Tuesday, February 28, 2012

10 வருடங்கள் ஆகியும் இரத்தக்கரையோடு இருக்கும் குஜராத்!


சென்னை: குஜராத் இனப்படுகொலை நடைபெற்று நேற்றோடு 10 வருடங்கள் கடந்து விட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குஜராத் கலவரத்தால் வீட்டை இழந்து, குடும்பத்தினரை இழந்து தவித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எந்த அரசாங்கமும் நரவேட்டை நாயகனான நரேந்திர மோடியிடம் இருந்து குஜராத் மக்களை இன்று வரை பாதுகாக்க இயலவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும்.
அஹமதாபாத் பாப்பு நகர் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் முஸ்லிம்கள்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான் என்று உலக நாடுகளுக்கு முன் பிதற்றிக்கொண்டிருக்க 10 வருடங்கள் ஆகியும் கலவரத்தை கச்சிதமாக நடத்தி முடித்தவர்கள் இன்று வரை சுதந்திரமாக உலாவி வருகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் கலவரத்தில் கொடூரத்தை அரங்கேற்றியவர்களுள் பலர் இன்று அமைச்சர்களாகவும், எம்.பிகளாகவும், எம்.எல்.ஏக்களாகவும் இருப்பது இந்த தேசத்திற்கே அவமானமாகும். ஆனால் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை நீதி மறுக்கப்பட்டு வருகிறது.


கலவரத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் கல்லறைகள் இன்றும் அந்த கொடூர நிகழ்வை சித்தரித்துக்கொண்டிருக்கிறது. சமூகத்திலிருந்து முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் செயல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கலவரத்தில் உயிர் பிழைத்த எண்ணற்ற முஸ்லிம்களால் இதுவரை தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்ப முடியவில்லை. வலுக்கட்டாயமாக முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சொந்த மண்ணிலேயே முஸ்லிம்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.


குஜராத்தை தற்போது ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களே கலவரத்திற்கு காரணம் என்பது தெளிவான உண்மை. இருந்த போதிலும் அவர்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ நீதி வேண்டி தவித்துக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு நீதி வழங்கும் விஷயத்தில் மாநில அரசும், மத்திய அரசும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. நீதி வழங்குவதற்கு பதிலாக கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் மீது அரசியல் விளையாட்டை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பக்கம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என பிரச்சாரம் செய்து பிற மக்களின் ஒட்டுக்களை சேகரித்து வரும் நரேந்திர மோடி, மறுபுரம் முஸ்லிம்களின் இறந்த உடல்களை காட்டி முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு துடித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இவர்கள் இருவருக்கும் மத்தியில் முஸ்லிம்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பொறுத்தவரை சுதந்திரம், நீதி, பாதுகாப்பு என்பது இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். பாராளுமன்றமும், நீதிமன்றங்களும், சட்டமன்றங்களும் மக்களை பாதுகாக்கும் வகையில் தங்களது பணிகளை நேர்மையாக நிறைவேற்றி நீதியை நிலை நாட்டவேண்டும். அதன் மூலம் குஜராத் கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட நரேந்திர மோடியை சட்டத்திற்கு முன் நிறுத்தி தகுந்த முறையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நீதிக்காக ஏங்கும் மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment