Friday, April 27, 2012

வஹாபிகள் – பரேலவிகள் : முஸ்லீம்களின் பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் மத்திய அரசு !


ஒரே மதத்தை பின்பற்றுவர்களுக்கு மத்தியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அவற்றை ஒன்றுபடுத்த முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அவற்றுக்கு மத்தியில் பிரிவினைக்கு தூபம் போடும் அபாயகரமான வேலையை ஒரு அரசு, அதுவும் மதசார்பற்ற அரசு செய்வது பிற்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பஞ்சாப் விஷயத்தில் அடிபட்டு உணர்ந்த பிறகும் காஷ்மீரில் அதை மத்திய அரசு தொடர்வது
விந்தையாக உள்ளது.

ஏற்கனவே பஞ்சாபில் ஆயுதம் தாங்கிய சீக்கியர்களை கட்டுபடுத்த இந்திரா காந்தி பிந்தரவாலேவை வளர்த்து விட்டு பின்பு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக பிந்தரன்வாலேவை அடக்க ஆபரேஷன் புளூ ஸ்டார் நடத்தியதின் மூலம் கடைசியில் இந்திராகாந்தி சுட்டு கொல்லப்பட்டார் என்பது வரலாறு. தற்போதைய மத்திய அரசு இதே பாணி தந்திரத்தை காஷ்மீரில் தற்போது செய்து வருகின்றது.
காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் பெரியவர்களின் கல்லறைகளுக்கு சென்று வழிபடும் பரேலவி குழுவை சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் அஹ்லே ஹதீத் குழுவை சார்ந்தவர்கள் எனப்படும் வகாபி பிரிவை சார்ந்தவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் சமாதி வழிபாடு என்பது இஸ்லாத்தில் இல்லை என்றும் முஸ்லீம்கள் அவர்களின் வேதமாகிய குரான் மற்றும் முஹம்மது நபியின் போதனைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று பிரசாரம் செய்பவர்கள்.
சவூதி போன்ற நாடுகளிலிருந்து வரும் பொருளாதாரம் மூலம் வகாபி பிரிவை சார்ந்தவர்கள் அவர்கள் சிந்தனை சார்ந்த புத்தகங்களை பரப்பி வருவதாகவும் பலரை சமாதி வழிபாட்டிலிருந்து தடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இச்சூழலில் வகாபிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் பரேலவிகள் சாந்தமானவர்கள் என்று நினைக்கும் மத்திய அரசு வகாபிகளை கட்டுப்படுத்த பரேலவிகளை ஊக்குவிப்பதாக சொல்லப்படுகிறது.
இதே அரசியல் தந்திரத்தை தான் அன்றைய இந்திராகாந்தி அரசு பஞ்சாபில் கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பரேலவிகள் எவ்வித ஊர்வலம், பொதுகூட்டம் நடத்துபவர்கள் அல்ல என்றாலும் கடந்த ஆறு மாதங்களில் மத்திய அரசு, ராணுவம் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் பரேலவிகள் தினமும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக ஏதேனும் பொதுக்கூட்டம் நடத்துவது அதிகரித்து வருகிறது.
அது போல் சமீப காலமாக சமாதிகளை புணரமைத்து அழகுபடுத்தும் பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது. இவ்வாறு பரேலவிகளுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் போக்கு ராணுவத்தினர் பலரை அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் “ அரசு ஒருவரை அவர் பின்பற்றும் வணக்க வழிமுறைகளை வைத்து மதிப்பிட முயல்வது அபாயகரமானது. குறிப்பாக தியோபந்த், ஜமாத்தே இஸ்லாமி, அஹ்லே ஹதீத் குழுவை சார்ந்தவர்கள் அபாயகரமானவர்கள், பரேலவிகள் நல்லவர்கள் என்று பிரிப்பது சரியல்ல. ஒரு மனிதர் பீஸ் டிவி பார்ப்பதை வைத்து அவரை தீவிரவாதி என்று அடையாளப்படுத்தும் அளவு அரசு சென்றிருப்பது அரை வேக்காட்டு தனம்” என்றார்.
பரேலவிகளுக்கு அரசு கொடுக்கும் ஆதரவுக்கு உதாரணமாக 2008ல் அஹ்லே ஹதீதின் இஸ்லாமிய பல்கலைகழகத்துக்கு அனுமதி கொடுத்த குலாம் நபி ஆஸாத் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டதும் தற்போது சூபிகள் ஆதரவில் நடத்தப்பட உள்ள ஷேக் உல் ஆலம் பல்கலைகழகம் ஆரம்பிக்கும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.
வகாபிகளை ஒடுக்க பரேலவிகளுக்கு ஆதரவு அளிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ஹுரியத் தலைவர் ஒருவர் இச்செயல் இந்திய அரசுக்கு எவ்வித சாதகமான பலனையும் தராது என்றும் பிரிவினையை அதிகரிக்கும் இச்செயல் அபாயகரமானது என்றும் கூறினார். எல்லா கொள்கையிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பது வாடிக்கை என்ற அவர் எல்லா வஹாபியும் தீவிர போக்குடையவர்கள் அல்ல, எல்லா பரேலவியும் சாந்தமானவர்களும் அல்ல என்ற அத்தலைவர் பாகிஸ்தானின் பஞ்சாப் கவர்னராக இருந்த சல்மான் தஸீரை கொன்றது அல்காயிதாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதி அல்ல என்றும் சமாதி வழிபாடு செய்யும் பரேலவி முஸ்லீம் தான் செய்தார் என்றும் கூறினார்.
நாட்டில் உள்ள எல்லா மத மக்களையும் ஒன்றுபடுத்தி நாட்டை வளப்படுத்த வேண்டிய அரசு ஒரு மதத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளை பயன்படுத்தி குளிர் காய நினைப்பது வல்லரசுக்கு அழகல்ல என்பதோடு அது ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் வரலாறு உணர்த்தும் பாடம். பாடம் படிக்குமா அரசு என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
 thanks to asiananban

0 comments:

Post a Comment