Wednesday, February 23, 2011

234 தொகுதிகளிலும் பாஜக போட்டி: பொன்.ராதாகிருஷ்ணன்

வேலூர்,பிப்.23:தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வேலூரில் செவ்வாய்க்கிழமை பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
"தமிழ்நாட்டில் பாஜக தனிப்பெரும் சக்தியாக வளர்ந்துள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். இதுவரை கூட்டணி குறித்து எந்தக் கட்சியும் எங்களுடன் பேசவில்லை. தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து திமுகவை ஆட்சியைவிட்டு அகற்றவேண்டும்.

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாகர்கோவிலில் இம்மாதம் 26-ம் தேதி சிலம்பொலி போராட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் அவசரக் கோலத்தில் நடக்கவிருந்த மேலவைத் தேர்தல் நிறுத்தப்பட்டது தமிழக பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னரே மேலவைக்கு தேர்தல் நடத்தவேண்டும்.

இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்னையில் அரசியல் லாபம் கருதாமல் உழைக்கவேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு பாஜக தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளது. ஜனவரி 12-ம் தேதி இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட வீரபாண்டியன் குடும்பத்துக்கு தமிழக பாஜக சார்பில் ரூ.2.லட்சம் வழங்கியுள்ளோம். அவரது சகோதரி ரேவதியின் படிப்புச் செலவை பாஜக ஏற்கும். இலங்கை அரசால் கொடுமையான தாக்குதலுக்கு ஆளாகி, குடும்பம், சொத்துகளை இழந்து தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுக்கு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மார்ச் 6-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நிதிவசூல் செய்யப்படும்.

சென்னையில் 8-ம் தேதி ஒரே நேரத்தில் 30 இடங்களில் பாஜக பொறுப்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று நிதி வசூலிப்பார்கள். இந்தப் பணம் முழுவதும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.


0 comments:

Post a Comment