Friday, June 15, 2012

செய்திகள் அறிவோம் ----புனித மக்கா முற்றுகை 1979



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது.ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று 1399 ஆண்டுகள் கழிந்து 1400 ஆவது வருடம் ஆரம்பித்த முஹர்ரம் முதலாவது நாள்.அடுத்து காரணம் 1979 நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகை.இந்த மக்கா முற்றுகை பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

இஸ்லாமிய உலகை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கிய இந்த முற்றுகையை முன்னின்று நடத்தியவன் பெயர்  ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி.இவன் சவுதி அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தை சேர்ந்த  செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நஜ்த் பிரதேசம் பற்றி இவ்வாறு முன்னறிவுப்பு செய்தார்கள்.




ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,

ஒரு முறை அண்ணல் நபியவர்கள், இறைவா! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக எனப் பிரார்த்திக்க…. அங்கிருந்த நஜ்து வாசிகளில் ஒருவர், இறைத்தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, நபிகளார் மீண்டும் இறைவா! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக என்று கேட்டிட…. அதற்கு மீண்டுமவர், இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, (அறிவிப்பாளர் சொல்கிறார் மூன்றுமுறை ஷாமுக்கும் எமனுக்கும் அபிவிருத்தியை இறைவனிடம் வேண்டிய நபிகளார், இறுதியில் தம் தோழர்களை நோக்கி……
'நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.

(ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051)

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட ஒரு பிரதேசத்திளிருந்தான் இந்த ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி வெளிவந்தான்.இவன் தன் மைத்துனனான் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தாணியை  வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவித்தான்.
ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி

நஜ்த் பிரதேசத்தில் மிகவும் பலம்வாய்ந்த குடும்பத்தில் பிறந்த ஜுஹைமான் இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த உலமாக்களில் ஒருவனாக இருந்தான்.மேலும் இவன் சவுதி பாதுகாப்புப் படையின் முன்னால் காப்ரல் ஆவான்.மேலும் முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்களின் முன்னாள் மாணவர்களில் ஒருவன்தான் இந்த ஜுஹைமான்.பின்னாட்களில் முப்தி அவர்களுக்கு அதிராக போர்க்கொடி தூக்கியன் இவன்தான்.

சவுதி அரேபியாவை ஆளும் மன்னர் பரம்பரை சவுதி மண்ணை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கி மேலைத்தேய கலாச்சாரத்தை பரப்ப முயற்சி செய்கிறது இது தான் ஜுஹைமானின் அடிப்படை குற்றச்சாட்டு.மேலும் தனது மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானியே இமாம் மஹ்தி என்றும் அது பற்றி அல்லாஹ் தனக்கு கனவு மூலம் அறிவித்ததாகவும் அவன் கூறினான்.உண்மையில் இந்த இரு பொய்யர்களையும் நம்பியவர்கள் இஸ்லாமிய அறிவற்ற பாமர முஸ்லிம்களல்ல இவர்களை நம்பியவர்களில் பெரும்பாலானோர் மதீனாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்த உலமாக்கள்.சவுதி அரேபிய தவிர்ந்த எகிப்து,யேமன்,குவைத் மற்றும் ஆபிரிக்காவின் கறுப்பின முஸ்லிம்களும் இந்த குழுவில் அடங்குவர்.

1979 நவம்பர் 20 அதாவது 1400 ஆவது ஹிஜ்ரி  ஆண்டின் முதல் நாள் கிட்டத்தட்ட 50000 தொழுகையாளிகளுக்கு தொழுகை நடத்த மஸ்ஜிதுல் ஹரத்தின் இமாம் முஹம்மத் அல் சுபைல் முன்வந்தார்.அப்போது தொளுகையாளிகளோடு கலந்திருந்த 500 க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் அவர்களின் அங்கிகளுக்கிடையே ஒழித்து வைத்திருந்த ஆயுதங்களுடன் முன்வந்து மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுழையும் நுழைவாயில்கள் அனைத்தையும் சங்கிலிகள் கொண்டு பூட்டினார்கள்.இந்த நேரத்தில் அவர்களுடன் போராடிய இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த 500 பேரில் சில பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மஸ்ஜிதுல் ஹரத்தை கைப்பற்றிய கலகக்காரர்கள் ஹரத்துக்கும் கட்டுப்பட்டு அறைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்பை துண்டித்தனர்.பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பல தொழுகையாளிகள் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் எல்லோரும் விடுவிக்கப்படவில்லை சிலர் தொடர்ந்தும் பணயக் கைதிகளாக ஹரத்துக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டனர்.ஆனால் இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது,மேலும் அவர்கள் மஸ்ஜிதின் மேல்மட்டங்களை தற்காப்பு நிலைகளாகவும் மினராக்களை ஸ்னைப்பர் நிலைகளாகவும் பயன்படுத்தினர்.


புனித மஸ்ஜிதுல் ஹரம் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து ஒரு சில மணித்தியாலத்திலே மஸ்ஜிதை மீட்க களத்தில் குதித்தது சவுதி அரேபியாவின் பாதுகாப்புப் படை அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த இளவரசர் சுல்தான் அவர்களே களத்தில் படைகளை வழிநடத்தினார்.அன்றைய நாள் மாலை நேரத்துக்குள் முழு மக்கா நகரிலும் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.என்றாலும் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் யுத்தம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளதால் சவுதியின் பாதுகாப்புப் படை உலமாக்களின் பாத்வாவுக்கு காத்திருந்தனர்.நிலைமையை உணர்ந்த முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்கள் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுளைய பத்வா வழங்கினார்.


உலமாக்களின் பத்வாவை பெற்றுக்கொண்ட சவுதி பாதுகாப்புப் படை பிரதான மூன்று வாயில்கள் ஊடாக முன்னணி தாக்குதலை தொடுத்தனர்.சவுதி பாதுகாப்புப் படை போன்றே கிளர்ச்சியாளர்களின் தாக்குதலும் மிகவும் கடுமையாக இருந்தது.மேலும் மினராக்களில் பதுங்கியிருந்த ஸ்நைபேர் துப்பாக்கிகளின் தாக்குதல் சவுதி பாதுகாப்புப் படைக்கு பெரும் சவாலாக இருந்தது.இறுதியில் நவம்பர் 27 ஆம் திகதியாகும் போது மஸ்ஜிதுல் ஹரத்தின் பெரும்பாலான பகுதிகதி சவுதி பாதுகாப்புப் படை வசம் வந்தது.கிளர்ச்சியாளர்களின் வசம் அப்போது பாவனையில் இருந்த நிலக்கீழ பாதை மட்டுமே இருந்தது.இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த முற்றுகை 255 பேருக்கு மரணத்தை தேடிக்கொடுத்து முடிவுக்கு வந்தது.இதன்போது 560 பேர் காயம் அடைந்ததனர்.மேலும் இறந்தவர்களில் 127 சவுதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் 117 பேர் கிளர்ச்சியாளர்கள்.
ஜுஹைமான் இமாம் மஹ்தி என அறிவித்த அவன் மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானி.


கிளர்ச்சிக் குழுவின் தலைவன் ஜுஹைமான் உட்பட 67 கிளர்ச்சியாளர்கள் கைதி செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவரும் சவுதியின் மிக முக்கியமான நான்கு நகரங்களில் மக்கள் மத்தியில் சிறைச்சேதம் செய்யப்பட்டனர்.






  இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்களோ அல்லது நான் மேலே பதிந்த விடயங்களில் ஏதாவது தவறு இருப்பின் தயவு செய்து உங்கள் கருத்துகளை குறிப்பிடவும்.திருத்தி கொள்கிறேன்.

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.






thanks to tamilkhilafa

0 comments:

Post a Comment