Friday, April 13, 2012

இஹ்ஸான் ஜாஃப்ரி கொல்லப்பட்ட வழக்கில் நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லையாம்

குஜராத் கலவரத்தின்போது 69 நபர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் மந்திரி மோடிக்கும் எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ளது.

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு மதக்கலவரம் வெடித்தடு. அப்போது குல்பர்க் சொஸைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னால் எம்.பி இஹ்ஸான் ஜாஃபரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக முதல் அமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய மந்திரி சபை சகாக்கள், காவல்துறை அதிகாரிகள், பாரதிய ஜனதா பிரமுகர்கள் உள்பட 58 பேர் மீது இஹ்ஸான் ஜாஃபரியின் மனைவி ஜாகியா ஜாஃபரி உச்ச நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.


அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் அப்புகாரை பற்றி விசாரணை நடத்த சி.பி.ஐ முன்னால் தலைவர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அக்குழு மோடியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. மேலும் பலரிடமும் விசாரணை நடத்தி விட்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையை படித்து பார்த்து உச்ச நீதிமன்றம் அறிக்கையை சுதந்திரமாக ஆய்வு செய்யுமாறு நீதிமன்றத்திற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரனை கேட்டுக்கொண்டது. அதன்படி ஆய்வு செய்த ராஜு ராமச்சந்திரன், தனது அறிக்கையை ஆய்வு செய்தார்.

இரு அறிக்கைகளயும் ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மூடி சீல் வைத்த உறையில் வைத்து இறுதி அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு சமர்பித்தது.

அந்த அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை தனக்கு அளிக்குமாறு கோரி, ஜாஹியா ஜாஃபரி, அஹமதாபாத் சிசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அம்மனு நேற்று மேஜிஸ்திரேட்டு எம்.எஸ். பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மாஜிஸ்திரேட் கூறியதாவது, ஜாகியா ஜாஃபரி தனது புகாரில் கூறிய (மோடி உள்ளிட்ட) 58 பேரில் எவர் மீதும் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. அவர்கள் மீதான் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தனது இறுதி அறிக்கையில் கூறியுள்ளது. இத்துடன் பிரச்சனையை முடிக்குமாறு சிபாரிசு செய்துள்ளது. எனவே, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, இறுதி அறிக்கை மற்றும் சாட்சிகளின் வாக்குமூல நகல்கள் ஜாகியா ஜாஃபரிக்கும் 30 நாட்களுக்குள் வழங்கப்படும். ஜாகியா தனது புகாரை தொடருவதற்கு உரிமை உள்ளது. இவ்வாறு மேஜிஸ்திரேட் கூறினார்.

புகார் தாரரான ஜாகியா ஜாஃப்ரியின் கருத்தை கேட்ட பிறகு சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையை ஏற்பதா? இல்லையா? என்பது பற்றி இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

அறிக்கை தொடர்பாக ஜாகியா ஜாஃப்ரி கூறியதாவது, இந்த அறிக்கை எனக்கு வேதனை அளிக்கிறது. இருப்பினும் நீதியைப் பெற தொடர்ந்து போராடுவேன். கடவுளின் மன்றத்தில் நீதி தாமதிக்கப்படும் ஆனால் மறுக்கபடாது. உண்மை வெளிவரும், நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இது கடினமான பயணம்தான். இருப்பினும் நீதிமன்றங்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு புலனாய்வு குழு தலைவர் ஆர்.கே. ராகவன் கூறுகையில், எங்களால் இயன்ற அளவு எங்கள் கடமையை செய்துள்ளோம். எங்கள் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது. எங்கள் முடிவை ஆட்சேபிக்க புகார்தாரர் ஜாஃப்ரியாவுக்கு உரிமை உண்டு என்றார்.

0 comments:

Post a Comment