Monday, June 18, 2012

வெள்ளை மாளிகையில் ஒபாமாவை அதிர வைத்த இணையதள நிருபர் !


வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அதிபர் ஒபாமா அறிக்கை படித்துக் கொண்டிருந்த போது நிருபர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி மேல் கேள்விகள் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல
முன்னணி பத்திரிகைகளை சேர்ந்த நிருபர்கள், கேமராமேன்கள் குவிந்திருந்தனர். இந்த நிகழ்ச்சி டிவியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த அதிபர் ஒபாமா, அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு இளை ஞர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை வாசித்தார். 

அப்போது நிருபர் ஒருவர் குறுக்கிட்டு, அமெரிக்க தொழிலாளர்களை விட, வெளிநாட்டினருக்கு நீங்கள் ஏன் ஆதரவாக பேசுகிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அப்போது நிருபர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. நிருபரின் கேள்வியால் எரிச்சல் அடைந்த ஒபாமா, இது கேள்வி கேட்பதற்கான நேரம் இல்லை சார்.. என்று கூறி தொடர்ந்து அறிக்கையை படித்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த நிருபர் குறுக்கிட்டு கேள்வி கேட்க முயன்றார். அப்போது, நான் விவாதம் நடத்த விரும்பவில்லை. உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்றார்.

வெள்ளை மாளிகையில் நடக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, அதிபர் அறிக்கை படித்து முடித்த பிறகுதான் நிருபர்கள் கேள்விகள் கேட்பார்கள். ஆனால், ஒபாமா படிக்கும் போது அடிக்கடி குறுக்கிட்டு நிருபர் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒபாமாவிடம் கேள்வி கேட்டவர் நீல் மன்ரோ என்பதும், தி டெய்லி காலர் இணைய தளத்தின் நிருபர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இந்த இணையத்தின் தலைமை ஆசிரியர் வெளியிட்ட அறிக்கையில், நிருபரின் வேலையே கேள்விகள் கேட்டு பதில் பெறுவதுதான் என்று தெரிவித்துள்ளார். அரசு என்ன செய்கிறது என்பதை கண்டுபிடிப்பதே எங்கள் வேலை. ஆனால், அரசியல்வாதிகள் பெரும்பாலும் எங்களிடம் அதை சொல்ல விரும்புவதில்லை. ஒரு நல்ல நிருபர், நல்ல செய்தியை கொண்டு வருவார். நீல் மன்ரோ விஷயத்தில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
thanks to asiananban

0 comments:

Post a Comment