Wednesday, February 23, 2011

லிபியா வன்முறையில் தமிழக வாலிபர் மரணம்

புளியங்குடி,பிப்.22:லிபியாவில் நடந்து வரும் மக்கள் புரட்சியை ஒடுக்க அதிபர் கடாபியின் ஆதரவாளர்கள் நடத்திய வெறியாட்டத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த முருகையா பாண்டியன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா பாண்டியன். இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு முன்பு முருகையா பாண்டியன் உள்பட 26 பேர் லிபியாவில் கூலி வேலை பார்க்கச் சென்றனர். ஆனால் அவர்களுக்கு முறையாக கூலி தரப்படவில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பெரும் சிரமத்தில் தவித்து வரும் அவர்களை மீட்க வேண்டும் என்று கோரி அவர்களது குடும்பத்தினர் முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது லிபியாவில் நடந்து வரும் கலவரத்தில் சிக்கி முருகையா பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று நடந்த மோதலில் பாண்டியன் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தகவல் பரவியதும் தலைவன் கோட்டை கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்று பிற்பகல் 1 மணியளவில் அங்கு சிக்கியுள்ள அனைத்துத் தமிழர்களையும் மீட்கக் கோரி அவர்களது குடும்பத்தினர் நெல்லை சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமனை சந்தித்து மனு அளித்தனர். அனைவரையும்
பத்திரமாக மீட்பது குறித்து தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று ஆட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.

0 comments:

Post a Comment