Thursday, January 3, 2013

தொடரும் பயங்கரம்:புதுச்சேரி மாணவி பாலியல் பலாத்காரம்!

3 Jan 2013 Girl abducted, raped in Puducherry
 
     புதுச்சேரி:டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் வைத்து பாரமெடிக்கல் மாணவி மரணமடைந்த சம்பவத்தால் நாடே பரபரப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் பாலியல் பலாத்காரம் இந்தியாவின் தேசப் பிரச்சனையாக மாறியுள்ளது.
 
     புதுச்சேரியில் திருபுவனையைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவர் பேருந்து நடத்துனர் உட்பட இருவரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
 
     டியூசன் வகுப்புக்குச் சென்ற இந்தப் பெண் அவருக்கு நன்கு தெரிந்த இருவரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக முறையீடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
     திருபுவனையைச் சேர்ந்த இந்த பிளஸ் டூ படிக்கும் இந்த மாணவி விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். இவர் திருபுவனையில் கடத்தப்பட்டு விழுப்புரத்துக்கு கொண்டுவரப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
 
     அவருக்கு புதுச்சேரி அரசாங்க மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சையும், மருத்துவ சோதனையும் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
 
     இந்தச் சம்பவத்தில் இருவர் சம்பந்தப்பட்டதாக அந்த மாணவி புகார் செய்துள்ள போதிலும் இதுவரை ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பெண்ணுரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தச் செய்தி புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன நன்றி, தூது

0 comments:

Post a Comment