Thursday, February 16, 2012

மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்


Gujarat Court send notice to Modi Government.
  கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் எரிக்கப்பட்ட 56 கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்காதது தொடர்பாக குஜராத் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2002-ல் கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் ஆமதாபாதில் 56 கடைகள் எரிக்கப்பட்டன. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியை மத்திய அரசு 2008 பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். அவர்களது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அவர்களது மனுக்கள் 2011 ஆகஸ்டிலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டதாக இந்த மாதத் தொடக்கத்தில் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியரும், மாநில அரசும் செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனுவை உயர் நீதிமன்றத்தில் கடை உரிமையாளர்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அகில் குரேஷி, சி.எல்.சோனி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்பதற்கு மார்ச் 14-க்குள் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கெனவே கண்டனம்: கலவரத்தின்போது 500-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்காதது அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது என்று கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அளித்தத் தீர்ப்பில் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
thanks to asiananban.blogspot.com

0 comments:

Post a Comment