Friday, December 23, 2011

துருக்கி - பிரான்ஸ் உறவில் லடாய்


100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டமான் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில் துருக்கியர்களால் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையென்றும் அதனை மறுப்பது குற்றச் செயல் என்றும் கூறும் சட்டமூலத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளதன் பின்னணியில், துருக்கி தமது தூதுவரை பாரீஸிலிருந்து மீள அழைத்துக் கொண்டுள்ளது.

இனப்படுகொலை நடந்தது என்பதை மறுக்கின்ற துருக்கி, பிரான்ஸ் அதிபர் நிக்கலஸ் சார்க்கோஸி, அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்னம், அந்நாட்டிலுள்ள ஆர்மேனியர்களின் ஆதரவை திரட்டவே இதனைப் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்மனித உரிமை இந்த சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு சபைக்கு வந்தபோது அங்கு 577 உறுப்பினர்களில் வெறும் 50 பேர் மட்டுமே சமூகமளித்திருந்தமையே அங்கு இந்த சர்ச்சைக்குரிய சட்டம் ஏற்படுத்தியுள்ள எதிர்ப்பலையை வெளிப்படுத்துகின்றது.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையான தேசிய அசெம்பிளியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட முயற்சியாக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்துள்ள சில அமைச்சர்கள், இந்தச் சட்டம் தேவையற்றது என்றும் நாட்டின் இராஜதந்திர பங்காளியான துருக்கியுடனான உறவுகளையே பாதிக்கும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த சட்டமூலத்தை ஆதரிப்பவர்கள் அதனை எப்படியாவது விரைவில் சட்டமாக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆனால், பிரான்ஸ் நாடாளுமன்றம் வரும் பெப்ரவரியில் கலையவுள்ள நிலையில், அது நாடாளுமன்ற நடைமுறைகளில் சிக்கி இடை நடுவில் தங்கிவிடுமோ என்ற அச்சமும் அவர்களை தொற்றிக்கொண்டுவிட்டது.

ஒட்டமான் பேரரசு சரிந்த காலத்தில் சுமார் 15 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அந்த கொலைகளை ஒரு இனப்படுகொலைதான் என்பதை 2001ம் ஆண்டில் தான் பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் அதனை மறுப்பவர்களுக்கு எவ்வித தண்டனையும் அந்த சட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கவில்லை.

துருக்கி வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் மோசமான தருணங்களை அப்போது கொல்லப்பட்டவர்களின் பெயரில் அந்நாடு ஏற்றுக்கொண்டுத்தான் ஆகவேண்டும் என்பதை பிரான்ஸ் வலியுறுத்திவருகின்றது. இரண்டாம் உலகப் போரின்போது யூதர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தையும் பிரான்ஸ் இப்படித்தான் அதிகாரபூர்வமாக வலியுறுத்தியிருக்கிறது.

நெருக்கடியில் பிரான்ஸ் வெளியுறவு 
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மிக நெருக்கமான வர்த்தக உறவுகள் மட்டுமன்றி அரபுலக கிளர்ச்சியில் குறிப்பாக தற்போது எரிந்துகொண்டிருக்கும் சிரியா விவகாரத்தில் துருக்கி வகிக்கின்ற முக்கிய பங்குக்கு மத்தியில் இந்த விவாதம் பயனற்றது என்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலான் யுப்பே முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் துருக்கியிடமிருந்து கடுமையான இராஜதந்திர பதில் விளைவொன்று ஏற்பட்டுத்தான் ஆகுமென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே கொண்டுவரப்படும் இந்த சட்டமூலத்துக்கு மறைமுக ஆதரவு வழங்கும் பிரான்ஸ் அதிபரின் நிலைப்பாட்டுடன் நேரடியாகவே மோதும் போக்கு அலான் யுப்பேயின் இந்த கருத்து புலப்படுத்துகி்ன்றது.

பிரான்ஸில் ஆர்மேனியர்கள் செறிவாக வாழும் மிக முக்கியமான தேர்தல் தொகுதியொன்று இருக்கிறது.- அதேநேரம் அங்கு நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்னும் நான்கு மாதங்கள் தான் இருக்கின்றன.

கீழ்ச்சபையில் இந்த சட்டமூலத்துக்கு அங்கிகாரம் கிடைத்துவிட்டது என்றாலும் அதனை சட்டமாக்குவதற்கு செனட் சபையின் ஆதரவும் தேவைப்படும் நிலையில் இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் அது சாத்தியப்படுமா என்ற கவலையும் சட்டத்தை ஆதரிப்போர் மத்தியில் அதிகரித்துள்ளது.

மறுபுறத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அண்மைய மாதங்களில் மிகக் கவனமாக பார்த்து பார்த்து நகர்த்திவருகின்ற இராஜதந்திர காய்களுக்கு இடைநடுவில் இந்த ஒருசில எம்.பிக்களின் நடவடிக்கை இடையூறு ஏற்படுத்திவிட்டதே என்பது தான் வெளியுறவு அமைச்சரின் விசனத்துக்கும் காரணம்.
THANKS TO YARLMUSLIM

0 comments:

Post a Comment