Saturday, February 19, 2011

அமித்ஷா விவகாரத்தி​ல் பாஜக மிரட்டல்? பிரதமர் மன்மோகன்சிங்


புதுடெல்லி,பிப்.18:குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு பாஜக மிரட்டல் விடுத்ததாக பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாகத் தெரிவித்தார்.

குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டரில் சொராஹ்ப்தீன் கொல்லப்பட்டது தொடர்பாக அந்த மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமீத் ஷா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் இதற்காக சிபிஐ அமைப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் பாஜக குற்றம்சாட்டி வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் புதன்கிழமை நடந்த தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார். நாட்டில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாஜக பெரும் தடையாக இருப்பதாக அப்போது அவர் குறிப்பிட்டார். சரக்குகள் மற்றும் சேவை வரிகள் தொடர்பான அரசியல் சட்டத் திருத்தம் தாமதமாவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

"எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக பாஜக, மிகவும் விரோத மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றன. அதனால் நாடாளுமன்றம் முடங்குகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை என்னால் வெளிப்படையாகக் கூற முடியாது. குஜராத்தில் அமைச்சராக இருந்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கிறீர்கள். அதை வாபஸ் பெற வேண்டும் என்று என்னிடம் (பிரதமர்) தனிப்பட்ட முறையில் அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு மேல் இதுபற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை" என்றார்.

பிரதமர் எந்தப் பெயரையும் வெளிப்படையாகக் கூறவில்லை. எனினும் குஜராத் அமைச்சர் என்று குறிப்பிட்டதால், அது அமித் ஷாதான் என நம்பப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், பிரதமரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சைக்கு வித்திடும் என்று கூறப்படுகிறது.



0 கருத்துரைகள்: ON "அமித்ஷா விவகாரத்தி​ல் பாஜக மிரட்டல்? பிரதமர் மன்மோகன் சிங்"


0 comments:

Post a Comment