Monday, November 14, 2011

சட்டவிரோத சிறைக்கெதிரான போராட்டம் வலுக்கட்டும்!


இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய நரேந்திரமோடிக்கு அமெரிக்காவிற்கு செல்ல விசா தர மறுத்தது ஜார்ஜ் w புஷ்ஷின் அரசாகும். மனித குல விரோதியான மோடிக்கு அமெரிக்கா தனது மண்ணில் கால்வைக்க அனுமதிக்காததில் தவறேதுமில்லை.

ஆனால் மனித உரிமைகளின் அப்போஸ்தலராக தன்னை காட்டிக்கொண்டு ஈராக், ஆப்கானிஸ்தான் மீது அநியாயமாக தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொலைச்செய்த புஷ்ஷின் கபட நாடகம் நகைப்பிற்கிடமானது என்பதில் இருவேறு கருத்து இல்லை.

இன்று மோடியை சுற்றிலும் சுருக்கு கயிறுகள் இறுகி வருகின்ற சூழலில் இன்னொரு நல்ல செய்தியும் மேற்கத்திய உலகிலிருந்து வருகிறது. ஜார்ஜ் w புஷ் என்ற உலகமகா பயங்கரவாதி செல்லுமிடமெல்லாம் அவரை கைதுச்செய்யக்கோரி மனித உரிமை அமைப்புகள் களமிறங்கியுள்ளன என்பதுதான் அந்த நல்லசெய்தி.

2002 ஜனவரி 11-ஆம் தேதி 20 கைதிகளைக்கொண்ட முதல் குழுவை அமெரிக்கா குவாண்டனாமோ என்ற காலக்கிரகத்திற்கு அனுப்பிவைத்தது. வருகிற ஜனவரி மாதம் இந்த மனித குல விரோத சிறைச்சாலைக்கும் அங்கு நடந்துவரும் கொடுமைகளுக்கும் 10 ஆண்டுகள் நிறைவுறுகின்றது.இந்த 10 ஆண்டுகளாக குவாண்டனாமோ சிறைக்கொட்டகையை இழுத்து மூடவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுத்தான் வருகிறது.

மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் இந்த சித்திரவதை மையத்தை இழுத்து மூடவேண்டும் என கோரிக்கை வைத்தவேளையில் அதனை ஒப்புக்கொண்டு குவாண்டானோமோ சிறையை மூடுவேன் என வாக்களித்த பாரக் ஒபாமா பின்னர் அதிபராக பதவியேற்றவுடன் சந்தடிசாக்கில் கொடுத்த வாக்கை மறந்துபோனார்.

கடந்த வாரம் கனடாவில் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொள்ள வந்த புஷ்ஷின் மீது அங்குள்ள மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.கடந்த பெப்ருவரி மாதம் ஜெனீவாவிற்கு புஷ் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்கு வழக்கு மிரட்டல் வந்ததைத்தொடர்ந்து தாம் கைதுச்செய்யப்படுவோம் என அஞ்சி அப்பயணத்தையே ரத்துச்செய்தார்.
தற்பொழுடு கனடா நாட்டில் பதிவுச்செய்யப்பட்டுள்ள வழக்கு வருகிற ஜனவரி மாதம் 9-ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.நான்கு பேரை கைதுச்செய்து அநியாயமாக கொடுமை இழைத்ததாக புஷ்ஷின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனித நேயத்திற்கு புறம்பான கொடூரங்களை கட்டவிழ்த்துவிட்ட புஷ்ஷின் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமை அமைப்புகளின் சர்வதேச கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கோட் பிங்க், ஆம்னஸ்டி யு.எஸ்.ஏ, வார் க்ரிமினல்ஸ் வாட்ச், வேல்ட் காண்ட் வெயிட் உள்பட ஒரு டஜன் அமைப்புகள் இணைந்து பிரச்சாரங்களை துவங்கியுள்ளன.சட்டவிரோதமாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதற்கு காரணமானவர்களை தண்டிக்கவேண்டும், குவாண்டனாமோவை மூடவேண்டும், அமெரிக்கா கைதுச்செய்த கைதிகளை மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளுக்கு அனுப்பி நீதியான விசாரணையை உறுதிச்செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

குவாண்டனாமோவும், அமெரிக்காவும், ஜார்ஜ் புஷ்ஷும் மட்டுமல்ல அமெரிக்காவின் பாணியை பின்பற்றும் இந்தியாவிலும் ரகசிய சிறைகளில் அப்பாவிகள் அநியாயமாக அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதும் உலகின் கவனத்திற்கு கொண்டுவரப்படவேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன்பு த வீக் பத்திரிகை இந்தியாவில் செயல்படும் ரகசிய சிறைகளைப்பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டது.

ஆனால், அதனைக்குறித்து பேசுவதற்கு இந்தியாவின் அரசியல் கட்சிகளோ, ஊழலுக்கு எதிராக மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கும் காந்தீயவாத வேடம் புனைந்தவர்களோ முன்வரவில்லை.தற்பொழுது கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சார்ந்த செல்வி மாயாவதி ஆளும் உ.பி. மாநிலத்தில் அநியாயமாக கைதுச்செய்யப்பட்ட முஸ்லிம் சிறுவர்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

அதுமட்டுமல்ல குண்டுவெடிப்புகளின் பெயரால் கைதுச்செய்து சிறையிலடைக்கப்பட்டு வாழ்க்கையின் பல பகுதிகளை வீணாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் நீதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் வாழ்ந்துவருகின்றனர். குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கும் வேளையில் அப்பாவிகள் தண்டனையை அனுபவிப்பதுதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் நிகழும் அவலமாகும். ஆகவே இந்தியாவிலும் இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உரத்த குரல்கள் எழவேண்டும்.

பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்துவரும் மனிதர்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவும் சமூகத்தை விழிப்புணர்வு ஊட்டுவது அவசியமாகும். அதற்கான நல்லதொரு வாய்ப்பாக குவாண்டனாமோ பத்தாண்டு நிறைவு தினமான 2012 ஜனவரி 11-ஆம் தேதி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக மாறட்டும்!

அ.செய்யது அலீ.

நன்றி: தூதுஆன்லைன்

0 comments:

Post a Comment