Saturday, March 24, 2012

காஜ்மியின் விடுதலைக்காக வீதியில் இறங்கி போராடிய முஸ்லிம்கள்!

லக்னோ: தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு சமூகத்தின்விடுதலைக்காகவும், வரும் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காகவும் இந்த முஸ்லிம் சமூகம் போராட முன்வரவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. அவ்வப்போது நமது தேசத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதையும் நம்மால் காணமுடிகிறது. சமீபத்தில் இஸ்ரேலிய தூதர் கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாள செய்யது முஹம்மது காஜிமியின் விடுதலைக்காக தங்களுக்குள் பிரிவு இருப்பினும் அவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு ஷியா சன்னி முஸ்லிம்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வீதியில் இறங்கி போராடியுள்ளார்கள்.




காஜிமி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு பிரிவுகளின் தலைவர்களும் ஒன்றினைந்து ஜும்மா தொழுகைக்கு பின் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர். அஷஃபி மஸ்ஜித் அருகே தொடங்கிய இப்பேரணி ஷஹீத் சிமாரக் என்ற இடத்தில் நிறைவுற்றது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு காஜ்மியின் விடுதலைக்காக குரல் கொடுத்தனர்.


ஷியா பிரிவின் தலைவர் மெளலானா கல்பே ஜவ்வாத் தலைமையில் நூற்றக்கணக்கானவர்கள் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர். மெளலானா ஃபஜல் ரஹ்மான் தலைமையிலும் மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பெண்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காஜ்மியின் விடுதலைக்காக குரல் கொடுத்தனர். அதே போன்று இஸ்ரேலுக்கு எதிராகவும் அமெரிக்காவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். 
 காஜ்மியின் கைதை பொதுமக்கள் கோபத்துடன் கண்டிப்பதாக இப்போராட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் தேசியக்கொடி தீ வைத்து கொழுத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் அரசின் இஸ்ரேலுடனான உறவை கண்டிக்கும் விதமாக இப்பேரணி நடைபெற்றது.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "காஜ்மியை விடுதலை செய்!" என்று கூறும் பதாதைகளை ஏந்திச்சென்றனர். காஜ்மிக்கு தாங்கள் முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர். காவல்துறையினர் அவர் மீது போலியாக குற்றம் சுமத்தி அவரை சிக்கவைத்து சிறையிலடைத்து சித்திரவதை செய்து வருவதாக போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.


மக்கள் அனைவரும் ஒன்றினைந்து காங்கிரஸ் அரசின் இத்தகைய அராஜக போக்கை எதிர்த்து போராட வேண்டும் என மெளாலானா கல்பே ஜவ்வாத் கேட்டுக்கொண்டார். டெல்லி காவல்துறை அதிகாரிகள் இஸ்ரேலின் ஊதுகுழலாக செயல்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். காஜ்மியை விடுதலை செய்யாவிட்டா ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் ஒன்றினைந்து நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். வருகின்ற 26ஆம் தேதி அன்றும் பாராளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment