Tuesday, November 15, 2011

ஈரான் மீது தாக்குதல் - ஆலோசிக்கவில்லை என்கிறார் ஒபாமா



"ஈரானின் அணு ஆயுதச் செயல்பாடுகளை முடக்குவதற்காக, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், அந்நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரானின் சில குறிப்பிட்ட நிறுவனங்கள், கப்பல் கம்பெனிகள் மீது அமெரிக்கா ஏற்கனவே பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஐ.நா.,வும் இதுவரை, நான்கு முறை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 

ஈரான் மத்திய வங்கி உள்ளிட்ட சில முக்கிய அமைப்புகள் மீது, மேலும் தடைகளை விதிக்க வேண்டும் என, அமெரிக்கா கருதுகிறது.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளால், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு வேகத்தில் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்பது, சமீபத்தில் சர்வதேச அணு சக்தி ஏஜன்சி வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதாக, நிபுணர்கள் கருதுகின்றனர். ஈரான் மீதான புதிய தடைகள், அப்பகுதியில் மேலும் சீர்குலைவையே ஏற்படுத்தும் என ரஷ்யாவும், சீனாவும் கூறி வருகின்றன. இதனால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஈரான் மீதான தடைகள் குறித்த கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

ஹவாய் தீவில், இம்மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ ஆகியோரை, 13ம் தேதி தனித்தனியாகச் சந்தித்து, ஈரான் குறித்த அமெரிக்க நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரினார். ஆனால், இரு நாடுகளும் தங்களது ஈரான் கொள்கையை மாற்றிக் கொண்ட அறிகுறி தெரியவில்லை.

இந்நிலையில், ஹவாய் தீவில் ஒபாமா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து, நாங்கள் எதையும் ஆலோசிக்கவில்லை. எனினும், அணு ஆயுதங்கள் ஈரானிடம் இருப்பது அப்பகுதிக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் ஆபத்து.ஈரான் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகள், அந்நாட்டிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால், அந்நாடு வழிக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது. இவ்வாறு ஒபாமா தெரிவித்தார். 
source- yarlmuslim

0 comments:

Post a Comment