Sunday, April 3, 2011

கடலில் கலந்த ஜப்பானிய அணுக்கதிர் வீச்சு! தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள்

ஜப்பானின் அணுஉலை கதிர்வீச்சு கடலில் கலந்தது. ஜப்பானில் கடந்த மாதம் 11-ந் தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. இதில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 

இப்பேரழிவில் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலைய அணுஉலைகள் வெடித்து சிதறின. 

அதில் இருந்து வெளியே றிய கதிர்வீச்சு பால், குடிநீர், உணவு பொருட்களில் பரவியுள்ளது. 

இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். காற்றிலும் கதிர்வீச்சு பரவியுள்ளது. அது பக்கத்து நாடுகளான தென்கொரியா, சீனா, தைவான், இந்தோனேஷியா மற்றும் இங்கிலாந்து சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப் பிய நாடுகளுக்கும் பரவி வருகிறது. 

இந்த நிலையில் தற்போது அணு கதிர்வீச்சு கடலிலும் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ அணுமின் கார்ப்பரேசன் அதிகாரிகள் புகுஷிமாவில் வெடித்து சிதறிய அணு உலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, வெடித்த 2-வது அணு உலையின் அடியில் கீறல் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து கசிந்த கதிர்வீச்சு கடலில் கலந்துள்ளது. இதனால் புகுஷிமா அணுஉலையை ஒட்டியுள்ள கடல் தண்ணீரில் வழக்கத்தை விட 1000 மடங்கு அதிகமாக கதிர்வீச்சு உள்ளது. 

ஆகவே அதை தடுக்கும் நடவடிக்கையில் அணு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. டோக்கியோ அணுமின் நிலைய கார்ப்பரேசன் தற்போது கீறல் ஏற்பட்ட 2-வது அணு உலையை கான்கிரீட் மூலம் மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

இதற்கிடையே, பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு வெடித்து சிதறிய புகுஷிமா அணு உலையை ஜப்பான் பிரதமர் நோட்டோ கான் நேற்று முதன் முறையாக நேரில் பார்த்தார். கதிர் வீச்சு தாக்கத்தை தடுத்து நிறுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

மேலும், ரிகுஷென்டகடா என்ற மீன்பிடி கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று மக்களை சந்தித்தார். நிவாரணப் பணிகள் நடைபெறுவது குறித்து அவர்கள் மத்தியில் பேசினார்.

0 comments:

Post a Comment