Tuesday, April 26, 2011

ஏமன் அதிபரை எதிர்த்து ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச்சூடு


ஏமனில், அதிபர் சலே பதவி விலகக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் காயமடைந்தனர். "சலே பதவி விலகும் வரை ஓயப் போவதில்லை' என, மக்கள் அறிவித்துள்ளனர்.
ஏமனில், அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகுவது குறித்து, வளைகுடா கூட்டுறவு கவுன்சில் முன்வைத்த சில ஆலோசனைகளை, சலே ஏற்றுக் கொண்டார். அதன்படி, அவர் இன்னும், 30 நாட்களில் பதவி விலக வேண்டும். தொடர்ந்து, அவரது கட்சி உறுப்பினர்கள், 50 சதவீதம் பேர், ஏழு கட்சிக் கூட்டணி உறுப்பினர்கள், 40 சதவீதம் பேர், பிற உதிரிக் கட்சிகள், 10 சதவீதம் பேர் என, ஒரு கலவை அரசு அமைக்கப்பட வேண்டும். சலே, இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதாக, கடந்த 23ம் தேதி அறிவித்தார். எதிர்க்கட்சிகளும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், தங்கள் முடிவை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில், சலே உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி, மக்கள், பல நகரங்களிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, டாயிஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில், "ஓய்வில்லை; தாமதம் இல்லை' என, மக்கள் கோஷம் இட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment