Wednesday, April 6, 2011

11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!!


அலுவலகத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் உழைக்க வேண்டுமானால் இடையில் சிறிது ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து 11 மணிநேரம் வேலை செய்பவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கிலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்றில் இரண்டு மடங்கு அதிகமானதாகும்.

இதய நோய்க் கோளாறுகளுக்காக சிகிச்சைப் பெற வருபவர்களிடம் அவர்கள் மது அருந்துகின்றனரா, புகைப் பிடிக்கின்றனரா என்றெல்லாம் கேட்பது போல் அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தொழில் புரிகின்றனர் என்றும் கேட்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவொன்று நடத்தியுள்ள ஆய்வின் முடிவிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 வருடங்களுக்கு மேலாக அரசாங்க ஊழியர்களாகப் பணிபுரியும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அவர்களின் மருத்துவ அறிக்கைகளைக் கொண்டு அவர்களின் இதயத் தொழிற்பாட்டின் நிலை பற்றி மதிப்பீடுகள் செய்யப்பட்டன. சாதாரணமாக ஒன்பது மணி முதல் ஐந்து மணி வரை தொழில் செய்பவர்களிலும் பார்க்க ஒரு நாளைக்கு 11 மணிநேரம் தொழில் புரிபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் 67 வீதம் அதிகமாகவே உள்ளது.

புகைத்தல் மற்றும் மது அருந்தல் காரணமாக இதயக்கோளாறை எதிர் கொண்டுள்ளவர்களுக்கு வேலை நேரத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மேலதிக ஆபத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம், என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் மிகா கிவிமகி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2.6 மில்லியன் பேர் உள்ளனர். பிரிட்டனில் ஆகக் கூடுதலான மரணங்களுக்குக் காரணமான நோயும் இதுவே.மாரடைப்பு உட்பட இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வருடாந்தம் 101000 பேர் பலியாகின்றனர்.

0 comments:

Post a Comment