Saturday, December 31, 2011

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் மசோதா தாக்கல். குரேஷி


கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் மசோதா வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படக் கூடும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்தார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு முக்கிய திருத்தம்: கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் தொடர்புடைய நபர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் பரிந்துரைத்திருந்தோம்.

இதில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கொடிய குற்றங்களில் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர் ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவருக்குத் தடை விதிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அந்த யோசனையை ஏற்றுக் கொண்டுள்ளோம். இது தொடர்பான மசோதா வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

பதவிப் பறிப்பு: கிரிமினல்களுக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமையை உருவாக்குவது கடினம் என்று மத்திய அரசு கருதுகிறது. ஏனெனில் ஒவ்வொரு கட்சியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிரிமினல் பின்னணி உடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இப்போதைய சட்டவிதிகளின்படி பதவியில் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும்போது அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிட மட்டுமே அவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அவர்களது பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. புதிய சட்டத் திருத்த மசோதாவின்படி அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் அவர்களது பதவியும் உடனடியாகப் பறிக்கப்படும்.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக சிலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் நடைபெறுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது.

லோக்பால் மசோதாவால் தாமதம்: தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள சீர்திருத்தங்களை அமல்படுத்துமாறு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பான மசோதாக்கள் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதியளித்திருந்தார்.

as
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment