Friday, September 14, 2012

மக்கள் வரிப்பணத்தில் வேலை செய்யும் ஏவலாளிகள்!


 கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலைகளில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்தக்கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சுற்றுவட்டார மக்கள் மீது வன்முறையை ஏவிய தமிழக காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, ம.க.இ.க, பெ.வி.மு தோழர்கள், பாபுலர் பிரான்ட் ஒப் இந்தியா, பாட்டாளி மக்கள்கட்சி, தமிழ் தேச பொதுவுடமைக்கட்சிஉள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கல்பாக்கம் மக்கள் அங்குள்ள அணு உலை ஊழியர்களை உள்ளே செல்லாதீர்கள் என்று மறித்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக தமிழகம் முழுவதும் போராட்டம் பற்றிப் பரவி வருகிறது. இந்த சூழலில் 13000 கோடி செலவழித்து விட்டோம், யுரேனியம் நிரப்பி விட்டோம் அதனால் மூட முடியாது என்று மத்திய அரசு கூறிவருகிறது. ஏன் அதற்கப்புறம் மூட முடியாதா, மூடியதில்லையா? 13000 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணம் அல்ல அது மக்கள் பணம். அந்த மக்களே சொல்கிறார்கள் மூடு.

உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தது மக்கள் விரும்பும் ஒரு நல்லாட்சியை கொடுப்பதற்குத்தான். நீங்கள், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு ஆட்சி செய்யும், அரசியல் ஊழியர்கள்தான் என்பதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் மக்களுக்குத்தான் ஊழியம் செய்யவேண்டும், அதை விட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டுவந்து மக்களை அழித்தொழிக்க கூடாது. இது போலீஸ் பயங்கரவாதிகளுக்கும் பொருந்தும். மக்களின் வரிப்பணத்திலேதான் உங்கள் குடும்பம் வயிறு வளர்க்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

0 comments:

Post a Comment