Thursday, November 17, 2011

ஹமாஸும், பதாவும் மீண்டும் பேசுகின்றன


பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் இயக்கத் தலைவர் காலீத் மெஷல் இருவரும், இம்மாதம் 25ம் தேதி, எகிப்து தலைநகர் கெய்ரோவில் சந்தித்து, சமரச பேச்சு நடத்த உள்ளனர். பாலஸ்தீன விடுதலைக்காக பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன. இவையனைத்தும், "பாலஸ்தீன விடுதலை கூட்டமைப்பு' (பி.எல்.ஓ.,) என்ற ஒரு பெயரில் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளன. 

யாசர் அராபத்துடன் கருத்து வேறுபட்ட ஹமாஸ் இயக்கம், 2006 பொதுத் தேர்தலில், காசா நிலப் பகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அன்று முதல் ஹமாசுக்கும், பதாவுக்கும் இடையில் ஏழாம் பொருத்தமாகத் தான் இருந்து வருகிறது. இடையில், இருதரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களையும் வகையில், சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தும் பயனில்லை. இந்நிலையில், இம்மாதம் 25ம் தேதி கெய்ரோவில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசும், ஹமாஸ் தலைவர் காலீத் மெஷலும் சந்தித்துப் பேச உள்ளனர்.

இதுகுறித்து பி.எல்.ஓ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்தப் பேச்சுவார்த்தை மூலம் இருதரப்புக்கும் ஏற்படும் இணக்கம், பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும். மேலும், பிளவுபட்டுள்ள பாலஸ்தீனம், ஐ.நா.,வில் முழு உறுப்பினர் அந்தஸ்து எவ்வாறு பெற முடியும் என்ற சந்தேகத்திற்கு விடையும் அளிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment