்டை ஒரு கேன்ஸர் என்றும், ஆயிரக்கணக்கான அப்பாவி ஃபலஸ்தீனர்களை கொன்று வருகிறது. எனவே அப்பேற்பட்ட ஒரு கிருமியான இஸ்ரேலை நமது தேசத்திற்குள் அனுமதித்தால் அது ஆரோக்கியமானது அல்ல" என கூறினார்.

இ ந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியோர் பின்வருமாறு:

டாக்டர் பஷீர் அஹமது கான்
தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மெளலானா ஆமிர் ரஷாதி
தலைவர்
ராஷ்டிரிய உலமா கவுன்சில்
பஹாவூர் பரகி
வழக்கறிஞர்
உச்ச நீதிமன்றம்
ஜஹீர் ஜையிதி
தலைவர்
ஷியா பாய்ன்ட்
யாசின் பட்டேல்
ஒருங்கினைப்பாளர்
வஹததே இஸ்லாமி
டாக்டர் அன்வருல் இஸ்லாம்
செயலாளர்
ஏ.ஐ.எம்.எம்.எம்
இர்ஃபானுல்லாஹ் கான்
ஒருங்கினைப்பாளர்ஜாமியா நகர் கமிட்டி
டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி
தலைவர்
என்.பி.சி.ஐ
ஃபைஜல் கான்
தலைவர்
குதாய் கித்மத்கர்
முஹம்மது யூசுஃப்
செயலாளர்
என்.சி.ஹெச்.ஆர்.ஓ
அனீஸ் ஜமான்
தலைவர்
கேம்பஸ் ஃப்ரண்ட்

இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் ஹஃபீஸ் மன்சூர் அலிகான் தலைமையிலான குழு பிரதமருக்கு இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment