Saturday, February 19, 2011

யுரேனியம் விற்பனை:இந்தியாவுக்​கு சாதகமாக செயல்பட அரசுக்கு ஆஸ்திரேலிய அமைச்சர் வலியுறுத்த​ல்

மெல்போர்ன்,பிப்.18:அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரேனியம் விற்க மாட்டோம் என்கிற கொள்கையை தளர்த்தி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படும்படி லேபர் கட்சி தலைமையிலான அரசுக்கு ஆஸ்திரேலிய அமைச்சர் மார்டின் பெர்குசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தகவலை பேர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா ஒன்றும் அயோக்கியத் தனமான நாடு இல்லை. அந்த நாடுக்கு என சிறப்பு கவனம் செலுத்தி யுரேனியம் விற்பனை விஷயத்தில் சாதகமாக செயல்படுவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பெர்குசன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு யுரேனியம் விற்பது தொடர்பான விவகாரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உருவாகியுள்ள பிரச்னை சிக்கலானதுதான். எனினும் அதை சீர்தூக்கி பார்த்து, இந்தியாவுக்கு சாதகமாக செயல்படும் அதே வேளையில் அணு மின்சக்தி உற்பத்தியில் மூலப் பொருளாக விளங்கும் யுரேனியப் பயன்பாடு விஷயத்தில் மிகுந்த பொறுப்புடன் செயல்படும்படி இந்தியாவை நிர்பந்திப்பதே சிறந்ததாக தனக்கு படுகிறது என்றும் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரேனியத்தை விற்கமுடியாது என்கிற பொதுவான தடையை நீக்கும்படி கோருவது எனது திட்டமல்ல.

ஆனால், இந்தியா விஷயத்தில் நீக்குபோக்கு காட்டலாமே என்பதுதான் எனது வேண்டுகோள் என்றும் அவர் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


0 comments:

Post a Comment