Monday, February 21, 2011

சீனாவில் மல்லிகை புரட்சி என்றபெயரில் மக்கள் புரட்சி!!

பீஜிங்,பிப்.21:துனீசியாவிலும், எகிப்திலும் நிகழ்ந்ததுபோல ஆட்சிமாற்றங்கோரி சீனாவில் ’மல்லிகைப் புரட்சி’ என்ற பெயரிலே மக்கள் நடத்துவதற்கான முயற்சிக்கு எதிராக நாடு முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இணையதளம் மூலமாக 'மல்லிகைப் புரட்சிக்கு' அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பீஜிங்கிலும், சீனாவின் இதர 11 நகரங்களிலும் போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நகரங்களில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டனர். பீஜிங்கிலும், ஷாங்காயிலும் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்துவதற்காக கூடியிருந்தனர்.

போராட்ட பீதியைத் தொடர்ந்து சீனாவில் இணையதளங்களுக்கு தணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோரின் மொபைல் ஃபோன் தொடர்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். இணையதளம் உள்பட ஊடகங்களுக்கு சீனாவில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் இருப்பதால் போராட்ட அழைப்புச் செய்தி அதிகமான மக்களின் காதுகளுக்கு சென்று அடையாமல் தடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

இத்தகைய செய்திகள் சாதாரண மக்களுக்கு சென்றடையும் வாய்ப்பு அரிதாகும். ஞாயிற்றுக் கிழமை பீஜிங்கில் 3 பேரை போலீஸ் கைது செய்தது. இவர்களில் ஒருவர் போராட்டத்தில் கலந்துக்கொள்ள நகரத்திற்கு மல்லிகைப் பூவுடன் வந்தவராம். ஷாங்காயில் மூன்றுபேரை போலீஸ் விரட்டியடித்தது. "எங்களுக்கு உணவு தாருங்கள்! வேலை தாருங்கள்! வீடு தாருங்கள்! நீதி கிடைக்கச்செய்யுங்கள்!" ஆகிய முழக்கங்கள் அடங்கிய செய்திதான் இணையதளம் வாயிலாக அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வலைப்பூக்கள் மற்றும் இணையதளங்களில் மல்லிகை என்ற பொருளைத் தரும் 'ஜாஸ்மின்' என்ற வார்த்தையை தேடுவதை தடுப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசியல் ரீதியான செய்திகள் அனுப்புவதற்கு ஏற்கனவே அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

0 comments:

Post a Comment