Wednesday, January 2, 2013

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்

 dhehlan imam 1    எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் . தெஹ்லான் பாகவி இன்று(02.01.2013) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
 
     நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன . டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரமும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி புனிதாவிற்கு நேர்ந்த கொடூரமும் இவற்றிற்கு சிறு சாட்சிகள் மட்டுமே .இதை விட கொடூரமான நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நூற்றுகணக்கில் நடந்து வருகின்றன .இது மிகுந்த கவலைக்குரியது. பெண்கள் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நம் நாட்டில் இது மிகுந்த அவமானகரமான ஒன்று .
     டெல்லி மாணவிக்கு ஏற்ப்பட்ட கொடூரத்திற்கு பின் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டமும், விவாதமும் பாராட்ட வேண்டிய ஒன்றே.இத்தகைய வன்கொடுமைகளை தடுப்பதற்கு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் .இவற்றை வரவேற்கின்றேன்.

     பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்டங்களை திருத்துவதால் மாத்திரமே இத்தகு குற்றங்களை தடுத்து விட முடியாது .பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு துணை போவதால் தான் பெரும்பாலான பாலியல் வழக்குகளில் குற்றவாளிகள் நடவடிக்கையின்றி தப்பிவிடுகின்றனர் .தண்டனை சட்டத்தை எவ்வளவு கடுமையாக்கினாலும் அதிகாரிகளிடம் மாற்றம் ஏற்படுத்தாத வரை இந்த சட்டங்களால் தீர்வு ஏற்படாது.
 
     தூத்துக்குடி மாணவி புனிதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட உடன் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்ட பிறகே காவல்துறை உரிய நடவிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே பாலியல் வன்கொடுமை உட்பட குற்ற வழக்குகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
     அதோடு பாலியல் வன்முறைகளை தூண்டும் விதமாக நாடெங்கும் ஆபாசம் அதிகிரித்து வருகிறது. குறும்படம், சினிமா, மற்றும் சமூக இணைய தளங்களில் ஆபாசம் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
     பாலியல் வன்கொடுமைகள் உட்பட அனைத்து குற்றங்களுக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மதுபானங்களே. இவற்றை அரசே தலைமையேற்று விற்பனையை அதிகரித்து விட்டு பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றங்களை தடுக்க போகிறோம் என அரசு அறிவிப்பது கேலியான ஒன்று எனவே மதுவை நாடு முழுவதும் தடை செய்வதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க ஆக்கபூர்வ நடவடிக்கையாக அமையும்.
 
     எனவே மத்திய மாநில அரசுகள் மக்களை சமாதனப்படுத்த எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகமட்டும் அறிவிப்புகளை செய்யாமல் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இதுபோன்ற ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8.1.2013 செவ்வாய் கிழமை சென்னை மெம்மோரியல் ஹால் முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில பொது செயலாளர் M.ரபீக் அஹமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment