Thursday, February 16, 2012

இந்து முன்னணியினர் முகத்தில் கரியைப் பூசிய காதல் ஜோடி !


புதுவை: புதுவையில் காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்த்த இந்து முன்னணியினர் முகத்தி்ல் ஒரு காதல் ஜோடி கரியைப் பூசியது. உலகம் முழுவதும் 14 /02 /2012  அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் சனில் குமார் மற்றும் முருகையா தலைமையிலான 9 பேர் புதுவையில் உள்ள பாரதி பூங்காவிற்கு சென்றனர். அவர்கள் வருவதைப் பார்த்த காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓடிவிட்டன. ஆனால் வடிவேலு, உமாமகேஸ்வரி ஜோடி மட்டும் தைரியமாக பெஞ்சில் அமர்ந்திருந்தது.

இது தான் நேரம் என்று வந்த அந்த 9 பேர் அந்த ஜோடியிடம் காதலிக்கவா செய்கிறீர்கள், அப்படி என்றால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தாலியை நீட்டினர். உடனே வடிவேலு எந்தவித பதட்டமும் இன்றி அந்த தாலியை வாங்கி உமா கழுத்தில் கட்டினார்.

இதை இந்து முன்னணியில் எதிர்பார்க்கவில்லை. கெஞ்சுவார்கள், வேண்டுவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வடிவேலு தாலியை வாங்க, உமா மகேஸ்வரி கழுத்தை நீட்டவே, சற்றே குழம்பிப் போயினர்.

இருப்பினும் சுதாரித்துக் கொண்ட அவர்களில் ஒருவர் ரூ.1001 மற்றும் இன்னொருவர் ரூ.501 மொய்யாகக் கொடுத்தனர். அந்த ஜோடி பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு டக் டக்கென வீறு நடை போட்டு இடத்தைக் காலி செய்தது.

அப்பாடா திருமணம் நடத்தி வைத்துவிட்டோம் என்று அந்த 9 பேர் பெருமிதம் கொண்ட வேளையில் அந்த ஜோடி பைக்கில் ஏறிக் கொண்டது. புறப்படும் முன்பு தங்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் அந்த பெண் தாலியைக் கழற்றி வீசிவிட்டும் சென்றார்.

இதைப் பார்த்த இந்து முன்னணியினர் முகத்தில் ஈயாடவில்லை. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
thanks to asiananban.blogspot.com

0 comments:

Post a Comment