Thursday, March 29, 2012

இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்

புது தில்லி: தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள மணல் திட்டை இராமர் பாலம் என்றும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு தனது நிலையை வியாழக்கிழமை (மார்ச் 29) தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்தால் நீதிமன்றம் தனது விசாரணையைத் தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். தத்து, அனில் ஆர். தவே ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி நேரில் ஆஜரானார்.

"சேது திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அத்திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். அதனால் அந்தப் பகுதியைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டன. கடந்த ஜனவரி மாதம் கூட இது குறித்து மத்திய அரசின் நிலையை உச்ச நீதிமன்றம் கேட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு பதில் தெரிவிக்கவில்லை'' என்று சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார்.

இதையடுத்து பேசிய மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரேன் ராவல், " குறிப்பிட்ட இடத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமானால் அதற்கு மத்திய அமைச்சரவைச் செயலரின் அனுமதியைப் பெற வேண்டும். அதே போல், சேது கால்வாய் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் பச்செரி குழுவின் அறிக்கையை இறுதி செய்யவும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அவசர கதியில் ஆய்வுகளை நடத்த இயலாது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சுப்பிரமணியன் சுவாமி, "பச்செரி குழு அறிக்கையின் நகலை என்னிடம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரினார்.இரு தரப்பு கருத்துகளையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

சேது சமுத்திர திட்டம் தொடர்பான ஆய்வை முடிக்கவும் அறிக்கை தயாரிக்கவும் அதிக காலம் ஆகிறது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அதனால், பச்செரி குழுவின் அறிக்கையை ஆறு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் நகலை மனுதாரருக்கு (சுப்பிரமணியன் சுவாமி) அளிக்க வேண்டும். ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படும் பகுதியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிய மனு மீது மத்திய அரசு இதுவரை தனது நிலையைத் தெளிவுபடுத்தவில்லை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையைக் கேட்டு நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். அரசு பதில் அளிக்கத் தவறினால், அதன் கருத்து கேட்கப்படாமல் விசாரணை நடத்தப்படும்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வியாழக்கிழமைக்கு (மார்ச் 29) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினமணி

0 comments:

Post a Comment