Monday, February 14, 2011

காதலர் தினம் எப்படி வந்தது?

இஸ்லாத்திற்கு ஒவ்வாத, அந்நியக் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் பலவற்றை முஸ்லிம்கள் தற்காலத்தில் அதிகமாகச் செய்கிறார்கள். அந்தச் செயல்களில் ஈடுபடுகின்ற பலருக்கு தாங்கள் செய்வது சரியா, தவறா என்பது தெரியாது.

ஆம்! அவர்கள் ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் அடையாளங்கள் அவிசுவாசத்தின் அடையாளங்கள். அவர்கள் கடன் வாங்கும் கருத்துகள், சிந்தனைகள் யாவும் மூடநம்பிக்கையிலிருந்து பிரவாகமெடுத்தது. இவைகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு நேரெதிரானவை.

"வேலன்டைன்ஸ் டே" என்ற காதலர் தினத்தை (பிப்ரவரி'14) எடுத்துக் கொள்ளுங்கள். ஐரோப்பிய நாடுகளில் செத்துவிட்ட இந்தத் தினம், அமெரிக்கா, பிரிட்டனில் மட்டுமே தற்பொழுது உயிரோடிருக்கும் இந்தத் தினம், திடீரென்று இப்பொழுது முஸ்லிம் நாடுகளில் முளைத்திருக்கிறது. யார் இந்த வேலன்டைன்? ஏன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது?

காதலர் தினத்திற்கென்று கதைகள் ஏராளம் உண்டு.

நான்காவது நூற்றாண்டில் ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மதச் சடங்குதான் இந்த வேலன்டைன் கொண்டாட்டம். ஆட்டு மந்தைகள் மற்றும் பொருள் வளத்திற்கான கடவுளான லூப்பர்கஸ் என்ற கடவுளை கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இது.

இந்தத் தினக் கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய விஷயம் உண்டு. இந்தத் தினத்தில் ஒரு குலுக்கல் நடைபெறும். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அல்ல இது. இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காகவும், பொழுது போக்கிற்காகவும் தாரை வார்த்துத் தர நடக்கும் குலுக்கல் இது. எந்த இளம் பெண் எந்த ஆணுக்கு என்பதைக் குலுக்கலில் எடுக்கப்படும் துண்டுச் சீட்டு தீர்மானிக்கும்.

அடுத்த வருடம் இதே தினத்தில் புதிய குலுக்கல் நடைபெறும் வரை இந்த இளம் பெண்கள் அவரவருக்குரிய ஆண்களுடனேயே காலம் தள்ள வேண்டும். அந்த ஆண்களுக்கு இவர்கள் இன்பம் தந்து கொண்டிருக்க வேண்டும். இந்தத் தினத்தில் இன்னொரு இழிவான காரியமும் அரங்கேற்றப்படும். இரண்டு இளம் ஆண்கள் ஓர் இளம் பெண்ணை தோல் வாரினால் அடிப்பார்கள். இந்த ஈன இரக்கமற்ற செயலைச் செய்யும் அந்த இரண்டு ஆண்களும் ஒரு சிறிய ஆட்டுத் தோலைத்தான் ஆடையாக உடுத்தியிருப்பர். அந்தச் சிறிய ஆடையும் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் மற்றும் நாய்களின் ரத்தங்களைக் கொண்டு கறை படுத்தப்பட்டிருக்கும்.

இந்தச் சாட்டையடியை 'புனிதமானதாக' அவர்கள் கருதினார்கள். அந்த இளம் ஆண்கள் 'புனிதப் புருஷர்களாக' மதிக்கப்பட்டார்கள். இப்படி சாட்டையடித்தால் அந்தப் பெண்கள் நல்ல முறையில் தங்கள் குழந்தைகளை வளர்ப்பார்களாம். இப்படியொரு நம்பிக்கை. இதற்கொரு கொண்டாட்டம்.

இந்த மடத்தனமான லூப்பர்காலியா என்றழைக்கப்படும் கொண்டாட்டத்தை நிறுத்துவதற்காக கிறிஸ்தவ மதம் கடும் முயற்சி எடுத்தது. வழக்கம் போல் தோல்வி கண்டது.

ஆதலால் குறைந்தபட்ச நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தது. குலுக்கல் சீட்டுகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக புனித துறவிகளின் பெயர்களை வைத்தது.

இப்பொழுது குலுக்கலில் எந்த ஆண் எந்தத் துறவியின் சீட்டை எடுக்கிறானோ அவன் அடுத்த ஆண்டு இந்தத் தினம் வரை அந்தத் துறவியைப் பின்பற்றி, அவரை மாதிரியே வாழ வேண்டும். இந்தச் சிறு மாற்றத்தைக் கிறிஸ்தவ மதம் கொண்டு வந்தது.

இது சிறிது காலத்தில் "துறவி வேலன்டைன்" தினம் என்று மாற்றப்பட்டது.

கி.பி.496-ல் போப் கிளாசியஸ் என்பவரால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. துறவி வேலன்டைன் என்பவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார்.

இருப்பினும் கிறிஸ்தவக் கதைகளில் விதவிதமாக 50 வேலன்டைன்கள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு வேலன்டைன்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை, பண்புகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன.

ஒர கதைப்படி, துறவி வேலன்டைன் என்பவர் ஒரு 'காதல் துறவி'யாக இருந்துள்ளார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிறைக்காவலரின் மகளை அவர் காதலித்தாராம்.

இந்தக் காதலர் தினத்தில் நடைபெறும் குலுக்கல்களால் குழப்பங்களும், தகராறுகளும் தலைதூக்க ஆரம்பித்தன. இந்தக் குழப்பங்களையும் தகராறுகளையும் சமாளிக்க முடியாத பிரெஞ்சு அரசு, கி.பி.1776-ல் இந்தச் சடங்கைத் தடை செய்தது.

அந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது ஒழிந்தது.

இங்கிலாந்தில் 'புரித்தான்கள்' என்ற இனத்தார் பலமாக இருந்தபொழுது இது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார்.

இங்கிலாந்திலிருந்து இந்தச் சடங்கு புதிய உலகிற்கு அறிமுகமாகியது. வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர்.

கி.பி.1840-ல் எஸ்தர் ஏ.ஹவ்லண்ட் என்பவர் முதன்முதலாக அமெரிக்க காதலர்தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது.

இதன் பிறகு 'வேலன்டைன் தொழிற்சாலை' என்னும் பணம் பண்ணும் தொழிற்சாலை அமோக வளர்ச்சிப் பெற்றது.

இன்று ஜாஹிலிய்யாவின் பலம் எங்கும் வியாபித்திருக்கிறது. கலாச்சாரத்தில், அன்றாட மனித வாழ்வில் அது தனது பிடியை இறுக்கியுள்ளது. மீடியாவும் அதன் பிடிக்குள்ளேதான் இருக்கிறது.

இதனால்தான் முஸ்லிம்கள் வேலன்டைன்களையும் வரவேற்று, அரவணைத்துக் கொள்கின்றனர்.

முஸ்லிம்களாகிய நாம் இவற்றின் பிடியிலிருந்து வெளியில் வரவேண்டும். நமது வாழ்வில் அந்நிய, அறியாமைக்கால சிறு கறை கூடப் படியாமல் பாதுகாக்க வேண்டும்.

மூலம் : இம்பாக்ட் இண்டர்நேஷனல், லண்டன்

0 comments:

Post a Comment