Monday, March 19, 2012

புகுஷிமா தந்த பாடம்:அணுசக்தி வேண்டாம் – 80 சதவீத ஜப்பான் மக்கள் !


nonukes
டோக்கியோ:நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்து ஏற்படுத்திய பாதிப்பில் ஜப்பான் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். 80 சதவீத ஜப்பானியர்களும் அணுசக்தி வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஒருவருடத்திற்கு முன்பு ஏற்பட்ட
விபத்தில் அணுமின்நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அணுசக்தி தேவையா? என்பது குறித்து நாளிதழ்களும், தொலைக்காட்சி சேனல்களும் இணைந்து ஜப்பான் மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தின.
3,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 80 சதவீதம் பேர் அணுசக்தி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் அணுசக்தி தேவை எனக் கூறியுள்ளனர்.
அணுசக்தி தேவையில்லை என்றால் மின் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று தொழிலதிபர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதை அணுமின் நிலையத்துக்கு அருகில் வசிப்போர் கடுமையாக எதிர்க்கின்றனர்.
எனினும், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க குறுகிய காலத்துக்கு மட்டும் (மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்வரை) அணு உலைகளை செயல்படுத்தலாம் என்று 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து வெளியான கதிர்வீச்சு தடுக்கப்பட்டு, அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று அரசு அறிவித்துள்ள போதும், அது குறித்து 92 சதவீத மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் யோஷிகிஹோ நோடா இந்த ஆண்டின் இறுதியில் எரிசக்திக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர உள்ளார். அதில், அணுசக்தியைச் சார்ந்துள்ள நிலையை குறைத்துக் கொள்ளும் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
செர்னோபில், புகுஷிமா அணுமின் உலைகளில் ஏற்பட்ட விபத்துக்களால் விழிப்புணர்வு அடைந்த கூடங்குளம் அதன் சுற்றுவட்டார மக்கள் அணு உலையை எதிர்த்து போராட்டம் நடத்தும் வேளையில் மக்கள் நலன் பற்றி கவலைப்படாத மத்திய அரசு அதனை அடக்கி ஒடுக்குவது ஆலோசித்து வருவது துரதிர்ஷ்டவசமானது.
thanks to asiananban blogger

0 comments:

Post a Comment